தனி அணி.. ஓபிஎஸ், டிடிவி தினகரன் மட்டும்தானா? மலேசியாவில் கூட்டணியை உறுதி செய்த விஜய்!

By Yogeshwaran Moorthi

சென்னை: ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தவெக கூட்டணி தொடர்பாக விஜய் சூசகமாக பேசி இருக்கிறார். நான் எப்போது தனியாக வந்திருக்கிறோம் என்று கேள்வி எழுப்பிய விஜய், 33 ஆண்டுகளாகவே அணியாகத் தானே வந்திருக்கிறோம் என்று கூறியுள்ளார். இதனால் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் கூட்டணி அமைப்பது உறுதி என்ற பேச்சுகள் தொடங்கி இருக்கின்றன.

நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. புக்கிட் ஜலீல் மைதானத்தில் நடைபெற்ற ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன், பூஜா ஹெக்டே, மமீதா பைஜு, பாபி டியோல், பிரியாமணி, நரேன், ஆண்ட்ரியா, பிரபுதேவா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.


jana nayagan vijay malayasia

இந்த விழாவில் மலேசியா காவல்துறை அரசியல் பேசக் கூடாது என்ற விதியை விதித்திருந்தது. ஆனால் விஜய் பேசுகையில், வாழ்க்கையில் முன்னேற நண்பர்களை விட வலுவான எதிரிகள் வேண்டும். சும்மா வருவோர் போவோரை எல்லாம் எதிர்க்க முடியாது. வலுவானவரை எதிர்க்கும் போதுதான் ஜெயிக்கிற அளவு வலு நமக்குவரும். விஜய் தனியா வருவாரா அணியா வருவாரா என்று அடிக்கடி கேட்கிறார்கள்.

நாம் எப்போது தனியாக வந்தோம். 33 ஆண்டுகளாக உங்களோடு தானே இருந்திருக்கிறேன். எனவே நாம் ஒரு மிகப்பெரிய அணி தானே? இப்போது கூட வெளிப்படையாக எதுவும் சொல்ல மாட்டேன் என்கிறாரே என்ற கேள்வி எழலாம். சஸ்பென்ஸ் என்று ஒன்று இருந்தால் தானே கிக் இருக்கும். இதையெல்லாம் கைத்தட்டலுக்காக சொல்லவில்லை. மக்களுக்காகவே பேசுகிறேன். செய்வதை மட்டுமே சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

விஜய்யின் இந்த பேச்சு பல்வேறு விவாதங்களை தொடங்கி வைத்துள்ளது. இதன் மூலமாக 2026 சட்டசபைத் தேர்தலில் தவெக தலைமையில் ஒரு கூட்டணி உருவாகும் என்று விஜய் பேசி இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவது உண்மைதான் என்று செங்கோட்டையன் ஒப்புக் கொண்டிருந்தார்.

அதனால் இந்த கட்சிகள் தவெக தலைமையில் போட்டியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இன்னொரு பக்கம் இஸ்லாமிய கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று விஜய் விரும்புவதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகளை செங்கோட்டையன் மற்றும் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் மேற்கொண்டு வருவதாக விவரம் அறிந்தவர்கள் சொல்லுகின்றனர்.

இதனால் தவெக தலைவர் விஜய் தலைமையில் வலுவான 3வது அணி அமையலாம் என்று கருதப்படுகிறது. வலுவான 3வது அணி அமையும் பட்சத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி, தோல்வியை 100, 200 வாக்குகள் கூட தீர்மானிக்கும் சூழல் உருவாகும். இதனால் தமிழக அரசியல் களம் மீண்டும் 2016 சட்டசபைத் தேர்தல் களம் போன்ற சூழலில் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

Credit: Oneindia

Desktop Bottom Promotion