தொடர்ந்து பெய்யும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?

By Yogeshwaran Moorthi

சென்னை: தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை உட்பட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. நாகை, ராமநாதபுரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


Cyclone Ditwah Weather Chennai Rains

இதையடுத்து டிட்வா புயல் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து சென்னையையொட்டிய கடல் பகுதியில் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. ஆனாலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கி இருக்கிறது.

அதனை மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றினாலும், மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். ராணிப்பேட்டையில் அரக்கோணம், நெமிலி வட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் குழந்தைகளை பாதுகாப்புடன் வீட்டிலேயே வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னையில் இன்று நடக்கவிருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து இன்று நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Credit: Oneindia

Desktop Bottom Promotion