ராஜ்ய சபா சீட் கொடுத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை.. அதிமுகவிடம் பிரேமலதா விஜயகாந்த் வைத்த டிமாண்ட்!

By Yogeshwaran Moorthi

சென்னை: ராஜ்ய சபா சீட்டை முன்கூட்டியே கொடுத்தால் மட்டுமே அதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் டிமாண்ட் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல் திமுக தரப்பில் ராஜ்ய சபா சீட் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜக மட்டுமே இதுவரை இணைந்துள்ளது. ஜிகே வாசன், கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், ஏசி சண்முகம் உள்ளிட்டோர் என்டிஏ கூட்டணியை உறுதி செய்திருந்தாலும், பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளை கொண்டு வர வேண்டும் என்று பாஜக தீவிரமாக இருக்கிறது.


DMDK Alliance

அன்புமணி தரப்பு பாமகவுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும், அவரின் டிமாண்ட் மிகப்பெரிய அளவில் இருப்பதால், கூட்டணி அடுத்தக் கட்டத்திற்கு நகராமல் இருக்கிறது. இன்னொரு பக்கம் தேமுதிக தங்களுக்கு பாமகவுக்கு நிகரான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. அதேபோல் அதிமுக தரப்பில் அளிக்கப்பட்ட ராஜ்ய சபா உத்தரவாதத்தையும் கிளறி வருகின்றனர்.

இதனிடையே திமுக தரப்பில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அப்போது தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் கொடுக்கப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். அதேபோல் மரியாதையான தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் திமுக தலைமை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் தேமுதிக பேச்சுவார்த்தையில் உள்ளது. அக்கட்சியின் பொருளாளர் சுதீஷ் விஜயகாந்த் குருபூஜை விழாவில் பங்கேற்க திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் இன்னொரு பக்கம் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தேமுதிக நிர்வாகிகளை சந்திக்காதது பேசுபொருளாகி இருக்கிறது.

பியூஷ் கோயல் வருகைக்கு முன்னதாக தேமுதிக நிர்வாகிகளை பாஜகவினர் சந்தித்திருக்கின்றனர். அப்போது பிரேமலதா விஜயகாந்த் முக்கிய டிமாண்ட் ஒன்றை முன் வைத்துள்ளார். அதாவது, ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக கூறி அதிமுக ஏமாற்றிவிட்டது. ஆனால் திமுக தரப்பில் ராஜ்ய சபா சீட் உறுதி கொடுத்துள்ளார்கள். ஒருவேளை அதிமுகவும் ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக கூறினால், முன் கூட்டியே கொடுக்க வேண்டும்.

அதன்பின்னரே நாங்கள் மற்ற விவரங்களை பேச முடியும் என்று தெரிவித்துள்ளார். பிரேமலதா விஜயகாந்தின் பதிலால பாஜகவும் கொஞ்சம் ஆடிப் போயிருக்கிறது. ஏனென்றால் லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக, விருதுநகர் தொகுதியில் சிறிய வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. விஜயகாந்த் செண்டிமெண்ட் களத்தில் செயல்படுவதால், தேமுதிகவின் டிமாண்ட் அதிகரித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

Credit: Oneindia

Desktop Bottom Promotion