முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார்.. சோகத்தில் திரையுலகம்!

By Yogeshwaran Moorthi

சென்னை: இந்திய சினிமாவின் முதுபெரும் தயாரிப்பாளரான ஏவிஎம் சரவணன் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு 86 வயதாகிறது. இறுதி மரியாதைக்காக ஏவிஎம் சரவணனின் உடல் ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள 3வது தளத்தில் இன்று காலை 7.30 மணி முதல் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் மிக முக்கியமானது ஏவிஎம் நிறுவனம். தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான ஏவி மெய்யப்ப செட்டியரால் தொடங்கப்பட்ட நிறுவனமாகும். சம்சாரம் அது மின்சாரம், சிவாஜி, அயன், வேட்டைக்காரன், லீடர், திருப்பதி, ஜெமினி, எஜமான், மின்சார கனவு, ராஜா சின்ன ரோஜா, மனிதன் என்று ஏராளமான படகளை தயாரித்துள்ளது.


AVM Saravanan AVM Productions

ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு பின் அந்த நிறுவனத்தை ஏவிஎம் சரவணன் நிர்வகித்து வந்தார். இவரின் காலத்தில் ஏவிஎம் நிறுவனம் அடுத்தக் கட்ட வளர்ச்சியை எட்டியது என்று சொல்லலாம். சிவாஜி படத்தை மிகப்பெரிய முதலீட்டில் தயாரித்து, தமிழ் சினிமாவுக்கு சர்வதேச சினிமாவின் கதவுகளை திறந்துவிட்டவர்.

வெள்ளை உடை, நெற்றியில் குங்குமம், கனிவான பேச்சு ஆகியவையே ஏவிஎம் சரவணின் அடையாளம் என்று சொல்லலாம். யாருடன் பேசினாலும் கைகளை கட்டிக் கொண்டு தன்னடக்கத்துடன் அமைதியாக உரையாடும் சுபாவம் கொண்டவர். இதன் காரணமாகவே ஏவிஎம் நிறுவனம் மீது நடிகர்களுக்கும், ரசிகர்களுக்கும் மிகப்பெரிய மரியாதை உண்டாகியது.

ஏவிஎம் நிறுவனத்தின் படங்கள் என்றால் நம்பி திரையரங்கிற்கு செல்லலாம் என்ற நிலையை உருவாக்கியவர் சரவணன். அதேபோல் தமிழ் சினிமாவில் குறைந்து வரும் குடும்ப படங்களுக்கும், அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். 2014ஆம் ஆண்டுக்கு பின் ஏவிஎம் நிறுவனம் தங்களின் சினிமா தயாரிப்பு பணிகளை நிறுத்திக் கொண்டது.

கடந்த சில ஆண்டுகளாக ஏவிஎம் சரவணன் உடல்நிலை குறைவு ஏற்பட்டு அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை 5.30 மணியளவில் காலமானார். 86 வயதாகும் ஏவிஎம் சரவணன் வயது மூப்பு காரணமாக காலமானார். இவரது உடல் இறுதி மரியாதைக்காக ஏஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள 3வது தளத்தில் இன்று காலை 7.30 மணி முதல் வைக்கப்பட்டுள்ளது. இவரின் மறைவு, தமிழ் சினிமா நடிகர்கள், ரசிகர்கள் என்று அனைவர் மத்தியிலும் சோகத்த்தை ஏற்படுத்தியுள்ளது.

Credit: Oneindia

Desktop Bottom Promotion