ஓபிஎஸ்ஸை விட்டு விலகியது ஏன்? திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் சொன்ன பதில்!

By Vignesh Selvaraj

சென்னை: எம்.எல்.ஏ பதவியை ராஜினானா செய்த வைத்திலிங்கம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். "நான் அதிமுகவில் இருந்து விலகி, அண்ணா தொடங்கிய தாய் கழகத்தில் நான் இணைந்துள்ளேன்." என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வருகிறார். இதில் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த தஞ்சை ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏ வைத்திலிங்கம் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.


After Resigning as MLA Vaithilingam Joins DMK Calls It Anna s Mother Party speaks about OPS

அதைத்தொடர்ந்து இவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். வைத்திலிங்கத்துடன் அவரது மகன் பிரபுவும் திமுகவில் இணைந்துள்ளார். வைத்திலிங்கம் இதுவரை 4 முறை ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர், முன்னாள் அமைச்சராகவும் இருந்துள்ளார்.

ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்த வைத்திலிங்கம், அதிமுக பிளவுபட்டபோது, சசிகலாவுடன் பயணித்தார். பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வந்த பின்னர் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டார். ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் ஒருங்கிணைய வேண்டும் என்று முயற்சி எடுத்து அவர்களை ஒன்றிணைத்தார். அதன் பின்னர், மீண்டும் அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை வந்த பிறகு, எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக நின்றார்.

ஓபிஎஸ் அதிமுகவில் மீண்டும் இணைய மேற்கொண்ட முயற்சிகள் பலிக்காத நிலையில் தான் அண்மையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்த மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார். இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு பக்க பலமாக இருந்த வைத்திலிங்கமும் தற்போது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்துள்ளார்.

சமீபத்தில், ஓபிஎஸ் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் ஆகியோர் திமுகவில் இணைந்துள்ளனர். மேலும், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ குன்னம் ராஜேந்திரன் ஆகியோரும் இன்று திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வைத்திலிங்கம், "நான் அதிமுகவில் இருந்து விலகி, அண்ணா தொடங்கிய தாய் கழகத்தில் நான் இணைந்துள்ளேன். முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பாட்டை தமிழ்நாட்டு மக்கள் போற்றுகிறார்கள், புகழ்கிறார்கள் என்றால், எல்லோரின் தேவைகளையும் நிறைவேற்றி தமிழ்நாட்டு மக்களின் மனதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். திமுகதான் தமிழ்நாடு, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடுகிறது. அதிமுக சர்வாதிகாரமாகச் செயல்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.

ஓபிஎஸ்ஸை விட்டு விலகியது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்த வைத்திலிங்கம், "தேர்தல் விரைவில் வர இருக்கிறது. முடிவு சீக்கிரமாக வர இருக்கிறது, அதற்கு கால தாமதமாகி வந்ததால் நான் திமுகவில் இணைந்துள்ளேன். திராவிட இயக்கம், இதுதான் தாய்க் கழகம். இன்னும் பலர் வருகிறார்கள். 26 ஆம் தேதி தஞ்சையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இணைப்பு விழா நடக்க உள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.

Credit: Oneindia

Desktop Bottom Promotion