உலகையே ஆட்டி படைத்த ஹிட்லர் அதிர்ஷ்டத்தின் சின்னமான ஸ்வஸ்திகாவை ஏன் அழிவின் சின்னமாக தேர்ந்தெடுத்தார் தெரியுமா

உலக வரலாற்றில் ஹிட்லரின் தாக்கம் என்பது தவிர்க்க முடியாதது. யூத இன அழிப்பு முதல் இரண்டாம் உலகப்போரின் தொடக்கப் புள்ளியாக இருந்தது வரை ஹிட்லரால் உலக அரசியலில் ஏற்பட்ட தாக்கங்கள் இன்றுவரை தொடர்கிறது. ஜெர்மனியின் சர்வாதிகாரி தனது கட்சியின் சின்னமாக தேர்ந்தெடுத்தது இன்று பெரும்பாலான வீடுகளில் அதிர்ஷ்டத்தின் சின்னமாக பயன்படுத்தப்படும் ஸ்வஸ்திக் சின்னத்தைதான்.

இரண்டாம் உலகப்போரில் உலகத்தையே அச்சுறுத்திய இந்த சின்னம் ஹிட்லரால் உருவாக்கப்பட்டது இல்லை. அவர் இந்த சின்னத்தை தேர்ந்தெடுப்பதற்கு முன்னரே இந்த சின்னத்தின் பயன்பாடு வழக்கத்தில் இருந்தது. இந்த சின்னத்தின் கதை நீங்கள் எதிர்பார்ப்பதை விட நீண்டது மற்றும் சிக்கலானது. உலகில் கோடிக்கணக்கான சின்னங்கள் இருக்கும்போது ஹிட்லர் ஏன் இதை தேர்ந்தெடுத்தார் மற்றும் அதன் தோற்றத்திற்கு பின்னால் உள்ள கதை என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Why Did Hitler Choose the Swastika As a Nazi Symbol in Tamil

ஹிட்லர் ஏன் ஸ்வஸ்திகாவைத் தேர்ந்தெடுத்தார்?

அடால்ஃப் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்த பிறகு, தனது இயக்கம், நாஜி கட்சி மற்றும் ஜெர்மனிக்கு வலுவான எதிர்காலத்தை உள்ளடக்கிய ஒரு சின்னத்தைத் தேடியபோது, ​​ஸ்வஸ்திகா அதற்கு சரியான தேர்வாக இருந்தது.

கிரேக்க புராணங்களின் தொலைந்து போன நகரமான ட்ராய் நகரைக் கண்டுபிடிப்பதில் ஜெர்மன் பழங்கால வியாபாரி ஹென்ரிச் ஷ்லிமேன் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். 1868 ஆம் ஆண்டில், மத்தியதரைக் கடலில் தேடுவதற்காக புறப்பட்டார். ஷ்லிமேனின் தேடல் அவரை துருக்கியின் ஏஜியன் கடற்கரையில் உள்ள ஹிசார்லிக் என்ற மர்மமான இடத்திற்கு அழைத்துச் சென்றது.

1870-களில், ஷ்லிமேன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகங்களின் அடுக்குகளைக் கண்டுபிடித்து, அவற்றில் மிகப் பழமையானது ட்ராய் என்று அறிவித்தார். இருப்பினும் அது ஷ்லிமேன் நினைத்ததை விட மாறுபட்ட இடமாக அது இருந்தது, அத்துடன் நகைகள், வெண்கலம், வெள்ளி மற்றும் தங்கம் ஆகியவற்றின் பெட்டகமும் இருந்தது. பண்டைய இடிபாடுகளில் அவர் மற்றொரு துரதிர்ஷ்டவசமான கண்டுபிடிப்பைச் செய்தார், வளைந்த கைகளுடன் சிலுவையை ஒத்த ஒரு சின்னத்தின் சுமார் 1,800 சித்தரிப்புகள் இருந்தது. அதுதான் ஸ்வஸ்திக் சின்னம்.

ஷ்லிமானின் பரபரப்பான அகழ்வாராய்ச்சிகள் பற்றிய செய்திகள் வேகமாக பரவத் தொடங்கியது, அதைத் தொடர்ந்து ஸ்வஸ்திகா சின்னம் பற்றிய செய்தி விரைவில் பரவியது, இது ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா முழுவதும் பல இடங்களில் காணக்கூடிய அடையாளமாக மாறியது.

அதே நேரத்தில், ஸ்வஸ்திகாவின் நீண்ட வரலாறு ஜெர்மன் தேசியவாதிகளின் விருப்பமாக மாறியது, அவர்கள் ஆரியர்கள் என்று அழைக்கப்படும் ஒரு பண்டைய 'தலைமை இனத்திலிருந்து' வந்தவர்கள் என்ற ஒரு சிதைந்த கோட்பாட்டை ஏற்றுக்கொண்டனர்.

இந்த நம்பிக்கை 20 ஆம் நூற்றாண்டு வரை நீடித்தது, வளர்ந்து வரும் நாஜி கட்சியின் தலைவராக இருந்த அடால்ஃப் ஹிட்லரை அந்த சின்னம் ஈர்த்தது. ஹிட்லர் அந்த சின்னத்தின் சக்தியைப் புரிந்துகொண்டார், மேலும் அது நாஜி கொள்கைகளுக்கு ஒரு வரலாற்று அடித்தளத்தை வழங்கும் என்று நம்பினார்.

ஸ்வஸ்திகா என்றால் என்ன?

கைகளை செங்கோணத்தில் வளைத்து வைத்திருக்கும் இந்த சின்னம் ஒவ்வொருவருக்கும் பல விஷயங்களைக் குறிக்கிறது, ஆனால் அது எப்போதும் நம்பிக்கை மற்றும் நேர்மறையின் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டது. இது அதிர்ஷ்டம் அல்லது செழிப்பைக் குறிக்கலாம்,சூரியனை அல்லது படைப்பின் முடிவிலியை அடையாளப்படுத்தலாம்.ஸ்வஸ்திகா என்ற வார்த்தையே சமஸ்கிருத ஸ்வஸ்திகாவிலிருந்து உருவானது, அதன் அர்த்தம் "நல்வாழ்வுக்கு உகந்தது" என்பதாகும்.

எப்படி நாஜிக்களின் சின்னமாக மாறியது?

நாஜிகளால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பே, ஸ்வஸ்திகா மேற்கத்திய நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. உண்மையில், அது ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் ஒரு கவர்ச்சியான சின்னமாகப் பயன்படுத்தப்பட்ட ஸ்வஸ்திகா, கோகோ கோலா மற்றும் கார்ல்ஸ்பெர்க் போன்ற நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டது, அதே நேரத்தில் கேர்ள்ஸ் கிளப் ஆஃப் அமெரிக்கா அதன் பத்திரிகையை "ஸ்வஸ்திகா" என்று அழைத்தது.

நாஜிக்களுடனான ஸ்வஸ்திகாவின் தொடர்பு, முதல் உலகப் போருக்குப் பிறகு ஒரு "உயர்ந்த" இன அடையாளத்தை ஒன்றாக இணைக்க பாடுபட்ட ஜெர்மன் தேசியவாதத்திலிருந்து உருவாகிறது. இந்த அடையாளம் ஒரு ஆரிய உயர் இனத்திற்குச் சொந்தமான ஒரு பகிரப்பட்ட கிரேக்க-ஜெர்மன் பரம்பரை என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஜெர்மன் எழுத்தாளர் எர்ன்ஸ்ட் லுட்விக் க்ராஸ்ட் 1891 ஆம் ஆண்டில் ஜெர்மன் வோல்கிஷ் தேசியவாதத்தின் அரசியல் அரங்கில் ஸ்வஸ்திகாவைக் கொண்டு வந்தார், மேலும் அதை ஹெலனிக் மற்றும் வேத விஷயங்களுடனும் தொடர்புபடுத்தினார்.

ஹிட்லர் நாஜி இயக்கத்திற்கான சின்னமாக ஸ்வஸ்திகாவைத் தேர்ந்தெடுத்தார் என்பது பரவலாக ஒப்புக் கொள்ளப்படுகிறது, ஆனால் அந்த முடிவை யாருடைய தூண்டுதலால் அவர் எடுத்தார் என்பது உறுதியாகத் தெரியவில்லை. 1920 ஆம் ஆண்டு கோடையில், இந்த சின்னம் ஹிட்லரின் நாஜி கட்சியான நாசியோனல்-சோசலிச டாய்ச் அர்பீட்டர்பார்டேயின்(Nazional-socialistische Deutsche Arbeiterpartei) அதிகாரப்பூர்வ சின்னமாக பொதுவாகப் பயன்படுத்தப்பட்டது.

இந்த சின்னத்தின் பயன்பாடு ஹிட்லரின் சித்தாந்தத் திட்டத்தின் மையமாக இருந்தது. இந்த இனரீதியாகப் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தால் உந்தப்பட்டு, நாஜிக்கள் ஜெர்மனியில் ஒரு நச்சு தேசியவாத சூழலைத் தூண்டிவிட்டனர், இதன் மூலம் ஸ்வஸ்திகாவை இன வெறுப்பின் அடையாளமாக பயன்படுத்தினர். ஒரு சின்னத்தை மக்களை பிரிக்கும் ஆயுதமாக எப்படி மாற்றலாம் என்பதற்கு தற்போதைய மதவாதிகளுக்கு முன்னோடியாக நாஜிக்கள் விளங்கினர்.

Story first published: Monday, April 7, 2025, 16:51 [IST]
Desktop Bottom Promotion