அக்னி நட்சத்திரம் 2024 எப்போது? எத்தனை நாள் இருக்கு? என்ன செய்யணும் செய்யக்கூடாது..? முழு விவரம் இதோ..!

அக்னி நட்சத்திரம் இந்த ஆண்டு வரும் மே மாதம் 4ம் தேதி தொடங்கி வரும் மே 28ம் தேதி வரை இருக்கும். இந்த காலக்கட்டத்தில் வெயில் கடுமையாக இருக்கும். அக்னி வெயில் மண்டையை பிளக்கும். அக்னி நட்சத்திர காலங்களில் என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்பது குறித்து இங்கே காணலாம்.

வழக்கமாக தமிழ்நாட்டில் கோடை காலம் என்றாலே வெயில் சுட்டெரிக்கும். அதுவும் அக்னி நட்சத்திர காலத்தில் தமிழ்நாட்டில் வெயில் மிக கடுமையாக வாட்டி வதைக்கும். அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே மாதம் 4-ம் தேதி தொடங்கி 28-ம் தேதியுடன் முடிவடைகிறது.

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறைதான் நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும் யோசிப்போம். பஞ்சாங்கத்தில் பரணி 3 ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தைதான் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படுகிறது.

ஜோதிடம் மற்றும் பஞ்சாங்கத்தின்படி, பரணி நட்சத்திரம் தொடங்கி கிருத்திகை நட்சத்திரம் வரை சூரியனின் பயணிக்கும் காலமே அக்னி நட்சத்திரம் என்றும் கத்தரி வெயில் எனவும் அழைக்கப்படுகிறது. ஆனால், மே மாதத்தில் வெயில் அதிகமாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் வெப்பநிலை அதிகரிப்பது குறித்து வானிலை ஆய்வு மையம் கண்காணிக்கிறது.

when is agni natchathiram 2024 kathiri veyil start and end date 2024

ஜோதிடம் என்ன சொல்லுகிறது?

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 21ஆம் தேதி தொடங்கி வைகாசி மாதம் 14ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரம் நடக்கிறது. ஜோதிடத்தின் கணிப்பின் படி சூரிய பகவான் சித்திரை மாதம் மேஷம் ராசியில் நுழைகிறார். அதன் காரணமாகவே சூரியனின் கதிர்கள் நம்மைச் சுட்டெரிக்கிறது. பொதுவாக கார்த்திகை நட்சத்திரம் அக்னி நட்சத்திரத்தின் சக்தியைக் கொண்டது. கார்த்திகை நட்சத்திரத்தின் தேவதையாக விளங்கும் அக்னி தேவன் இந்த காலகட்டத்தில் வெப்பத்தைக் கக்குவதால் இது அக்னி நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது.

தோஷ காலம்

மே 4ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடக்கும் அக்னி நட்சத்திரம் படிப்படியாகக் குறையத் தொடங்கும். இந்த அக்னி நட்சத்திர தோஷ காலம் முடிந்த பிறகு அனைத்து கோயில்களிலும் சிறப்புப் பூஜைகளும், வழிபாடுகளும் நடக்கும். இதை அக்னி கழிவு என்று கொண்டாடுவார்கள். அதேபோல் கிராமப் பகுதிகளில் அம்மன் கோயில்களில் கொடை விழா என்று கொண்டாடப்படுகிறது.

சுப காரியங்கள் செய்யலாமா?

இந்த காலங்களில் சுப நிகழ்ச்சிகள் செய்யலாமா எனப் பலருக்கும் சந்தேகம் எழுவது உண்டு. இந்த அக்னி நட்சத்திர காலத்தில் நிச்சயதார்த்தம், பெண் பார்த்தல், சீமந்தம், திருமணம் போன்ற காரியங்கள் செய்யலாம் அதில் எந்த சிக்கலும் ஏற்படாது. சுப நிகழ்ச்சிகள் குறித்து பேச்சு வார்த்தையும் நடத்தலாம், அதற்கான ஏற்பாடுகளும் செய்யலாம்.

செய்யக்கூடாதவை

இந்த அக்னி நட்சத்திர காலத்தில் புது வீடு குடி புகுதல், பால் காய்ச்சுதல், பூமி பூஜை செய்தால், காது குத்துதல், முடி இறக்குதல், மரம் வெட்டுதல், கிணறு வெட்டுதல், விதை விதைத்தல், உள்ளிட்ட செயல்களைச் செய்யக்கூடாது. அதேபோல் நிலம் மற்றும் வீடுகளில் பராமரிப்பு பணிகள் செய்யக்கூடாது. மேலும் வாகனங்களில் நெடுந்தூர பயணம் செய்யக்கூடாது.

வெயிலில் இருந்து தப்பிக்க சில டிப்ஸ்

மதிய நேரத்தில் (12.00P.M-3.00P.M ) வெளியில் செல்வதைத் தவிர்க்கவும். அவசியம் இல்லையெனில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தாகம் எடுக்கவில்லை என்றாலும் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை பழக்கமாக்கி கொள்ளுங்கள். அதிக உடலுழைப்பு தேவைப்படும் வேலைகளை மதிய நேரங்களில் செய்வதைத் தவிருங்கள். வெளியே செல்லும்போது எப்போதும் ஒரு பாட்டிலில் தண்ணீர் எடுத்துச்செல்வதை பழக்கமாக்கி கொள்ளவும். குளிர்பானங்கள், தேநீர், காபி, மது போன்றவற்றை குடிப்பதை தவிர்க்கவும்.

உடல் சோர்வுற்றலோ அல்லது காய்ச்சல் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுகவும். மோர், எலுமிச்சை தண்ணீர் போன்ற வீட்டில் செய்யும் பானங்களைப் பருக வேண்டும். அதிகம் சர்க்கரை உள்ள குளிர்பானங்கள் வேண்டாம். பருத்தி ஆடைகளை அணியலாம். காற்றோட்டமான உடைகள் அணிவது நல்லது. காலை, இரவு என இரண்டு வேளையும் குளிக்கலாம். அதிகம் ரசாயனம் கலந்த சோப்களை பயன்படுத்த வேண்டாம். இயற்கையான கடலை மாவு, பயித்த மாவு வகைகளை குளிக்க பயன்படுத்தலாம்.

Story first published: Friday, April 26, 2024, 17:30 [IST]
Desktop Bottom Promotion