ஆங்கிலேய ஆட்சியால் இந்தியாவிற்கு நடந்த 7 நல்ல விஷயங்கள் இதுதான்...இதெல்லாம் இல்லனா இந்தியா என்னவாகியிருக்கும்?

இந்தியாவின் வரலாற்றை பிரிட்டிஷ் வருகைக்கு முன் மற்றும் பிரிட்டிஷ் வருகைக்கு பின் என இரண்டாக குறிக்கலாம். பிரிட்டிஷ் வருகைக்கு முன் இந்தியா பல்வேறு இராஜ்ஜியங்களாக பிரிந்திருந்தாலும் உலகின் வலிமை வாய்ந்த பிராந்தியமாக இந்தியாவும், அதனை சுற்றியிருந்த பகுதிகளும் விளங்கியது.

வாஸ்கோடகாமாவின் வெற்றிகரமாக இந்தியாவிற்கு ஒரு புத்தம் புதிய கடல் பாதையை கண்டுபிடித்த போது, இந்தியாவின் வரலாறு மாறத்தொடங்கியது. போர்த்துகீசியர்கள் டாமன், டையூ, கோவா மற்றும் பம்பாய் ஆகிய இடங்களில் வர்த்தக நிலையங்களை நிறுவினர். அவர்கள் வந்த பிறகு விரைவில் டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் மற்றும் இறுதியாக பிரெஞ்சுக்காரர்களும் இந்தியா வந்தனர். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் வருகை மற்றும் 1757 இல் பிளாசிப் போரில், முகலாய வம்சத்தின் வீழ்ச்சி இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சியை உறுதிப்படுத்தியது.

What Are The Good Things The British to India in Tamil

1857 ஆம் ஆண்டின் சிப்பாய் கலகம் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திற்கு எதிரான முதல் முக்கிய இயக்கமாகத் தோன்றுகிறது. பிரிட்டிஷ் அரசாங்கம் கிழக்கு இந்திய நிறுவனத்திடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றியது, படிப்படியாக இந்தியாவை ஒரு காலனியாக மாற்றியது. 1885 ஆம் ஆண்டு பம்பாயில் இந்திய தேசிய காங்கிரஸ் பிறந்தது, அது இந்தியாவின் சுதந்திரத்தில் பெரும் பங்கைக் கொண்டிருந்தது.

1905 இல் லார்ட் கர்சனின் பிளவு கொள்கை வங்காளப் பிரிவினைக்கு வழிவகுத்தது, இது இந்திய சமூகத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. 1920 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக பெரும்பாலான இயக்கங்களைத் தொடங்கிய மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்களுடன் இந்திய சுதந்திரத்திற்கான போராட்டங்கள் தொடங்கியது.

ஆங்கிலேயர்களின் முக்கிய நோக்கம் இந்தியாவை ஆள்வதும், நாட்டிலிருந்தும் அதன் மக்களிடமிருந்தும் முடிந்தவரை செல்வத்தை சுரண்டுவதுமாகும். ஆங்கிலேயர்கள் இந்திய கலாச்சாரத்திற்கு தீங்கிழைத்தார்கள், இந்திய பொருளாதாரத்தை சுரண்டினார்கள், நாட்டை கொள்ளையடித்தார்கள் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள், இது முற்றிலும் உண்மை, இருப்பினும் அவர்களால் சில நல்ல விஷயங்களும் இந்தியாவிற்கு நிகழ்ந்தது.

இந்த நல்ல விஷயங்கள் அவர்களின் சுயநலத்திற்காக மட்டுமே செய்யப்பட்டதாக கூட இருக்கலாம், ஆனால் இந்த விஷயங்கள் தேசத்தில் சாதகமான விளைவை ஏற்படுத்தியதை யாரும் மறுக்க முடியாது. இந்த பதிவில் பிரிட்டிஷாரால் இந்தியாவில் நிகழந்த சில நல்ல மாற்றங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஆங்கிலம்

ஆங்கிலேயர்கள் இந்தியர்களுக்கு ஆங்கிலம் கற்பித்ததற்குக் காரணம் நிர்வாக வசதிக்காகத்தான். இருப்பினும் இது பிராந்திய மொழிகளின் பிரபலத்தை பாதித்தது. ஆனால் ஆங்கில மொழி நமக்கு உலகின் கதவுகளைத் திறந்தது. நமது அறிவு மற்றும் சிந்தனை செயல்முறையை மேம்படுத்துவதற்கு இந்த மொழி உதவியது, உலகின் மிகவும் பிரபலமான இலக்கியப் படைப்புகளில் சிலவற்றைப் படித்து நம்மால் உலகை அறிந்து கொள்ள முடிந்ததற்கு ஆங்கிலமே முக்கிய காரணம்.

இந்திய ரயில்வே

உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்குகளில் ஒன்றான இந்திய ரயில்வேயின் அடித்தளம் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. பெரும்பாலான மத்திய ரயில் நிலையங்கள் பிரிட்டிஷ் உள்கட்டமைப்பின் பகுதியாகும். இந்திய இரயில்வே மிகவும் பெரியது மற்றும் சிக்கலானது, இது நாட்டின் பல தொலைதூர பகுதிகளை இணைக்கிறது, இந்தியர்களின் போக்குவரத்துக்கான முதன்மை வடிவமாக இது இருக்கிறது.

இராணுவம்

நமது தேசத்தின் பெருமையும், அடையாளமுமான இந்திய ராணுவம், ஆங்கிலேயர் காலத்தில் உருவானது. தெரிந்தோ, தெரியாமலோ இந்திய இராணுவம் உருவாக காரணமாக இருந்தது ஆங்கிலேயர்கள்தான். இன்றும் கடைபிடிக்கப்படும் கலாச்சாரம், ஒழுக்கம், இன்னும் பல ராணுவ நடைமுறைகள் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவை.

தடுப்பூசி

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், பெரியம்மை இந்தியாவில் ஒரு பெரும் தொற்றுநோயாக பரவியது, மேலும் இந்தியர்களிடையே சுகாதார விழிப்புணர்வு இல்லாததால், நிலைமை விரைவாக அதிகரிக்கக்கூடும் என்பதை ஆங்கிலேயர்கள் அறிந்திருந்தனர். பெரியம்மை நோயைத் தடுப்பதற்காக 1892 இல் இந்தியாவில் இயற்றப்பட்ட கட்டாய தடுப்பூசிச் சட்டத்தை அவர்கள் நிறைவேற்றினர். மருந்தகங்களை அமைப்பதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்த பல்வேறு பிராந்தியங்களில் 'துப்புரவு ஆணையர்'களையும் அவர்கள் அமைத்தனர்.

சமூக சீர்திருந்தங்கள்

சதி, குழந்தைத் திருமணம், தீண்டாமை போன்ற சமூக நடைமுறைகளை இந்தியாவில் அகற்றியதில் ஆங்கிலேயர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அவர்கள் இத்தகைய கொடூரமான மனிதாபிமானமற்ற நடைமுறைகளை தடை செய்தது மட்டுமல்லாமல், விதவை மறுமணத்தையும் ஊக்குவித்தார்கள். இத்தகைய சமூக நடைமுறைகளை ஒழிக்க ஆங்கிலேயர்கள் பல சட்டங்கள் மற்றும் சட்டங்களை இயற்றினர், ராஜா ராம் மோகன் ராய் போன்ற பல சமூக சீர்திருத்தவாதிகள் ஆங்கிலேயருக்கு இந்த விஷயத்தில் ஆதரவளித்தனர்.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு

ஆங்கிலேயர்கள் 1871 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடங்கினர், மக்கள்தொகையின் வயது, பாலினம், மதம், சாதி, தொழில், கல்வி ஆகியவற்றின் புள்ளிவிவரத் தரவுகளை சேகரிக்க 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு வரை, பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 15 முறை நடத்தப்பட்டுள்ளது.

புவியியல் ஆய்வு

ஆங்கிலேயர்கள் 1851 இல் இந்தியாவின் புவியியல் ஆய்வுத் துறையை நிறுவினர். இந்த நிறுவனம் கிராமங்கள், நகரங்கள் மற்றும் இந்தியாவின் வரைபடங்களை உருவாக்கியது. ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட வரைபடங்களையே இன்றும் பல இடங்களில் பயன்படுத்துகின்றனர். பல மேம்பட்ட ஆய்வுக் கருவிகளைப் பயன்படுத்தி, ஆங்கிலேயர்கள் இந்தியாவின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஆய்வு செய்து வரைபடங்களை உருவாக்கினர்.

Story first published: Tuesday, May 21, 2024, 13:44 [IST]
Desktop Bottom Promotion