இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத டாப் 10 மாநிலங்கள்... முதலிடத்தில் உள்ள மாநிலம் எது தெரியுமா?

Top 10 Indian States With Highest Crime Rate Against Women: ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது வெறும் பொருளாதாரத்தின் அடிப்படையில் மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை. அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத்தரம், பாதுகாப்பு மற்றும் மகிழ்ச்சியின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படக்கூடியது. அந்த வகையில் இந்தியா பொருளாதாரரீதியாக தொடர்ந்து முன்னேறினாலும் மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத்தரத்தின் அடிப்படையில் பின்தங்கியே உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் நடைபெறும் நாடுகளில் இந்தியா எப்போதும் முன்னணியில் உள்ளது.

பெண்களை தெய்வமாக வழிபடும் நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் இவ்வளவு குற்றங்கள் நடப்பது துரதிர்ஷ்டவசமானது. 28 மாநிலங்கள் உள்ள இந்தியாவில் சில மாநிலங்கள் பெண்களுக்கு ஓரளவு பாதுகாப்பும், நீதியும் வழங்கினாலும் சில மாநிலங்கள் பெண்கள் பாதுகாப்பில் மிகவும் மோசமான இடத்தில உள்ளன. இங்கு ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த பதிவில் எந்தெந்த மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

Top 10 Indian States With Highest Crime Rate Against Women

உத்தரப் பிரதேசம்

இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது உத்தரப் பிரதேசம். இங்குள்ள அதிக மக்கள் தொகை மற்றும் மோசமான சட்ட அமலாக்கத்தால், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரப் பிரதேசம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த காலங்களை விட ஓரளவு சட்ட ஒழுங்கு முன்னேறியிருந்தாலும் பாலியல் துன்புறுத்தல், குடும்ப வன்முறை மற்றும் ஆணவக்கொலை போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இங்கு தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இங்குள்ள சாதிய ஏற்றத்தாழ்வுகளும், மத மோதல்களும் மற்றும் அதிகாரிகளிடையே பொறுப்புணர்வு இல்லாதது நெருக்கடியை மேலும் ஆழமாக்குகிறது. 2019 ஆம் ஆண்டு அறிக்கையின் படி ஒரு நாளைக்கு 11 பாலியல் வழக்குகள் பதிவாகின. தற்போது அது மேலும் அதிகரித்திருக்கலாம்.

ராஜஸ்தான்

ராஜஸ்தானின் பிரமாண்டமான கோட்டைகளுக்கும், பாலைவனங்களுக்கும் பின்னால் பாரம்பரியமாக பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்ற வரலாறு மறைந்துள்ளது. குடும்ப வன்முறை, வரதட்சணை தொடர்பான மரணங்கள் மற்றும் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை வழக்குகளால் மாநிலம் போராடி வருகிறது. 2009-ல் 1519 பாலியல் வழக்குகள் பதிவான நிலையில் 2019-ல் 6000 பாலியல் வழக்குகள் பதிவாகின. ஒரு மாநிலம் பாதுகாப்பான மாநிலமாக இருக்க பாரம்பரியம் மட்டும் போதாது என்பதற்கு ராஜஸ்தான் சிறந்த உதாரணமாகும்.

Top 10 Indian States With Highest Crime Rate Against Women

மத்திய பிரதேசம்

மத்தியப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்ற விகிதங்கள் தொடர்ந்து அதிககரித்து வருகின்றன. குழந்தை திருமணம் முதல் கடத்தல் போன்ற கொடூரமான குற்றங்கள் வரை பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான குற்றங்களும் இங்கு அதிகமாக நடைபெறுகிறது. கலாச்சார மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் தேவைப்படும் சவால்களை மாநிலம் தொடர்ந்து எதிர்கொள்கிறது.

ஹரியானா

ஹரியானாவில் ஆழமாக வேரூன்றியுள்ள ஆணாதிக்கமும், பாலின விகிதமும் அதன் அதிகரித்த குற்ற விகிதங்களுக்கு காரணமாக உள்ளது. கௌரவக் கொலைகள் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை வழக்குகள் சமூக சீர்திருத்தம் மற்றும் வலுவான சட்ட ஒழுங்கின் அவசரத் தேவையை வலியுறுத்துகின்றன. 2009-ல் 603 வழக்குகள் பதிவான நிலையில் 2019-ல் இந்த வழக்குகளின் எண்ணிக்கை 1480 ஆக அதிகரித்தது.

பீகார்

பலவீனமான சட்ட அமலாக்கமும் மற்றும் சமூக அமைப்பின் காரணமாக பீகார் பெண்களுக்கு எதிரான குற்றங்களுடன் தொடர்ந்து போராடி வருகிறது. இங்கு பெண்களுக்கு எதிரான பல வழக்குகள் பதிவு செய்யப்படாமல் போகின்றன, மேலும் பாதிக்கப்பட்டவர்கள் அரிதாகவே நீதியைப் பெறுகிறார்கள். காவல்துறை மீதான நம்பிக்கை இங்கு மக்களுக்கு மிகவும் குறைவாகவே உள்ளது.

மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வீட்டு வன்முறை, கடத்தல் மற்றும் அமிலத் தாக்குதல்கள் பற்றிய அறிக்கைகள் அந்த மாநிலத்தை பெண்கள் வாழ பாதுகாப்பற்ற மாநிலமாக மாற்றுகிறது. மேற்கு வங்கத்திற்கென வளமான கலாச்சார வரலாறு இருந்தபோதிலும், மாநிலம் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க தொடர்ந்து போராடி வருகிறது.

அசாம்

அசாம் மாநிலம் பெண் குழந்தைகள் கடத்தல் மற்றும் பாலியல் வன்முறை உள்ளிட்ட தனித்துவமான சவால்களை எதிர்கொள்கிறது. எல்லை பிரச்சினைகள் மற்றும் போதுமான சட்ட அமலாக்கமின்மையால் இந்த குற்றங்கள் தொடர்ந்து அதிகரிக்கின்றன. பாலின சமத்துவமின்மையை நிலைநிறுத்தும் கலாச்சார நடைமுறைகள் இந்த பிரச்சினையை மேலும் அதிகரிக்கின்றன. NCRB அறிக்கையின் படி இங்கு ஒரு லட்சத்தில் 33 பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா நிதி மற்றும் கலாச்சாரரீதியாக முன்னேற்றத்தைக் கொண்டிருப்பதாக மேலோட்டமாக தெரிந்தாலும், மும்பை மற்றும் புனே போன்ற அதன் நகர்ப்புற மையங்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களிலிருந்து இன்னும் விடுபடவில்லை. பாலியல் துன்புறுத்தல், குடும்ப வன்முறை மற்றும் பணியிட தொந்தரவுகள் இந்த மாநிலத்தில் பெண்களை தொடர்ந்து பாதித்து வருகின்றன.

டெல்லி

இந்தியாவின் தலைநகரம் பெண்களுக்கு எதிரான அதிக குற்ற விகிதங்களுக்கு பெயர் பெற்றதாகவே உள்ளது. நிர்பயா வழக்கு பெண்களுக்கு எதிராக நடந்த இந்த நூற்றாண்டின் மிகவும் கொடூரமான வழக்காகும். எண்ணற்ற போராட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் இருந்தபோதிலும், டெல்லி பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள், பொது வெளியில் துன்புறுத்தல் மற்றும் அலுவலக சிக்கல்கள் என பல பிரச்சினைகளுடன் பெண்கள் போராடி வருகிறார்கள். 2019-ல் மட்டுமே 1253 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஜார்க்கண்ட்

ஜார்க்கண்ட் மாநிலம், குறிப்பாக கிராமப்புற மற்றும் பழங்குடிப் பகுதிகளில், பெண்கள் கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை போன்ற குறிப்பிடத்தக்க பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. இங்கு நிலவும் வறுமை மற்றும் கல்வியின்மை ஆகியவை பெண்களை சுரண்டலுக்கு ஆளாக்குகின்றன. 2019-ல் மட்டும் இங்கு பெண்களுக்கு எதிரான 1416 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Friday, June 6, 2025, 11:36 [IST]
Desktop Bottom Promotion