இன்று பங்குனி மாத அமாவாசை 2024.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய உகந்த நேரம் எது?

அமாவாசையன்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம், சிரார்த்தம் (திதி) முதலானவற்றைத் தவறாது செய்யவேண்டும். அதனால் பித்ருக்களின் பசியும், தாகமும் நிவர்த்தியாகும் என்கிறது சாஸ்திரம். அதிலும் பங்குனி மாதம் வரும் அமாவாசை அன்று விரதம் இருந்தால் பித்ரு சாபம் நீங்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் இந்த வருடம் பங்குனி மாத அமாவாசையானது இன்று அதாவது ஏப்ரல் மாதம் (8-04-2024 )8ஆம் தேதி திங்கள் கிழமை தொடங்குகிறது. இந்த திதி அடுத்த நாள் ஏப்ரல் 9ஆம் தேதி வரை உள்ளது.

இந்த பங்குனி மாதம் பித்ருக்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்கக்கூடிய காலமாகும். அந்த வகையில் இந்த மாதத்தின் அமாவாசை நாளான இன்று முன்னோர்களுக்கு ஆராதனை, தர்ப்பணம் முதலான காரியங்கள் செய்தால் பித்ருக்களின் ஆசியைப் பெறலாம். அதுமட்டுமல்லாமல் விரதம் இருந்து வழிபட்டால் பித்ருக்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்கக்கூடியதாக இருக்கும்.

amavasay

மேலும் இந்த பங்குனி மாத அமாவாசை திங்கள் கிழமை அன்று வருவதால் இது மிக விசேஷமான சோமவதி அமாவாசை அல்லது சோமவார அமாவாசை என்றும் அழைக்கப்படுகிறது.சோமவாரம் என்பது சிவனை வணங்குவதகுரிய நாளாகும். இந்த நாளில் சிவபெருமானை வணங்கி, சிவன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி, சிவனைத் வணங்குவதன் மூலம் பித்ரு சாபத்தில் இருந்து விடுபட முடியும் என்பது ஐதீகம். 2024-ல் அபூர்வமாக பல ஆண்டுகளுக்குப் பிறகு பங்குனி மாத அமாவாசை அன்று சூரிய கிரகணம் ஏற்படுகிறது. ஆனால் இது இந்தியாவில் தென்படாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதனால் இந்த கிரகணத்தால் தோஷம் ஏதும் கிடையாது.

பங்குனி மாத அமாவாசை தர்ப்பணம் செய்ய உகந்த நேரம்

பங்குனி அமாவாசை 2024 திதி தொடங்கும் நேரம்: ஏப்ரல் 8, 2024, அதிகாலை 02:54 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் ஏப்ரல் 9, 2024, மதியம் 12:28 மணிக்கு முடிகிறது.

எப்போது தர்பணம் கொடுக்க வேண்டும்?

அமாவாசை தேதி நாள் முழுவதும் நீடித்தால் கூட, மதிய நேரத்திற்குள் தர்ப்பணம் செய்வது உகந்தது. அதேபோல, மதியம் 12 மணிக்கு மேல் சூரிய கிரகணம் ஏற்பட இருக்கிறது. எனவே மதியம் 12 மணிக்குள் பங்குனி அமாவாசைக்கான தர்ப்பணத்தை செய்து முடிக்கலாம். அன்று அதிகாலையில் குளித்து முடித்து, ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும்.சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைக்க வேண்டும்.

சூரிய கிரகணம் இணைவதால் அசுபமா?

இந்த நாளில் சூரிய கிரகணம் இணைவதால் அது அமங்களமாக கருதப்படுகிறது. ஆனால் நீங்கள் எதுவும் யோசிக்காமல் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்தால் நல்லது. இந்த கிரகணத்தின் போது ராகு கோபமடைவதால், அதிக எதிர்மறை சக்திகள் வலுவாகும். இதனால் நீங்கள் பித்ரு தோஷம் நீங்க படையல் வைத்ததோடு முதியவர்களுக்கு ஆடை, செருப்பு தானம், இனிப்பு தானம் செய்யலாம். இதன் மூலம் உங்கள் முன்னோர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்பது ஐதீகம்.

அன்னதானம் செய்தல்

குழந்தை பேறில்லாமல் தவிப்பவர்கள் இன்று விரதம் இருந்து அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட நிச்சயம் புத்திர பாக்கியம் கிடைக்கும். எனவே பங்குனி அமாவாசை நாளில் முன்னோர்களை வழிபடுங்கள்.மேலும் இன்று குறைந்தது மூன்று பேருக்காவது வயிறு நிரம்ப சாப்பாடு வாங்கிக் கொடுத்து, அன்னதானம் செய்ய வேண்டும். அது நிறைவான அன்னதானம் ஆக இருக்க வேண்டும். அதனால் தலைமுறை செழிக்கும். நல்ல வளமுடன் வாழலாம்.

Story first published: Monday, April 8, 2024, 12:09 [IST]
Desktop Bottom Promotion