முகலாய வம்சத்தின் மிகப்பெரிய செல்வந்தராக இருந்த இந்த இளவரசி கடைசிவரை திருமணம் செய்து கொள்ளவில்லை..ஏன் தெரியுமா

இந்திய வரலாற்றில் முகலாயர்களின் பங்கு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஆங்கிலேயர்களுக்கு முன்னாள் கிட்டதட்ட 300 ஆண்டுகள் பெரும்பாலான இந்தியாவை உள்ளடக்கிய நிலப்பரப்பை ஆண்டுவந்தனர். இந்தியாவின் கட்டிடக்கலை, கலாச்சாரம் மற்றும் உணவுமுறையில் கூட முகலாயர்களின் தாக்கம் இன்றுவரை தொடர்கிறது.

1858-ல் முகலாயர்கள் ஆட்சி முடிவிற்கு வரும் வரை கிட்டதட்ட 20 முகலாய அரசர்கள் இந்தியாவை ஆண்டனர், ஆனால் இவர்கள் அக்பர், ஷாஜகான் போன்ற வெகுசில அரசர்களே வரலாற்றில் இடம்பிடித்தனர். முகலாய அரசர்களைப் பற்றி தெரிந்த அளவிற்கு நமக்கு முகலாய இளவரசிகளைப் பற்றியோ அல்லது முகலாயப் பெண்களைப் பற்றியோ நமக்கு கொஞ்சம் கூட தெரியாது.

Richest Mughal Princess of History Never Got Married

நமக்கு தெரிந்த ஒரே முகலாயப் பெண்மணி மும்தாஜ் மட்டும்தான். ஆனால் மும்தாஜை விட பிரபலமான மற்றும் முகலாய அரசவையில் அதிகாரமிக்க ஒரு பெண் இருந்தார். அவரைப்பற்றி தற்போது பலருக்கும் தெரியவில்லை. அவர்தான் பேரரசர் ஷாஜகானின் மகள் இளவரசி ஜஹானாரா பேகம்.

ஜஹானாரா பேகம்

முகலாயப் பேரரசர் ஷாஜகானின் மூத்த மகளான ஜஹானாரா பேகம், முகலாயர் அரசவையில் அளவில்லா அதிகாரத்துடனும் ஆடம்பரமாக வாழ்ந்தார். பேரழகி என்று வர்ணிக்கப்படும் அவர் அவருடைய அழகுக்காக மட்டுமின்றி, அவருடைய அறிவாற்றல் மற்றும் நிர்வாகத் திறன்களுக்காகவும் முகலாய அரசவையில் அனைவராலும் மதிக்கப்பட்டார். ஜஹானாரா அந்த காலகட்டத்திலேயே உயர் கல்வி கற்றவராக இருந்தார், மேலும் பாரசீக மொழியில் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார் மற்றும் குறிப்பிடத்தக்க கட்டிடக்கலை திட்டங்களை நிர்மாணிப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

ஜஹானாரா பேகத்தின் அளவிலா செல்வம்

1628 இல் ஷாஜகான் பேரரசரானபோது, ​​அவர் தனது மகளுக்கு ஆண்டு படித்தொகையாக ரூ. 6 லட்சமும், ஒரு லட்சம் பொற்காசுகள் மற்றும் பல தோட்டங்களை பரிசாக வழங்கினார். பல ஆண்டுகளாக, அடுத்தடுத்த ஆண்டுகளில் செல்வம் கணிசமாக அதிகரித்தது, அவரது ஆண்டு வருமானம் ரூ. 30 லட்சத்தை எட்டியது. அவரது தாயார் மும்தாஜின் மரணத்தைத் தொடர்ந்து, ஜஹானாரா தனது தாயின் பெரும் செல்வத்தில் பாதியை வாரிசுரிமையாகப் பெற்றார், இது அவரது செல்வத்தை மேலும் அதிகரித்தது. இது அவரை முகலாய அரசவையிலேயே மிகப்பெரிய செல்வந்தராக மாற்றியது.

திருமண வாழ்க்கை

அளவில்லாத செல்வம், அதிகாரம் மற்றும் அரச அந்தஸ்து இருந்தபோதிலும், ஜஹானாரா இறுதிவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஷாஜஹான் தனது மகளின் திருமணத்தைப் பார்க்கத் தயங்கினார் என்று வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள், அவரது வருங்கால கணவர் முகலாய அரசவையில் செல்வாக்கு அல்லது அதிகாரத்தை உரிமைக்கோருவதன் மூலம் பேரரசுக்கு அச்சுறுத்தலாக மாறலாம் என்று அவர் பயந்தார். இந்த அரசியல் சூழ்நிலையே அவர் வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்ததற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம்.

ஜஹானாரா தனது குடும்பத்தின் மீது அதிக அக்கறைக் கொண்டிருந்தார், குறிப்பாக அவரது சகோதரர் தாரா ஷுகோவின் வாழ்க்கையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் 1630 இல் அவரது திருமணத்திற்கு தன்னுடைய செல்வத்திலிருந்து கணிசமான தொகையை வழங்கினார். 32 லட்சத்தில் நடத்தப்பட்ட இந்த திருமணம் இந்திய வரலாற்றின் மிகவும் ஆடம்பரமான திருமணங்களில் ஒன்றாகும்.

கணக்கற்ற செல்வமும், எல்லையில்லா அதிகாரமும் இருந்த போதும் ஜஹானாரா தனது குடும்பத்திற்காகவும், பேரரசு மீது கொண்ட விசுவாசத்திற்காகவும் அவர் தனது இல்லற வாழ்க்கையைத் துறந்தார்.

Story first published: Tuesday, October 8, 2024, 14:50 [IST]
Desktop Bottom Promotion