இந்தியாவுடன் இணைய மாட்டோம் என்று அடம் பிடித்த இந்திய மாநிலங்கள்... எந்தெந்த மாநிலங்கள் தெரியுமா?

Republic Day 2026: இந்தியாவின் வரலாற்றை சுதந்திரத்திற்கு முன், சுதந்திரத்திற்கு பின் என்று பிரிக்கலாம். இந்தியாவின் சுதந்திரம் என்பது இந்திய தேசியத் தலைவர்களின் கடின உழைப்பால் ஈட்டிய கனவு நனவானது என்றால், சுதந்திரத்திற்கு பின் நூற்றுக்கணக்கான சுதேச ராஜ்ஜியங்களாக பிரிந்து கிடந்த இந்தியாவை ஒன்றிணைத்து ஒரு முழுமையான தேசமாக உருவாக்குவது அதைவிட கடினமான லட்சியமாக இருந்தது.

இந்திய மண்ணிலிருந்து ஆங்கிலேயர்கள் வெளியேறியபோது, ​​அவர்கள் விட்டுச் சென்ற 500-க்கும் மேற்பட்ட குறுநிலங்களையும் சமஸ்தானங்களையும் எவ்வாறு ஒன்றிணைப்பது என்ற கேள்வி எழுந்தது. 1947 ஆம் ஆண்டின் இந்தியச் சுதந்திரச் சட்டம், சுதேச சமஸ்தானங்களுக்கு புதிதாகப் பிறந்த இந்தியா அல்லது பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளில் ஏதேனும் ஒன்றுடன் இணைந்துகொள்ள அல்லது ஒரு சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாடாகத் தொடர ஒரு வாய்ப்பை வழங்கியது. அந்த காலகட்டத்தில், 500-க்கும் மேற்பட்ட சுதேச சமஸ்தானங்கள் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் பரப்பளவில் 48 சதவீதத்தைக் கொண்டிருந்தன.

Republic Day 2026 States That Refused To Join India After Independence

சுதேச ராஜ்ஜியங்கள்

இந்த சுதேச ராஜ்ஜியங்கள் சட்டப்படி பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லை, ஆனால் உண்மையில், அவை பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திற்கு முழுமையாகக் கட்டுப்பட்டிருந்தன. ஆங்கிலேயர்களுக்கு, மற்ற காலனித்துவ சக்திகளின் எழுச்சியையும் இந்தியாவில் தேசியவாதப் போக்குகளையும் கட்டுக்குள் வைத்திருக்க இந்த சுதேச ராஜ்ஜியங்கள் முக்கியமான கூட்டாளிகளாக இருந்தன. அதன்படி, இளவரசர்களுக்கு அவர்களின் பிரதேசங்களின் மீது சுயாட்சி வழங்கப்பட்டது, ஆனால் அமைச்சர்களை நியமிக்கவும், தேவைப்படும்போது இராணுவ ஆதரவைப் பெறவும் ஆங்கிலேயர்கள் தங்களுக்கு உரிமையைப் பெற்றுக்கொண்டனர். சுதந்திரத்திற்கு பின், பல சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணையக்கூடாது என்ற தங்கள் முடிவில் உறுதியாக இருந்தன. அவற்றில் சில சுதந்திரமான நாடாக இருக்க விரும்பின, மற்றவை பாகிஸ்தானுடன் இணைய விரும்பின. இந்த பதிவில் இந்தியாவுடன் இணைவதற்கு விருப்பமில்லாமல் இருந்த சுதேச அரசுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

திருவிதாங்கூர்

கடல்வழி வர்த்தகத்திற்கும், கனிம வளங்களுக்கும் பெயர் பெற்ற திருவிதாங்கூர், இந்திய ஒன்றியத்துடன் இணைவதை மறுத்த முக்கிய சமஸ்தானங்களில் ஒன்றாகும். புகழ்பெற்ற வழக்கறிஞரான சர் சி.பி. ராமசாமி ஐயர் திருவிதாங்கூரின் திவானாக இருந்தார். 1946-ஆம் ஆண்டிலேயே அவர் ஒரு சுதந்திரமான நாட்டை உருவாக்கும் தனது விருப்பத்தை அறிவித்திருந்தார். இந்த விஷயத்தில் சி.பி. ஐயருக்கு முகமது அலி ஜின்னா மற்றும் இங்கிலாந்து அரசாங்கம் ஆகிய இருவரின் ஆதரவும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், கேரள சோசலிஸ்ட் கட்சியினரால் நடத்தப்பட்ட ஒரு கொலை முயற்சிக்குப் பிறகு அவர் தனது முடிவை மாற்றிக்கொண்டார். அதன் விளைவாக, திருவிதாங்கூர் ஜூலை 30, 1947 அன்று இந்தியாவுடன் இணைந்தது.

ஜோத்பூர்

ராஜபுத்திர சமஸ்தானமான ஜோத்பூரின் ஆட்சியாளரான மகாராஜா ஹன்வந்த் சிங் எந்த நாட்டுடன் இணைவது என்று ஆழ்ந்த குழப்பத்தில் இருந்தார். மகாராணி இந்தியாவுடன் இணைய விரும்பினாலும், கராச்சியில் முழு துறைமுக வசதிகளையும் வழங்குவதாக ஜின்னா அளித்த வாக்குறுதியால் அவர் பாகிஸ்தானுடன் இணைய ஆசைப்பட்டார். அதேசமயம் வல்லபாய் படேலும் மகாராஜாவைத் தொடர்புகொண்டு அவருக்குப் போதுமான சலுகைகளை வழங்கினார். பல போராட்டங்களுக்குப் பிறகு, ஹன்வந்த் சிங் ஆகஸ்ட் 11, 1947 அன்று இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

போபால்

பெரும்பான்மையான இந்து மக்களை ஆட்சி செய்த போபாலின் நவாப் ஹமீதுல்லா கான், இந்தியா, பாகிஸ்தான் இரண்டு நாடுகளுடனும் இணையாமல் ஒரு சுதந்திரமான நாடாக இருக்கவே விரும்பினார். அவர் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக இருந்தார், மேலும் இது குறித்து லார்ட் மவுண்ட்பேட்டனிடமும் தெரிவித்திருந்தார். ஆனால், பல சுதேச சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைக்கப்படுவதை பார்த்த, ​​அவரும் 1947 ஜூலை மாதத்தில் இந்தியாவுடன் இணைய முடிவெடுத்தார்.

ஹைதராபாத்

இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தராக அறியப்பட்ட ஹைதராபாத் நிஜாம் மிர் உஸ்மான் அலி, சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற தனது முடிவில் உறுதியாக இருந்தார், மேலும் பிரிட்டிஷ் காமன்வெல்த்தில் சேர விரும்பினார். இருப்பினும், பிரிட்டிஷார் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த சூழலில் பல வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன, இதை வல்லபாய் படேல் இந்தியாவின் வயிற்றிலுள்ள ஒரு புற்றுநோயாகக் கருதினார். செப்டம்பர் 13, 1948 அன்று, 'ஆபரேஷன் போலோ' திட்டத்தின் கீழ், இந்தியப் படைகள் ஹைதராபாத்திற்கு அனுப்பப்பட்டன. இந்த மோதல் நான்கு நாட்கள் நீடித்தது. இறுதியாக, செப்டம்பர் 18, 1948 அன்று, இந்திய இராணுவம் மாநிலத்தின் மீது முழுமையான கட்டுப்பாட்டைப் பெற்ற பிறகு, அந்த சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

ஜூனாகத்

சுதந்திரத்தின் போது ஜூனாகத் சமஸ்தானம் நவாப் முஹம்மது மஹபத் கான்ஜி III என்பவரால் ஆளப்பட்டது. பிரபுக்களுக்கு ஆற்றிய உரையின் போது மவுண்ட்பேட்டன் பிரபு இந்திய யூனியனுடன் இணையுமாறு கூறியப்போதும், ஜூனாகத்தின் நவாப் சுதந்திரமாக இருக்க விரும்பினார். ஜூனாகத் பாகிஸ்தானுடன் இணைவதற்காகக் கோரிக்கை விடுத்தது, அது பாகிஸ்தான் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கை இந்தியாவிற்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது, எனவே ஒரு பொது வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டது. பிப்ரவரி 20, 1948 அன்று பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, அதில் 91 சதவீதம் பேர் இந்தியாவுடன் இணைவதற்கு வாக்களித்தனர். இதன் அடிப்படையில் ஜூனாகத் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

Desktop Bottom Promotion