இந்த வீரமிக்க ராணி முகலாய வீரர்களின் மூக்கை வெட்டி அவர்களின் நாட்டுக்கு விரட்டியடித்தாராம்... ஏன் தெரியுமா?

இந்திய வரலாற்றில் பல மன்னர்கள் தங்களின் வீரத்தால் அழிக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளனர். ஆனால் வரலாறு என்பது ஆண்களுக்கானது மட்டுமல்ல, ஏனெனில் இந்திய வரலாற்றில் பல பெண் அரசிகளும் தங்களின் வீரத்தால் அழியாப் புகழை பெற்றுள்ளனர்.

நக்-கதி ராணி அல்லது மூக்கை வெட்டும் ராணி என்று அழைக்கப்படும், முன்னாள் கர்வால் சாம்ராஜ்யத்தின் (இப்போதைய உத்தரகண்டின்)ராணி கர்னாவதி, சக்திவாய்ந்த முகலாய பேரரசர் ஷாஜகானின் இராணுவத்தை எதிர்கொண்ட ஒரு அச்சமற்ற தலைவராக இந்திய வரலாற்றில் நினைவுகூரப்படுகிறார்.

Rani Karnavati The Indian Queen Who Cut the Noses of Mughal Soldiers

கர்வால் ராஜ்ஜியம்

கர்வால் ராஜ்ஜியம் கி.பி 823 இல் கனக் பாலால் நிறுவப்பட்டது. 1622 இல் அரியணை ஏறிய மஹிபத் ஷாவால் தலைநகரம் ஸ்ரீநகருக்கு மாற்றப்பட்டது. ஆனால், மஹிபத் ஷா 1631 இல் இளம் வயதிலேயே இறந்தார், அதன்பின் அவருடைய இளம் வாரிசான ஏழு வயது பிருத்விபதி ஷா அரியணையில் அமர்ந்தார்.

ராணி கர்னாவதி மஹிபத் ஷாவின் மனைவி. அவரின் மறைவுக்குப் பிறகு அனைத்துப் பொறுப்புகளையும் தன் தோளில் சுமக்க முடிவெடுத்ததன் மூலம், பெண்களாலும் ராஜ்ஜியத்தின் பாதுகாவலராகவும், நிர்வாகியாகவும் இருக்க முடியும் என்பதை நிரூபித்தார். அவர் தன்னுடைய வீரம் மற்றும் தைரியத்தால் படையெடுப்பாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறினார்.

கர்வாலின் வளங்கள்

கர்வால் வெள்ளி, செம்பு மற்றும் தங்கச் சுரங்கங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. இது முகலாய அரசர் ஷாஜஹானின் கவனத்தை ஈர்த்தது, மஹிபத் ஷா அவரைப் பார்க்க மறுத்ததை அடுத்து கர்வாலை ஆக்கிரமிப்பதில் அவர் உறுதியாக இருந்தார். மஹிபத் ஷாவின் மறைவு ஷாஜகானின் இந்த பகுதியை ஆக்கிரமிக்கும் விருப்பத்தை வலுப்படுத்தியது.

ஷாஜகானின் படையெடுப்பு

ஷாஜகான் தனது தளபதி நஜபத் கானின் கீழ் சுமார் 30,000 வீரர்களைக் கொண்ட ஒரு குழுவை அனுப்பினார். பிரபல இத்தாலிய பயணியும் எழுத்தாளருமான நிக்கோலோ மானூசி முகலாயர்களுக்கும் ராணி கர்னாவதிக்கும் இடையே நடந்த போரைப் பற்றி விவரித்துள்ளார். ராஜ்ஜியத்திற்குள் படைகள் அனுமதிக்கப்பட்டதாகவும் ஆனால் ராணி அவர்களை இன்று லக்ஷ்மன் ஜூலா என்று அழைக்கப்படும் இடத்தில் தடுத்து நிறுத்தியதாகவும் அவர் கூறுகிறார். முகலாயர்கள் மலைகளின் கடினமான நிலப்பரப்புகளை நன்கு அறிந்திருக்காததால், அவர்களுக்கு வேறு வழியில்லாமல் போனது, அதன்பின் அமைதிக்கு அழைப்பு விடுக்க, அதை ராணி நிராகரித்தார்.

நக்-கதி ராணி

ராணி முகலாயர்களை சிறைபிடித்தார், இறுதியாக அவர்களை ஒரு நிபந்தனையுடன் விடுவிக்க ஒப்புக்கொண்டார். முகலாய வீரர்களின் மூக்கை அறுத்துக்கொள்ளும் படி அல்லது இறக்கும்படி கர்னாவதி கட்டளையிட்டார். ஆண்களின் மூக்கை நறுக்கச் சொன்ன இந்த பெண்ணின் வீரம் எப்போதும் வரலாற்றில் நிலைபெற்றிருக்கும். அறுக்கப்பட்ட மூக்குடன் வீடு திரும்புவதைத் தவிர வேறு வழியே படையினருக்கு இருக்கவில்லை. ராணுவ வீரர்களின் மூக்கை வெட்ட காரணம், லக்ஷ்மணன் சூர்ப்பனகையின் மூக்கை நறுக்கிய ராமாயணத்திலிருந்து ஈர்க்கப்பட்டதாகும். இந்த படைவீரர்கள் முகலாய ராஜ்ஜியத்திற்கு திரும்பிய போது, ​​முகலாய பேரரசர் மற்றொரு படையை கர்வாலுக்கு அனுப்பினார், ஆனாலும் அவர்களுக்கும் அதே நிலைதான் ஏற்பட்டது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, சக்திவாய்ந்த முகலாயர்களின் மூக்கை அறுத்ததால் அவருக்கு நக் கதி ராணி என்ற பட்டம் வழங்கப்பட்டது. அவருடைய அண்டை ராஜ்ஜியங்களைப் போல முகலாயர்களின் கைப்பாவை ஆட்சியாளராக அவர் இருந்திருக்கலாம், ஆனால் அவர் முகலாயர்களை எதிர்த்துப் போரிடுவதைத் தேர்ந்தெடுத்தார். மேலும் அவர் தன் ராஜ்ஜியத்தைப் பாதுகாப்பதில் உண்மையில் வெற்றி பெற்றார்.

சீர்திருத்த சட்டங்கள்

கர்னாவதி ஒரு தைரியமான போர் ராணி மட்டுமல்ல, அவர் ஒரு தொலைநோக்கு பார்வையும் கொண்டவர். டெஹ்ராடூன் மாவட்டத்தில் உள்ள நெவாடாவில் பல நினைவுச்சின்னங்களைக் கட்டியதற்காகவும், டேராடூனின் ஆரம்பகால கால்வாய்களில் ஒன்றான ராஜ்பூர் கால்வாயைக் கட்டியதற்காகவும் அவர் பாராட்டப்பட்டார்.

ராணி கர்னாவதி ஒவ்வொரு முறையும் தனது தைரியத்தை வெளிப்படுத்தினார். கணவன் இறந்தால் பெண்கள் சதி செய்ய வேண்டும் என்ற விதிமுறை நிலவிய காலகட்டத்திலும், பெண்கள் பலவீனமானவர்கள் என்று கருதப்பட்ட காலகட்டத்தில் கர்னாவதி முகலாயர்களிடமிருந்து தனது ராஜ்ஜியத்தை பாதுகாத்தார். துரதிர்ஷ்டவசமாக எந்த பாடப்புத்தகத்திலும் அவரைப் பற்றிய பாடங்கள் இல்லை.

Story first published: Saturday, June 15, 2024, 13:38 [IST]
Desktop Bottom Promotion