முகலாய அரசர்கள் மணந்து கொண்ட இந்து இளவரசிகள்..இவ்வளவு இந்து பெண்கள் முகலாய அரசர்களை கல்யாணம் பண்ணிருக்காங்களா?

இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத வம்சத்தினர் முகலாயர்கள். இந்தியாவில் முகலாயர்கள் வெகுவிரைவில் அதிகாரத்திற்கு வந்தனர். அதற்கு அவர்களின் போர் உத்திகள் எவ்வளவு உதவியாக இருந்ததோ அதேயளவிற்கு அவர்களின் திருமண உறவுகளும் உதவியாக இருந்தது.

முகலாய-ராஜ்புத்திர கூட்டணி என்பது இடைக்கால இந்தியாவின் வரலாற்றை வரையறுத்த ஒரு குறிப்பிடத்தக்க உறவாக இருந்தது மற்றும் அந்த நேரத்தில் உருவான வலுவான பிணைப்பாக இருந்தது. அக்பர் முகலாய வம்சத்தின் ஒரு சிறந்த ஆட்சியாளர் என்பதை நாம் அறிவோம். இந்தியத் துணைக்கண்டத்தில் முகலாயப் பேரரசின் அதிகாரத்தை பலப்படுத்திய அக்பர் செய்த பல தொலைநோக்கு செயல்களில், ராஜபுத்திரர்களுடனான கூட்டணி மிக முக்கியமானதாக இருந்தது.

Mughal Kings Who Married Hindu Women in Tamil

இது முகலாய வரலாற்றை கலாச்சாரரீதியாக மாற்றியது, ஆனால் மிக முக்கியமாக, பேரரசுக்கு ஒரு வலுவான இராணுவ சக்தியை வழங்கியது, அது அடுத்தடுத்த ஆண்டுகளில் அதன் விரிவாக்கத்திற்கு உதவியது. மேலும், பேரரசர்களின் ராஜபுத்திர மனைவிகள் எதிர்கால ஆட்சியாளர்களின் பெருமைமிக்க தாய்மார்களாக இருந்தனர், முகலாய ஆதிக்கத்திலும், கலாச்சாரத்திலும் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கினர்.

ராஜபுத்திர பிரபுக்கள் தங்கள் மகள்களை முகலாய பேரரசர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். அக்பரின் வாரிசுகளான அவரது மகன் ஜஹாங்கீர் மற்றும் பேரன் ஷாஜஹானின் அம்மாக்கள் ராஜபுத்திர இளவரசிகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம்பர் ஆட்சியாளரான ராஜா பர்மல் 1562 இல் அக்பருடன் நட்புறவை ஏற்படுத்திய முதல் ராஜபுத்திர அரசராவார்.

பர்மாலின் இளைய மகள் ஹர்கா பாய் (ஜோதா பாய் என்றும் அழைக்கப்படுகிறார்) அக்பரை மணந்தார். அக்பர் தனது இந்து மனைவிகளுக்கு பூரண மத சுதந்திரம் அளித்து, அவர்களின் பெற்றோர் மற்றும் உறவுகளுக்கு உயர்குடியில் கௌரவமான இடத்தை அளித்தார். இந்த பதிவில் முகலாய அரசர்களை மணந்து கொண்ட இந்து இளவரசிகள் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.

- பிப்ரவரி 1562 இல், பேரரசர் அக்பர் ராஜா பர்மாலின் மகள் மரியம்-உஸ்-ஜமானியை மணந்தார், இவர்தான் பேரரசர் ஜஹாங்கீரின் தாயாராவார். அதே ஆண்டில், அவர் ராஜபுத்திர அரசர் ராவ் விராம்டேவின் பேத்தியை மணந்தார்.

- நவம்பர் 15, 1570 இல், அக்பர் ராய் கல்யாண் சிங்கின் மருமகள் ராஜ் குன்வாரியை மணந்தார். அதே ஆண்டில், அவர் ராய் கல்யாண் சிங்கின் மற்றொரு மருமகள் பானுமதி, ராவ் விராம்டேவின் கொள்ளுப் பேத்தியான புரம் பாய் மற்றும் மஹாராவல் ஹர்ராஜ் சிங்கின் மகள் இளவரசி நத்தி பாய் ஆகியோரை மணந்தார்.

- 1573 இல், அக்பர் நாகர்கோட்டின் ராஜா ஜெய்சந்தின் மகளை மணந்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, மார்ச் 1577 இல், அக்பர் ராவல் அஸ்கரனின் மகளை மணந்தார். 1581 இல், கேசவ்தாஸின் மகளை மணந்தார்.

- அக்பரைத் தொடர்ந்து பிப்ரவரி 16, 1585 இல், சலீம் பின்னாளில் பேரரசர் ஜஹாங்கீர் அழைக்கப்பட்டவர், பகவந்த் தாஸின் மகளான இளவரசி மான் பாயை மணந்தார்.

- ஜனவரி 11, 1586 இல், மோட்டா ராஜா உதய் சிங்கின் மகளும் பின்னர் ஷாஜகானின் தாயுமான இளவரசி மனவதி பாயை ஜஹாங்கீர் மணந்தார். அந்த ஆண்டு ஜூன் 26 அன்று, அவர் ராஜா ராய் சிங்கின் மகளை மணந்தார்.

- 1587 இல், ஜஹாங்கீர் மஹாராவல் பீம் சிங்கின் மகள் மலிகா ஜஹானை மணந்தார், மேலும் கேஷோ தாஸின் மகள் கரம்சியையும் மணந்தார். ஜூன் 17, 1608 இல், ஜஹாங்கீர் ஜகத் சிங்கின் மகளையும், ஜனவரி 1610 இல் ராம் சந்திர பண்டேலாவின் மகளையும் மணந்தார்.

- இளவரசர் குர்ராம் (பின்னர் ஷாஜகான்) சகத் சிங்கின் மகள் லீலாவதி பாயை மணந்தார். 1671 இல், முகமது முவாசம் (பின்னர் மொகலாயப் பேரரசர் பகதூர் ஷா I) கிஷன்கரின் மகாராஜா ரூப் சிங் ரத்தோரின் மகளான இளவரசி அம்ரிதா பாயை மணந்தார்.

- ஜூலை 30, 1681 இல், ஒளரங்கசீப்பின் மகன் காம் பக்ஷ் அமர்சந்தின் மகளை மணந்தார். 1712-1713 இல் குறுகிய காலத்திற்கு ஆட்சி செய்த ஒன்பதாவது முகலாயப் பேரரசரான ஜஹந்தர் ஷா, ராஜ்புத்திர இளவரசி அனுப் பாயை மணந்தார்.

- செப்டம்பர் 27, 1715 இல், முகலாய பேரரசர் ஃபருக்சியார், மகாராஜா அஜித் சிங்கின் மகளான இளவரசி இந்திரா கன்வரை மணந்தார்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.)

Story first published: Monday, September 9, 2024, 13:59 [IST]
Desktop Bottom Promotion