மதுரை சித்திரை திருவிழா 2023: மூன்றாம் நாளில் வேண்டிதை கொடுக்கும் காமதேனு வாகனத்தில் பவனி வரும் மீனாட்சி!

Madurai Chithirai Thiruvizha 2023: மதுரை சித்திரை திருவிழா உலகப் புகழ் பெற்ற திருவிழா மட்டுமல்ல நீண்ட நாட்களாக கொண்டாடப்படும் பெரிய திருவிழாவும் கூட. கொடியேற்றத்திற்குப் பிறகு மீனாட்சி அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேரில் மாசி நகரை சுற்றி வந்து மதுரை மக்களுக்கு காட்சி தருவார்.

அந்த கண் கொள்ளா காட்சியை காண மக்கள் அனைவரும் வீதிகளில் ஒன்று திரண்டு வழிபட்டு வருவார்கள். இந்த ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய மதுரை சித்திரை திருவிழா 12 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமி புறப்பாடு மாசி வீதிகளில் நடைபெறுகிறது.

Madurai Chithirai Thiruvizha 2023: Third Day Goddess Meenakshi In Kamadenu Vahana

மதுரை சித்திரை திருவிழா மூன்றாம் நாள்

மதுரை சித்திரை திருவிழாவின் முதல் நாளில் மீனாட்சி அம்மன் சிம்ம ரதத்திலும் இரண்டாம் நாளில் மீனாட்சி அம்மன் அன்ன வாகனத்திலும் மக்களுக்கு காட்சி அளித்தார். ஏப்ரல் 25 ஆம் தேதியான இன்று அதாவது மூன்றாவது நாள் கொண்டாட்டத்தில் மதுரை மீனாட்சி அம்மன் காமதேனு வாகனத்திலும், சுந்தரேஸ்வரர் கைலாச பர்வதம் வாகனத்திலும் மாலை 7 மணிக்கு மாசி வீதிகளை வலம் வர உள்ளார்.

மூன்றாவது நாள் கொண்டாட்டத்தின் அர்த்தம்

மூன்றாம் நாள் கொண்டாட்டம் என்பது ராவணனின் உடம்பின் மேலுள்ள கைலாச பர்வதத்தில் இறைவன் எழுந்தருளும் நிகழ்வாகும். கைலாச பர்வதம் வாகனம் என்பது ராவணனின் அகங்காரத்தை அடக்கிய காட்சியை கூறுகிறது. ராவணன் அவனுடைய அகங்காரத்தால் சிவபெருமானை அழிக்க கைலாச பர்வதத்தை தூக்கி எடுக்க, சிவபெருமான் அவனை எதிர்த்து நின்று அவனை அடக்கினார்.

சிவபெருமான் அவருடைய கால் விரலை ஊன்றிய உடனே ராவணன் தனது கை நரம்புகளால் வீணை உண்டாக்கி பாட ஆரம்பித்தான் என்று புராணம் கூறுகிறது. இறுதியில் தன் தவறை உணர்ந்து ராவணன் மன்னிப்பு கேட்டதால் சிவபெருமான் அவனுக்கு அருள் பாலிக்கிறார். இறைவனுக்கு அடங்கி நின்று வழிபடுபவர்கள் எந்நாளும் இறைவன் அருளை பெறுவார்கள் என்பதை உணர்ந்து கொள்ளவே இந்த கைலாச பர்வதம் ஊர்வலம் நடைபெறுகிறது.

இன்றைக்கு மதுரை மீனாட்சி அம்மன் காமதேனு வாகனத்தில் பவனி வர உள்ளார். காமதேனு என்பது நாம் விரும்பியவற்றையெல்லாம் கொடுக்கும். பால் கொடுத்து நம்முடைய பசியை தீர்க்கும் பசுவைப் போல நாம் வேண்டியவற்றை கொடுக்க மீனாட்சி அம்மன் வலம் வரப் போகிறாள். எனவே காமதேனு வாகனத்தில் வலம் வரும் மீனாட்சி அம்மனை வழிபட்டால் நீங்கள் விரும்பிய எல்லாவற்றையும் பெறலாம் என்பது ஐதீகம். எனவே மக்கள் ஒன்று கூடி வீதியில் பவனி வரும் மீனாட்சி அம்மனை வழிபட்டு நினைத்ததைப் பெறுங்கள்.

வாகனம் புறப்படும் நேரம்

இன்று காலை 7 மணியளவில் கோயிலுக்குள் கல்யாண சுந்தர முதலியார் மண்டகப்படியில் தங்கச் சப்பரத்தில் இறைவன் எழுந்தருளினார். இரவு 7 மணிக்கு சுந்தரேஸ்வரர் கைலாச பர்வதம் வாகனத்திலும், மீனாட்சி அம்மன் காமதேனு வாகனத்திலும் வலம் வர உள்ளனர். இந்த ஊர்வலம் நான்கு மாசி வீதிகளில் நடைபெற உள்ளது.

கைலாச பர்வதம் வாகனம் அலங்காரம்

கைலாச பர்வதம் வாகனத்தில் சுந்தரேஸ்வரர் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு இருப்பார். அவருக்கு கீழே பத்து தலை இராவணன் சிலை வைக்கப்பட்டு இருக்கும். இது சிவபெருமான் இராவணனை அடக்கிய காட்சியை பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு மாசி வீதியிலும் வலம் வரும் போது பூஜைகள் செய்யப்பட்டு மக்கள் கொடுக்கும் பூக்களால் அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டுவார்கள்.

காமதேனு வாகனம் அலங்காரம்

காமதேனு வாகனத்தில் மீனாட்சி அம்மன் அங்கையற்கண்ணியாக வலம் வருகிறார். வண்ணமயமான பட்டு உடுத்தி, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, மலர் மாலைகளால் சூட்டப்பட்டு மக்களுக்கு காட்சி தருவார். இன்றைக்கு மக்கள் தாங்கள் விரும்பியவற்றை மீனாட்சி அம்மனிடம் கேட்டு பெறலாம். ஏராளமான மக்களும் குழந்தைகளும் பல்வேறு வேடம் அணிந்து நாட்டுப் புற பாடல்களை பாடியும் நடனம் ஆடியும், கொட்டு மேள தாள இசையுடன் இன்றைக்கு ஊர்வலம் நடைபெற உள்ளது.

Desktop Bottom Promotion