மதுரை சித்திரை திருவிழா 2023: இன்று மதுரை மீனாட்சி அம்மனின் திருக்கல்யாண வைபவம்!

Madurai Chithirai Thiruvizha 2023: மதுரை சித்திரை திருவிழாவின் பத்தாம் நாளான இன்று மதுரை மீனாட்சி அம்மனின் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. அதிகாலை வெள்ளி சிம்மாசனத்தில் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் எழுந்தருளி கோயிலைச் சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளிலும் வலம் வந்து மணக்கோலத்தில் ஒருவர் பின் ஒருவராக கோயிலில் அமைந்துள்ள அலங்கார மணமேடைக்கு வருவார்கள்.

இத்திருமணத்தில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றத்திலிருந்து சுப்ரமணிய சுவாமியும், பவள கனிவாய்பெருமாளும் மீனாட்சியம்மன் கோயிலுக்கு எழுந்தருளச் செய்வார்கள். பின்னர் மந்திரங்கள் முழங்க திருமணச் சடங்குகள் தொடங்கும். மணமக்கள் சார்பில் கோயில் சிவாச்சாரியர்கள் மாங்கல்ய தானம் செய்து மாலை மாற்றிக் கொள்வர்.

Madurai Chithirai Thiruvizha 2023: Tenth Day Meenakshi Amman Thirukalyanam

திருக்கல்யாணம் என்பது மதுரை நகரை ஆள்பவளைக் கரம்பிடிக்கக் கயிலாயநாதனே மணமகனாய் வந்த பெருமையை பேசுகிறது. இன்றைய நாட்களில் சுமங்கலிப் பெண்களும் புது தாலிக்கயிற்றை மாற்றிக் கொண்டு அம்மனை வழிபடுவார்கள். திருக்கல்யாணத்துக்கு முந்தைய நாள் இரவும், திருக்கல்யாணத்தன்றும் சுமார் ஒரு லட்சம் பேர் ஆண்டுதோறும் கல்யாண விருந்தில் கலந்து கொள்வார்கள்.

அன்றைய தினம் மதுரையே கல்யாண விருந்தில் கலந்து கொள்ளும். மக்களுக்கு உணவு படைத்திட ஏகப்பட்ட சமையல்காரர்கள் சமையலில் ஈடுபடுவார்கள். நன்றாக வயிறு நிறைய சாப்பிட்டு பிறகு தங்கள் வசதிக்கேற்ப மொய் எழுதிச் செல்லும் பழக்கமும் உண்டு. இந்த திருக்கல்யாண வைபவத்தில் மதுரை மாநகரே திருவிழாக்கோலம் பெறும். திருக்கல்யாணத்தன்று இரவு பூப்பல்லக்கில் அன்னையும், யானை வாகனத்தில் சுவாமியும் எழுந்தருளுவார்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண புராண வரலாறு

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மகா விஷ்ணு, தேவர்கள், தேவகனங்கள் என எல்லாரை வைத்து மிகச் சிறப்பாக நடைபெற்றது. நம் எம்பெருமான் அன்றைக்கு மட்டும் சிவனின் தோற்றத்தில் இருந்து சுந்தரேஸ்வரராக மாறி மதுரை மாப்பிள்ளையாக வலம் வந்தார். நல்ல நேரத்தில் மதுரை மீனாட்சி அம்மனின் கழுத்தில் மாங்கல்யம் பூட்டி தன் மனைவியாக ஏற்றுக் கொண்டார்.

மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருமணம் முடிந்ததும் தடபுடலாக விருந்து ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது. மலை போல் சாதம் குவிக்கப்பட்டு நிறைய பலங்காரங்கள் படைக்கப்பட்டு அனைவரும் விருந்தை வயிறார சாப்பிட்டனர். ஆனால் மலை போல் குவிக்கப்பட்ட சாதம் கொஞ்சம் கூட குறையவில்லை. இதனையறிந்த சிவபெருமான் குண்டோதரர்கள் இருவரை அங்கு அழைத்தார்.

மீதமுள்ள சாதம் மற்றும் பலங்காரங்களை அவர்கள் சாப்பிட்டனர். சாப்பிட்ட பிறகு அவர்கள் தாகத்தை தணிக்க பெரிய அண்டா நிறைய தண்ணீர் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த தண்ணீர் அவர்களுக்கு போதுமானதாகயில்லை. இதனையறிந்த சிவபெருமான் தன் சக்தியால் அவர்களின் தாகத்தை தணிக்க ஒரு நதியை உருவாக்கினார். அந்த நதியே வற்றாத வைகை நதியாக இன்று மதுரையில் ஓடுகிறது.

திருக்கல்யாண வைபவத்தின் தத்துவமும் பலனும்

பத்தாம் நாள் திருக்கல்யாண திருவிழா மக்கள் புணர்வுறு போகம் மூழ்க இறைவன் புருடனும் பெண்ணுமாகித் திருமணம் கொண்டு ஆற்றுப்படுத்தலைக் குறிப்பதாகும். இறைவனும் இறைவியும் புரிந்து கொள்ளும் கல்யாணம் திருக்கல்யாணம் எனப்படும். போகியாயிருந்து உயிர்களுக்குப் போகத்தைப் புரிகின்றான். இறைவன் போகவடிவில் வாழமற் போனால் உலகத்து உயிர்கள் அனைத்தும் போகியாய் வாழ இயலாது. ஆதலின் இறைவன் திருக்கல்யாணம் புரிவது நம் பொருட்டேயாகும்.

பத்தாம் நாள் இரவு யானை வாகனத்தின் மீது இறைவன் ஏறி எழுந்தருளுகிறான். இது இலயக்கிரம சிருட்டிக் கோலமாகும். இலயக்கிரமம் என்பதற்கு ஒடுங்கும் முறை என்பது பொருள். உலகப்பொருட்கள் அனைத்தும் இறைவனிடம் ஒடுங்கி ஒரே பிண்டமான யானையின் உடம்பு போல் பருமனாய்க் கிடந்து ஒடுங்குதலாகும். அதிலிருந்து திரும்பவும் தோன்றுவது இலயத்தின் பின் சிருட்டிக் தொடங்குவதைக் குறிக்கும்.

யானையின் நான்கு பாதங்கள் பிண்டாகார உற்பவஜடத்வம், சுவாசசூக்குமம், வாஜிஜீவத்வம், பிராணாயாமம் இவைகளைக் குறிக்கின்றது. இவை யானையைப் போல ஆத்மஞானத்தில் தோன்றி, துதிக்கையை ஒத்த கஷீம்னையில் நிலைநிற்கும். யானையின் மேல் வைக்கும் அம்பாரி முதலியன வெளித்தோற்ற அண்டாகாரமாகும். உற்பவ, சூக்கும, ஜீவ, மாயஞானங்கள் ஆத்ம ஞானத்திலும் அவை ஈசுவர சைதன்யத்தும் ஈசுவர சைதன்யம் பிரம சைதன்யத்திலும் இலயிக்கிறது என்பதைக் குறிக்கின்றது.

ஆனந்தராயர் பூப்பல்லக்கு தேவாரப் பாடல்

"பூவார் மலர்கொண்டு அடியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள்
மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார்
தூமாமழை நின்று அதிர வெருவித் தொறுவின் நிரையோடும்
ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணா மலையாரே" - என்று சம்பந்தர் பாடியுள்ளார்.

மாணிக்கவாசகர் பாடிய பாடல்

"நித்தம் மணாளர் நிரம்ப அழகியர்
சித்தத்து இருப்பரால் அன்னே என்னும்
சித்தத்து இருப்பரால் தென்னன் பெருந்துறை
அத்தர் ஆனந்தரால் அன்னே" - என்னும் பாடலை பாடியுள்ளார்.

சுந்தரர் பாடிய யானை வாகன தேவாரப் பாடல்

"மண்ணுலகில் பிறந்து நும்மை வாழ்த்தும் வழியடியார்
பொன்னுலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன்
விண்ணுலகத்தவர்கள் விரும்ப வெள்ளையானையின் மேல்
என்னுடல் காட்டுவித்தான் நொடித்தான் மலை உத்தமனே"

யானை மற்றும் ஆனந்தராயர் பூப்பல்லக்கு புறப்படும் நேரம்

திருக்கல்யாணம் : காலை 9 மணியளவில் நடைபெறும்
காலை எழுந்தருளும் நேரம் : 4. 00 மணியளவில்
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசி வீதிகள்
வாகனம் : வெள்ளி சிம்மாசனம்
இரவு எழுந்தருளும் நேரம் : 7.30 மணியளவில்
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசி வீதிகள்
வாகனம் : யானை - ஆனந்தராயர் பூப்பல்லக்கு
திருவீதியுலா முடிவுற்று கோயிலுக்கு வரும் நேரம் இரவு 11.30 மணியளவில் இருக்கும்.

யானை வாகன அலங்காரம்

இன்றைக்கு சுந்தரேஸ்வரர் யானை வாகனத்தில் வலம் வருவார். மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு இரண்டு பக்கமும் மேள தாளங்கள் சூழ மதுரை மாசி வீதிகளில் வலம் வருவார். குழந்தைகளும் மற்றும் பக்தர்களும் பல்வேறு வேடம் அணிந்தும், நாட்புறப் பாடல்கள் பாடியும், சின்னஞ் சிறு குழந்தைகள் கோலாட்டாம் ஆடியும் அம்மனை வரவேற்பார்கள்.

மக்கள் தாங்கள் கொண்டு வந்த மலர்கள் மற்றும் பூ மாலைகளை மதுரை மீனாட்சி அம்மனுக்கும் சிவனுக்கும் கொடுத்து அர்ச்சனை செய்து தீபாராதனை தொட்டு கும்பிட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டுவார்கள். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவத்தைக் கண்டு அம்மனின் ஆசியை பெறுங்கள்.

Story first published: Tuesday, May 2, 2023, 13:05 [IST]
Desktop Bottom Promotion