மதுரை சித்திரை திருவிழா 2023: இன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி எழுந்தருளுதல்!

Madurai Chithirai Thiruvizha 2023: மதுரை சித்திரை திருவிழாவில் மிக விமரிசையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் இரண்டு ஒன்று மீனாட்சி திருக்கல்யாணம் மற்றொன்று அழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் ஆகும். மதுரைக்கு வடக்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அழகர்மலை கம்பீரமாக காட்சியளிக்கிறது.

பார்ப்பதற்கு இந்த மலை காளை வடிவில் இருப்பதால் இதை "விரிஷபாத்ரி" என்று அழைக்கின்றனர். சித்ரா பெளர்ணமி அன்று அழகர் மலையில் இருந்து கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்து விட்டு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுத்து விட்டு மீண்டும் அழகர் மலைக்கு திரும்பும் வரை ஒரே கொண்டாட்டமாகத்தான் இருக்கும்.

Madurai Chithirai Thiruvizha 2023: Lord Kallazhagar Landing In Vaigai River

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் சமயத்தில் எந்த பக்கம் இருந்து பார்த்தாலும் பல்லாக்கு குதிரையிலே பாடல் தான் ஒலிக்கும். வாராரு வாராரு அழகர் வாராரு பாட்டு தான் எங்கு சென்றாலும் கேட்கும். இந்த நன்னாளில் கள்ளழகர் தங்கக் குதிரையில் வந்து பக்தர்களுக்கு எழுந்தருளுவார்.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் புராண வரலாறு

மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் இருவரின் திருமணத்தை காண கள்ளழகர் அழகர் மலையில் இருந்து இறங்கி சகல கோலாகலங்களுடன் மதுரையை நோக்கி வருகிறார். அவர் வரும் வழி எங்கும் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதால் தங்கையின் திருமணத்தை காணமுடியாமல் போய்விடுகிறது. 420 மண்டகப்படியில் நின்று காட்சி தருகிறார் என்று புராண வரலாறு கூறுகிறது. அந்த சோகத்துடன் அவர் வைகையில் எழுந்தருளுகிறார்.

அடுத்த நாள் அதிகாலையில் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் உள்ள கள்ளழகருக்கு நூபுரகங்கையிலிருந்து தீர்த்த நீர் தலைச்சுமையாக பக்தர்கள் கொண்டு சென்று அபிஷேகம் செய்யப்படுகிறது. தன் தங்கையின் திருமணத்தைக் காண முடியாமல் சோகத்தில் இருக்கும் அழகரை குளிர்விக்க பக்தர்கள் தீர்த்த நீரை இறைத்து ஊற்றுகிறார்கள். திருவிழாவில் அழகர் தங்கப்பல்லக்கு, தங்கக் குதிரை, கருட சேஷ வாகனம், கனக தண்டியல், பூப்பல்லக்கு ஆகிய வாகனங்களில் எழுந்தருளுவார்.

வாமன அவதாரம்

மகாவிஷ்ணு, வாமன அவதாரம் எடுத்து மாவிலி மன்னனிடம் மூன்றடி மண் கேட்டார் என்ற கதை உங்களுக்கு தெரியும். அதற்கு மன்னனும் சம்மதித்தார். உடனே மகாவிஷ்ணு, விசுவரூபம் எடுத்து ஒரு அடியை பூமியை அளந்தார். இன்னொரு அடியைக் கொண்டு விண்ணை அளந்தார். மூன்றாவது அடியை மன்னனின் தலையில் வைத்தார்.

இதில் 2-வது அடியை விண்ணுக்கு கொண்டு செல்லும்போது பிரம்மா அதற்கு பாதபூஜை செய்கிறார். அப்போது பாத பூஜை செய்யும் தண்ணீரில் ஒரு துளி மகாவிஷ்ணுவின் சிலம்பில் பட்டு அழகர்மலையில் விழுகிறது. அதுவே சிலம்பாறு (நூபுரகங்கை) என வர்ணிக்கப்படுகிறது. அழகர்மலை உச்சியில் தண்ணீர் வற்றாத நூபுர கங்கை உள்ளது. இப்படித்தான் நூபுர கங்கை உருவாகியது.

இந்த நூபுர கங்கை தீர்த்தம் தனிச்சுவையும், வினைதீர்க்கும் மருந்துமாக சிறந்து விளங்குகிறது என்று புராதனப்பாடல்கள் கூறுகின்றன. நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகியோரால் இந்த நூபுர கங்கை பற்றி பாடப்பட்டு உள்ளது.

ஒரு நாள் நூபுர கங்கையில் சுதபஸ் முனிவர், தண்ணீரில் மூழ்கி மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தார். அப்பொழுது துர்வாசர் அங்கு வந்தார். அங்கே நீராடிக் கொண்டிருந்த சுதபஸ் முனிவர் அவரை கவனிக்கவில்லை. அவர் குளித்து முடித்து சற்று நேரம் கடந்து வந்து துர்வாசரை வரவேற்றார்.

அதனால் துர்வாசர் கோபமடைந்து சுதபஸ் முனிவரை மண்டூகம் (தவளை) ஆகும்படி சாபமிட்டார். சுதபஸ் முனிவர் மன்னிப்பு கேட்டார். அதற்கு துர்வாசர், சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் கிருஷ்ணபட்ச பிரதமை திதியில் சுந்தரராஜப்பெருமாள் சாபவிமோசனம் உனக்கு அளிப்பார் என்று கூறினார்.

சாபத்தால் தவளையாக மாறிய சுதபஸ்முனிவர், சுந்தரராஜப்பெருமாளை நினைத்து வைகை கரையில் தவம் இருந்தார். அப்பொழுது தான் மதுரை மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணத்திற்கு வரும் சுந்தரராஜப்பெருமாள் வைகை ஆற்றில் இறங்கி மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அளித்தார் என்கிறது புராணம். முந்தைய காலத்தில் மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அழகர்கோவில் சார்பாக சித்திரைத் திருவிழாவானது தனித்தனியாக கொண்டாடப்பட்டது.

பின்னர் திருமலைநாயக்கர் வைணவ மற்றும் சைவத்தை ஒன்று சேர்க்கும் வகையில் இரண்டையும் ஒரே விழாவாக்கினார் . அதைத் தொடர்ந்து மதுரை சித்திரைத் திருவிழா இன்று வரை ஒரே விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.

அழகர்கோவிலில் சுந்தரராஜப் பெருமாள் சங்கு, சக்கரம், வில், வாள், கதை என பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார். அதுமட்டுமின்றி, இங்கு மட்டும்தான் பெருமாளின் கையில் உள்ள சக்கரம் புறப்படத் தயாராக இருக்கிறது. துஷ்டர்களை அழிக்க சக்கரத்தைப் பிரயோக நிலையிலேயே வைத்திருக்கிறார் பெருமாள் என்பதை காட்டுகிறது.

அழகர் கோயில் பிரசாதம் மற்றும் சம்பா தோசை

அழகர் ஆற்றில் இறங்குவதைக் காண ஆயிரம் கண் வேண்டும். அதே மாதிரி மதுரை கள்ளழகர் கோயிலில் தரும் பிரசாதமான சம்பா தோசையை வாங்கிச் சாப்பிட்டால் சங்கடங்கள் தீரும் என்கிறது புராண வரலாறு. இந்த சம்பா தோசையைக் கொண்டு தான் அழகர் கோயில் மூலவருக்கு நைவேத்யம் செய்யப்படும்.

பச்சரிசி மாவுடன் உளுந்து, சீரகம், பெருங்காயம், சுக்கு, கறிவேப்பிலை, நூபுரகங்கை தீர்த்தம் இவற்றைக் குறிப்பிட்ட அளவு கலந்து இந்த சம்பா தோசை சுத்தமான நெய்யில் செய்யப்படுகிறது.

அழகர் கோயிலின் இரவில் ஒரே ஒரு தோசை மட்டுமே செய்வார்கள். அது 11 அரை அடி விட்டமும் 2 அங்குல உயரமும் இருக்கும். கோவில் நடை சாத்தும் முன்பு இரவுதான் இந்த தோசையைக் கொண்டு ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்து பிரசாதமாக தருவார்கள்.

Story first published: Friday, May 5, 2023, 13:15 [IST]
Desktop Bottom Promotion