மதுரை சித்திரை திருவிழா 2023: எட்டாம் நாளான இன்று பட்டத்தரசிக்கு பட்டாபிஷேகம்!

Madurai Chithirai Thiruvizha 2023: மதுரை என்னும் சொல்லுக்கு " இனிமை" என்று பொருள். அதனால் தான் அங்கு தமிழும் மதுரையும் இனிமையின் இயல்பாய் அமைந்துள்ளது. மதுரை என்றால் தமிழ். அந்த மதுரைக்கு பட்டத்தரசியாக திகழ்பவர் தான் மதுரை மீனாட்சி அம்மன்.

மதுரையை புறநானூறு தமிழ்கெழு கூடல் என்று போற்றியுள்ளது. சிவபெருமான் சுந்தரபாண்டியனாகவும் செவ்வேள் உக்கிரகுமாரப் பாண்டியனாகவும் உமையம்மை மலையத்துவசனுக்கு மகளாகத் தோன்றித் தடாதகைப் பிராட்டியாராகவும் மதுரையை ஆண்டனர் என்று வரலாறு கூறுகிறது.

Madurai Chithirai Thiruvizha 2023: Eigth Day Celebration

மதுரை சித்திரை திருவிழாவின் போது நகரமே விழாக்கோலம் பூண்டு இருக்கும். எட்டாம் நாள் திருவிழாவில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியின் போது மீனாட்சி அம்மனுக்கு நவரத்தினங்களால் ஆன ராயர் கிரீடம் சூட்டி செங்கோலை வழங்கி பட்டாபிஷேகமானது நடைபெறுகிறது. மேலும் அம்மன் இன்றைக்கு வெள்ளி சிம்மாசன உலாவில் வலம் வருவாள்.

மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக வரலாறு

நாயக்கர் மன்னர் காலத்துக்கு முன்பு வரை மீனாட்சி சுந்தரேசுவரருக்கு தைப்பூசத்தில் திருக்கல்யாண உற்சவமும், மாசி மாதத்தில் தேரோட்டமும் மாசி மகத்தன்று மீனாட்சி பட்டாபிஷேகம் நடைபெறும் வழக்கம் இருந்தது. ஆனால் தற்போது சித்திரை திருவிழாவின் போதே மீனாட்சி அம்மனின் பட்டாபிஷேகம் நடைபெற்று வருகிறது.

சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று ஊடற் உற்சவமும், பட்டாபிஷேகமும் மற்றும் வெள்ளி சிம்மாசன உலாவும் நடைபெறுகிறது. மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி அம்மன் சன்னதி ஆறு கால் மண்டபத்தில் நடைபெறுகிறது. அப்போது அம்மனுக்கு பரிவட்டம் சாத்தப்படும். பிறகு மன்னர் திருமலை நாயக்கர் வழங்கிய இரத்தின கிரீடத்திற்கு அபிஷேகம் வழங்கப்படும்.

அந்தக் காலத்தில் பாண்டிய மன்னர்கள் வேப்பம்பூ மாலை தரித்தவர்களாக இருந்துள்ளனர். எனவே மதுரையை ஆளும் பாண்டிய நாட்டு மகாராணி மீனாட்சி அம்மனுக்கும் பட்டாபிஷேகம் அன்று வேப்பம் பூ மாலை அணிவிக்கப்படுகிறது. அதன் பிறகு அம்மன் கையில் இரத்தின செங்கோல் அளிக்கப்பட்டு சித்திரை மாதம் முதல் ஆடி மாதம் வரை அம்மன் ஆட்சியும், பின்னர் ஆவணி மாதம் சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டு பங்குனி வரை சுந்தரேஸ்வரர் ஆட்சி செய்வதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியின் போது கோயில் தக்கார் மீனாட்சி அம்மனிடம் இருந்து செங்கோலை பெற்று சகல விருதுகளுடன் சுவாமி சன்னதி இரண்டாம் பிராகாரம் சுற்றி வந்து மீண்டும் மீனாட்சி அம்மன் திருக்கரத்தில் செங்கோலை சமர்ப்பிப்பார்கள். மதுரை மீனாட்சி அம்மன் வருடத்திற்கு இரண்டு முறை மூக்குத்தி இன்றி தரிசனம் தருவாள். சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று மீனாட்சி அம்மன் மூக்குத்தி இன்றி காட்சி தருவாள்.

எட்டாம் நாள் திருவிழாவின் தத்துவமும் பலனும்

எட்டாம் திருவிழாவின் இரவில் அருள்மிகு மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெறும். அருள்மிகு மீனாட்சியம்மனுக்கு அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் இரத்தின ஆபரணங்கள் இழைத்த இராயர் கிரீடம் சாற்றி இரத்தினங்கள் இழைத்த செங்கோல் வழங்கி ஆராதனைகளுடன் பட்டாபிஷேகம் நடைபெறும்.

மதுரை மீனாட்சி அம்மன் மதுரை நகரின் ஆட்சிப்பொறுப்பை ஏற்பது என்பது ஐதீகம். எட்டாம் நாள் உற்சவம் தன்வயத்தன் ஆதல் முதலிய கடவுட் குணங்கள் எட்டினையும் விளக்குதற் குறிப்புடையதாகும். இன்று வெள்ளி சிம்மாசன உலாவில் அம்மன் வலம் வருவாள்.

வெள்ளி சிம்மாசன திருவிளையாடற்புராணப் பாடல்

அங்கம் ஆறுமே கால்களாய் முதலெழுத்து அம்பொன்பீ டிகையாகித்
துங்க நான்மறை நூல்களே நித்திலம் தொடுத்துஅசை தாம்புஆகி
எங்கள் நாயகன் எம்பெரு மாட்டியோடு இருப்பதற்கு உருக்கொண்டு
தங்கி னால்என நவமணி குயின்றபொன் தவிசு அது சமைத்திட்டார்.

பட்டாபிஷேகம் திருவிளையாடற்புராணப் பாடல்

செழியர்பிரான் திருமகளாய்க் கலைபயின்று
முடிபுனைந்து செங்கோல் ஓச்சி
முழுஉலகும் சயம்கொண்டு திறைகொண்டு
நந்திகணம் முனைப்போர் சாய்த்துத்
தொழுகணவற்கு அணிமணமா லிகைசூட்டித்
தன்மகுடம் சூட்டிச், செல்வம்
தழைவுஉறுதன் அரசுஅளித்த பெண்ணரசி
அடிக்கமலம் தலைமேல் வைப்பாம்.

வெள்ளி சிம்மாசனம் புறப்படும் நேரம்

காலை எழுந்தருளும் நேரம் :10.00 மணியளவில்
எழுந்தருளும் வீதிகள் : மாசி வீதிகள்
வாகனம் : தங்கப்பல்லக்கு
இரவு எழுந்தருளும் நேரம் : 9.00 மணியளவில்
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசி வீதிகள்
வாகனம் : வெள்ளி சிம்மாசனம்

திருவீதியுலா முடிவுற்று கோயிலுக்கு வரும் நேரம் இரவு 12.30 மணியளவில் இருக்கும். காலையில் ஊடற் லீலை நடைபெறுகிறது. பிறகு 8 மணிக்குள் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. மீனாட்சி அம்மனுக்கு செங்கோல் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

வெள்ளி சிம்மாசனம் அலங்காரம்

இன்றைக்கு மதுரை மீனாட்சி அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் வலம் வருவாள். மதுரை மீனாட்சி அம்மன் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ண பட்டு உடுத்தி இரண்டு பக்கமும் மேள தாளங்கள் சூழ மதுரை மாசி வீதிகளில் வலம் வருவார். குழந்தைகளும் மற்றும் பக்தர்களும் பல்வேறு வேடம் அணிந்தும், நாட்புறப் பாடல்கள் பாடியும், சின்னஞ் சிறு குழந்தைகள் கோலாட்டாம் ஆடியும் அம்மனை வரவேற்பார்கள்.

மக்கள் தாங்கள் கொண்டு வந்த மலர்கள் மற்றும் பூ மாலைகளை அம்மனுக்கு கொடுத்து அர்ச்சனை செய்து தீபாராதனை தொட்டு கும்பிட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டுவார்கள். அம்மனை வழிபட்டு கடவுட் குணங்கள் எட்டினையும் பெற சிறந்த நேரம் இது.

Story first published: Sunday, April 30, 2023, 14:00 [IST]
Desktop Bottom Promotion