மதுரை சித்திரை திருவிழா 2023: இன்று தீர்த்த திருவிழாவும்.. மீனாட்சியின் வெள்ளி ரிஷப வாகன உலாவும்..

Madurai Chithirai Thiruvizha 2023: மதுரை சித்திரை திருவிழா தொடங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் அம்மன் வித விதமான பல்லக்கில் பவனி வந்து மக்களுக்கு அருள் புரிகிறார். மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் சிறப்பாக நடைபெற்று மக்கள் தங்கள் வேண்டுதல்களையும் சிறப்பாக நிறைவேற்றி வருகிறார்கள்.

அந்த வகையில் பன்னிரண்டாம் நாளான இன்று சித்திரை நட்சத்திரம் கூடிய பெளர்ணமி நாளில் தீர்த்த திருவிழா நடைபெற இருக்கிறது. சித்ரா பெளர்ணமி நாளில் மதுரையில் மீனாட்சி அம்மனுக்கு தீர்த்தவாரி நடைபெறும். அன்று கள்ளழகர், அழகர் கோயிலிருந்து தன் தங்கையின் திருமணத்தைக் காண வருகிறார்.

Madurai Chithirai Thiruvizha 2023: 12th Day Celebration

அப்பொழுது மூன்றுமாவடியில் எதிர்சேர்வை நடைபெறுகிறது. மேலும் இந்த நன்னாளில் மதுரை மீனாட்சி அம்மனும் அப்பன் சுந்தரேஸ்வரரும் வெள்ளி ரிஷப வாகனத்தில் காட்சி தருவார்கள். இதைக் காண கண்கோடி வேண்டும்.

கள்ளழகர் வருகை

இன்று மீனாட்சி அம்மனான தன் தங்கையின் திருமணத்தைக் காண கள்ளழகர் மதுரைக்கு வருகிறார். அப்பொழுது மூன்றுமாவடியில் எதிர்சேர்வை நடைபெறுகிறது. எதிர்சேர்வை என்பது மதுரை மக்கள் அழகர் மலையிலிருந்து வரும் அழகரை எதிர் சென்று மதுரைக்கு வரவேற்பது ஆகும்.

அதாவது மக்கள் அனைவரும் கள்ளழகரை தங்கள் ஊருக்கும் தங்கள் வீட்டிற்கும் வருமாறு அழைக்கும் பொருட்டு இது செய்யப்படுகிறது. இந்த எதிர்சேவை முடிந்த உடன் கள்ளழகர் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் அன்று இரவில் தங்கி ஓய்வு பெறுவார்.

தீர்த்த திருவிழா கொண்டாட்ட வரலாறு

அடுத்த நாள் அதிகாலையில் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் உள்ள கள்ளழகருக்கு நூபுரகங்கையிலிருந்து தீர்த்த நீர் தலைச்சுமையாக பக்தர்கள் கொண்டு சென்று அபிஷேகம் செய்யப்படுகிறது. கள்ளழகருக்கு அபிஷேகம் முடிந்த உடன் ஆடை ஆபரணங்கள் அணிவித்து கள்ளழகரை அலங்கரிப்பார்கள்.

அன்றைய தினம் அழகர் எந்த வண்ணத்தில் ஆடை உடுத்தி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது கெட்டது நடக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. எனவே பெரும்பாலும் அழகர் பச்சை வண்ண பட்டு உடுத்தி ஆற்றில் இறங்குவார். ஏனெனில் பச்சை வண்ணம் வளமையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

உலகில் மழை பெய்து பயிர்கள் செழித்து மக்கள் வளமான வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக பச்சை வண்ண பட்டு அணிவிக்கப்படுகிறது. கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை காண பக்த வெள்ளம் கரை புரண்டு ஓடும் அளவிற்கு கூட்டம் இருக்கும். வைகை ஆற்றின் இந்தக் கரையில் இருந்து இறங்கி அந்தக் கரையில் நடக்கும் தன் தங்கையின் திருமணத்தைக் காண அழகர் செல்வார்.

ஆனால் தங்கையின் திருமணம் முடிந்து இருப்பதைக் கண்ட அவர் கோபம் கொண்டு மீண்டும் இக்கரைக்கு திரும்புவார். இதனால் அவரை குளிர்விக்க மக்கள் ராமராயர் மண்டபத்தில் வைத்து தண்ணீரை பீய்ச்சி அடித்தி அவரை குளிர்விப்பார்கள். இதனை பக்தர்கள் ஒரு நேர்த்திக் கடனாக செய்து வருகிறார்கள். பிறகு அழகர் வண்டியூருக்கு செல்லுகிறார்.

வெள்ளி ரிஷப வாகன உலா

இன்று மதுரை மீனாட்சி அம்மனும் அப்பன் சுந்தரேஸ்வரரும் வெள்ளி ரிஷப வாகனத்தில் காட்சி தருவார்கள். வண்ணமயமான பட்டு உடுத்தி இரண்டு பக்கமும் மேள தாளங்கள் சூழ மதுரை மாசி வீதிகளில் வலம் வருவார்கள்.

குழந்தைகளும் மற்றும் பக்தர்களும் பல்வேறு வேடம் அணிந்தும், நாட்புறப் பாடல்கள் பாடியும், சின்னஞ் சிறு குழந்தைகள் கோலாட்டாம் ஆடியும் வரவேற்பார்கள். அர்ச்சனை செய்து தீபாராதனை தொட்டு கும்பிட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டுவார்கள்.

பன்னிரண்டாம் நாள் திருவிழாவின் தத்துவமும் பலனும்

பன்னிரண்டாம் நாள் திருவிழா தீர்த்த திருவிழா சிவானந்தமாகிய பேரின்பக் கடலில் ஆன்மா திளைப்பதைக் குறிக்கும். பொங்கித்ததும்பிப் பூர்ணமாய் ஏக உருவாய்க் கிடக்கும் இறையண்ப வாரியில் ஆன்மாக்கள் முற்றும் ஆழ்ந்து ஆனந்திப்பதைத் தீர்த்தவாரி குறிக்கிறது. இதனை மகாருத்ரபாத தீர்த்தம் என்பர். இரவில் விருஷப வாகன சேவை நடைபெறுகிறது.

அடியார்களுக்கு ஆண்டவன் அருள்புரிய விருஷப வாகனத்தில் எழுந்தருளி வருவதை புராணாதிகளால் நன்கு அறியலாம். அருள்பெற்ற ஆன்மா விருஷபமாகும். அதன் வெள்ளை நிறம் அதனிடத்து எவ்வித மாசும் இல்லை எனவும், தர்மம் என்ற அறத்தையே நான்கு கால்களாகக் கொண்டுள்ளது என்பதை உணர்த்துகிறது.

சமம், விசாரம், சந்தோஷம், சாதுங்கம் என்ற நான்கு அறங்களும் நான்கு கால்களாய் ரிஷப வாகனத்தில் அமைந்துள்ளன. மாசற்ற அறவடிவமான ஆன்மாக்களிடத்து இறைவன் வந்து அமர்வான் என்பதை இது குறிக்கின்றது. இது அனுக்கிரகக் கோலமாகும்.

ரிஷப வாகன சம்பந்தர் தேவாரப் பாடல்

"பாசமான களைவார் பரிவார்க்கு அமுதம் அனையார்
ஆசைதீரக் கொடுப்பார் அலங்கல் விடைமேல் வருவார்
காசை மலர் போல் மிடற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பேச வருவார் ஒருவர் அவர் எம்பெருமானடிகளே" என்று சம்பந்தர் பாடியுள்ளார்.

வெள்ளி ரிஷப வாகனம் புறப்படும் நேரம்

காலை எழுந்தருளும் மண்டபம் : கோயிலினுள் உள்ள திருக்கல்யாண மண்டபம்
இரவு எழுந்தருளும் நேரம் : 7.00 மணியளவில்
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசி வீதிகள்
வாகனம் : வெள்ளி ரிஷப வாகனம்
திருவீதியுலா முடிவுற்று கோயிலுக்கு வரும் நேரம் இரவு 10.30 மணியளவில் இருக்கும்.
மேலும் உச்சிக்காலத்தில் பொற்றாமரைக் குளத்தில் தீர்த்தம், தேவேந்திர பூஜை போன்றவை நடைபெறுகிறது.

Story first published: Thursday, May 4, 2023, 11:35 [IST]
Desktop Bottom Promotion