Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா?

Krishna Jayanthi 2026: மும்மூர்த்திகளுள் ஒருவரான மகாவிஷ்ணுவின் அவதாரங்களுள் ஒன்றான பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினம் தான் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த கிருஷ்ண ஜெயந்தியை கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்றும் அழைப்பர். இந்து மத நம்பிக்கைகளின்படி, பகவான் கிருஷ்ணர் ஆவணி மாத கிருஷ்ணபட்ச அஷ்டமி திதி மற்றும் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார். அந்த வகையில் இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 04 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது.

Krishna Jayanthi 2026 Things To Do On Krishna Janmashtami

பகவான் கிருஷ்ணர் மதுரா நகரில் உள்ள சிறைச்சாலையில் தேவகி - வசுதேவர் தம்பதிக்கு மகனாக பிறந்தார். பெரும்பாலும் அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் ஒரே நாளில் வராது. ஆனால் இந்த ஆண்டின் கிருஷ்ண ஜெயந்தி சற்று சிறப்பானது. ஏனெனில் இந்த ஆண்டு அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் ஒன்றாக வருகிறது.

இந்த கிருஷ்ண ஜெயந்தியை பெரும்பாலும் வீட்டில் குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிடுவார்கள். மேலும் கிருஷ்ணருக்கு பிடித்த அவல், வெண்ணெய் போன்றவற்றைக் கொண்டு பலகாரங்களை செய்து படைத்து பூஜை செய்து வழிபாடு செய்வார்கள். ஆனால் இன்னும் பலருக்கு கிருஷ்ண ஜெயந்தி நாளில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து சரியாக தெரிவதில்லை. எனவே வருகிற கிருஷ்ண ஜெயந்தி நாளன்று என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து காண்போம்.

வீட்டை சுத்தம் செய்யவும்

கிருஷ்ண ஜெயந்திக்கு முன்னதாக வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையை அழகாக அலங்கரித்துக் கொள்ளவும். பொதுவாக ஒரு நல்ல நாளன்று வீட்டை சுத்தம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அதுவும் வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி வருவதால், வியாழக்கிழமையே வீட்டை பெருக்கி துடைத்து சுத்தம் செய்து விட வேண்டும்.

கிருஷ்ணரின் பாதங்களை வரையவும்

கிருஷ்ண ஜெயந்தி என்றதுமே முதலில் நினைவிற்கு வருவது வீட்டில் குட்டி கிருஷ்ணர் வருவது போன்று பாதங்களை வரைவதாகவே இருக்கும். சொல்லப்போனால் கிருஷ்ண ஜெயந்திக்கு பரவலாக மேற்கொள்ளப்படும் வழக்கங்களில் இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதற்கு பச்சரிசி மாவை நீரில் கரைத்து, குழந்தை கிருஷ்ணரின் பாதங்களை வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரை கிருஷ்ணரின் பாதங்களை வரைய வேண்டும்.

கிருஷ்ணரின் போட்டோ அல்லது சிலைகளை அலங்கரிக்கவும்

கிருஷ்ண ஜெயந்தி நாளன்று வீட்டில் கிருஷ்ணரின் போட்டோக்கள் அல்லது சிலைகள் இருந்தால், அவற்றை அழகாக பூக்கள் அல்லது மாலைகளால் அலங்கரிக்கலாம். மேலும் கிருஷ்ணருக்கு பிடித்ததாக கருதப்படும் பால் பொருட்களைக் கொண்டு பலகாரங்களை செய்து படைத்து, சிறப்பு பூஜைகளை செய்து வழிபாடு செய்யலாம். ஒருவேளை உங்களால் பலகாரங்களை செய்ய நேரம் இல்லாவிட்டால், வீட்டில் ஒரு சிறிய கப்பில் வெண்ணெய், அவல் மற்றும் வெல்லத்தை வைத்து படைத்து வழிபடலாம்.

எப்போது பூஜை செய்ய வேண்டும்?

கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததார் என்பதால் வடஇந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தி பூஜைகளை நள்ளிரவு நேரத்தில் தான் செய்வார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இப்படியான வழக்கம் எதுவும் இல்லை. பெரும்பாலும் மாலை வேளையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின், கிருஷ்ணருக்கு முன் விளக்கேற்றி, பிரசாதங்களை படைத்து மனதார வழிபாடு செய்வார்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Thursday, September 3, 2026, 18:31 [IST]
Desktop Bottom Promotion