எண்ணமே சுமை!!!

By Maha

காட்டின் வழியே இரு துறவிகள் நடந்து சென்றனர். அப்போது அந்த வழியில் ஆறு ஒன்று இருந்தது. அவர்கள் அந்த ஆற்றைக் கடந்து கரைக்குச் செல்ல நீரில் இறங்கினர்.

அந்த நேரம் ஒரு இளம் பெண் ஆற்றை கடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். அவள் துறவியிடம் "என்னை மறுகரைக்கு கொண்டு சேர்க்க முடியுமா?" என்று கேட்டாள். ஆனால் அவர்களில் ஒரு துறவி மிகவும் தயங்கினார். மற்றவர் தயங்காமல், அந்த பெண்ணை தன் தோள் மீது தூக்கிச் சென்று, மறுகரையில் இறக்கினார். மறுகரை சேர்ந்ததும் அந்த பெண் துறவிக்கு நன்றி சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

அவர்களும் தங்கள் பயணத்தை தொடங்கினர். சற்று நேரம் கழித்து, உதவி செய்ய தயங்கிய துறவி மற்றொருவரிடம் "நம் புத்த மதக் கொள்கையின் படி, துறவியான பின் எந்த பெண்ணையும் தொடக்கூடாது தானே? ஆனால் நீங்கள் ஏன் அந்த பெண்ணை தொட்டு தூக்கி மறுகரையில் இறக்கினீர்? அது தவறல்லவா?" என்று கேட்டார்.

அதற்கு உதவி செய்த துறவி சொன்னார், "நான் அந்த பெண்ணை தூக்கி கரையிலேயே இறக்கிவிட்டேன். நீங்கள் தான் இன்னும் அதனை சுமக்கிறீர்கள்" என்று புன்னகையுடன் சொன்னார்.

Story first published: Tuesday, July 31, 2012, 14:00 [IST]
Desktop Bottom Promotion