பணிதல்!

By Mayura Akilan

மௌரிய சாம்ராஜ்யத்தின் மன்னர் அசோகர் வந்து கொண்டிருந்தார், அப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக பிக்ஷு மன்னரும், அவரது ஆட்களும் செல்ல வழிவிட்டு ஓர் ஓரமாக ஒதுங்கி நின்றார்.

அசோகச் சக்கரவர்த்தி அவரைப் பார்த்து விட்டார். உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புத்த பிக்ஷுவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது சிரம் துறவியின் காலில் பட்டது.

துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசீர்வதித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் சங்கடப்பட்டார். ‘ஒரு மண்டலாதிபதி ஒரு பரதேசியின் காலில் விழுவதா? அரச பாரம்பரியக் கவுரவம் எண்ணாவது?' என்ற எண்ணம் அவரை அலைக்கழித்தது.

அரண்மனை சென்றதுமே அரசரிடம் தமது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட அசோக மன்னர் சிரித்தார். அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்காமல் ஒரு விசித்திர கட்டளையைப் பிறப்பித்தார்.

"ஓர் ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை, மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்" என்று.

மன்னரின் கட்டளை அமைச்சரைத் திகைக்க வைத்தது. எனினும். அரச கட்டளையாயிற்றே! அதை நிறைவேற்ற ஏவலர்கள் நாலாபக்கமும் பறந்தனர்.

ஆட்டுத் தலை கிடைப்பதற்கு அதிகச் சிரமம் இருக்கவில்லை. ஓர் இறைச்சிக் கடையில் அது கிடைத்து விட்டது. புலித் தலைக்கு அலைந்தார்கள். அது ஓரு வேட்டைக்காரனிடம் கிடைத்தது. அன்றுதான் அவன் ஒரு புலியை வேட்டையாடியிருந்தான். மனிதத் தலைக்கு எங்கே போவது? கடைசியில் சுடுகாட்டிற்குச் சென்று ஒரு பிணத்தின் தலையை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தனர்.

மூன்றையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம் கட்டளையிட்டார்:

"சரி, இம்மூன்றையும் சந்தையில் விற்றுப் பொருள் கொண்டு வாருங்கள்."

மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவர்கள் திணறினார்கள். ஆட்டுத் தலை சிரமமின்றி விலை போனது. புலியின் தலையை வாங்க ஆளில்லை. பலர் அதை வேடிக்கைதான் பார்த்தார்கள். கடைசியில் ஒரு வேட்டைப் பிரியரான பிரபு அதனை வாங்கித் தன் வீட்டில் அலங்காரமாகப் பாடம் செய்து மாட்டி வைக்க எடுத்துப் போனார்.

மீதமிருந்த மனிதத் தலையைப் பார்த்த கூட்டம் அருவருப்புடன் அரண்டு மிரண்டு பின் வாங்கியது. ஒரு காசுக்குக் கூட அதை வாங்க யாரும் முன்வரவில்லை. அரண்மனை திரும்பிய அமைச்சர் ஆட்டுத் தலை உடனே விலை போனதையும் புலித்தலை சற்றுச் சிரமத்துடன் விலை போனதையும் மனிதத் தலையை வாங்க ஆளில்லை என்பதையும் தெரிவித்தார்.

"அப்படியானால் அதை யாருக்காவது இலவசமாகக் கொடுத்து விடுங்கள்!" என்றார் அசோகர்.

இலவசமாகக் கூட அதனை வாங்கிக் கொள்ள யாருமே முன் வரவில்லை.

இப்போது அசோக மன்னர் கூறினார்:

"பார்த்தீரா அமைச்சரே! மனிதனின் உயிர் போய்விட்டால் இந்த உடம்பு கால் காசு கூடப் பெறாது. இலவசமாகக் கூட இதை யாரும் தொடமாட்டார்கள். இருந்தும் இந்த உடம்பு உள்ளபோது என்ன ஆட்டம் ஆடுகிறது! செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது. தம்மிடம் எதுவும் இல்லை என்றுணர்ந்தவர்கள் தான் ஞானிகள். அத்தகைய
ஞானிகளை விழுந்து வணங்குவதில் என்ன தவறு? சொல்லப்போனால் அதுதான் ஞான வாயிலின் முதல் படி!" என்றார்.

Story first published: Thursday, June 28, 2012, 8:13 [IST]
Desktop Bottom Promotion