எண்ணத்தை மாற்றாதே!!!

By Maha

ஒரு ஆற்றங்கரை ஓரத்தில் துறவி ஒருவர் தியானம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியில் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞன் துறவியின் தியானத்தை கலைத்து, "நான் உங்கள் சீடராக விரும்புகிறேன்" என்று கூறினான். துறவி அவனிடம் "ஏன்?" என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞன் சிறிது யோசித்து, "நான் கடவுளைக் காண ஆசைப்படுகிறேன். ஆகவே முதலில் உங்கள் சீடர் ஆகி, கடவுளைக் காணும் வழிமுறைகளை கற்றுக் கொள்கிறேன்" என்று கூறினான்.

உடனே துறவி எழுந்து அந்த இளைஞனை ஆற்றை நோக்கி அழைத்துச் சென்று, அவன் தலையை பிடித்து சற்று நேரம் தண்ணீரில் மூழ்கும் படி செய்தார். அவனோ தண்ணீரில் மூழ்கும் போது திணறினான். பிறகு துறவி அவன் தலையை விட்டதும், அவன் தண்ணீரில் இருந்து தலையை எடுத்து, இருமினான், பின் மூச்சை இழுத்து விட்டு சுவாசித்தான்.

அவன் அமைதியானதும், துறவி அவனிடம், "இப்போது சொல், நீ தண்ணீரில் இப்போது இருக்கும் போது என்ன வேண்டினாய்?" என்று கேட்டார். அவன் அதற்கு "காற்று!" என்று கூறினான்.

"சரியாக சொன்னாய்", என்று கூறி, பின்பு அவனிடம், "உனக்கு இப்போதைய தேவை காற்று தான். எப்போது உனக்கு கடவுளைப் பார்க்க வேண்டுமோ! அப்போது என்னிடம் வா." என்று துறவி கூறினார்.

இக்கதையிலிருந்து என்ன புரிகிறதென்றால், "எண்ணம் ஒன்றே என்றால் அதனை எந்த காரணம் கொண்டும் மாற்றக் கூடாது. அவ்வாறு தேவைக்கேற்ப எண்ணத்தை மாற்றினால் எண்ணத்தை விரைவில் அடைய முடியாது" என்பது நன்கு புரிகிறது.

Story first published: Thursday, July 12, 2012, 16:51 [IST]
Desktop Bottom Promotion