மனதிற்கு இதம் தரும் வாத்து வளர்ப்பு

By Mayura Akilan

Ducks
இந்தியாவில் பரவலாக நாட்டு வகை வாத்துகள் வளர்க்கப்படுகின்றன. பல்வேறு வீடுகளில் அழகுக்காகவும் வாத்துக்களை வளர்க்கின்றனர். குறைந்த அளவு தீவனம் இருந்தால் கூட வாத்து வளர்க்க இயலும். நீரில் நீந்தும் வாத்துக்களை பார்க்கும் போதே மனதில் உற்சாகம் ஊற்றெடுக்கும். பிற பறவையினங்களைப் போல வாத்துகளை தாக்கும் நோய்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. வாத்து வளர்க்க தேவையான தொடர்செலவுகள் மற்றும் பராமரிப்பு செலவுகள் கோழியினங்களை ஒப்பிடும் போது மிகவும் குறைவு. முறையாக வாத்து வளர்ப்பை அறிந்து, அதை கடைபிடிப்பது அவசியம்.

பங்களா வாத்து

கூஸ் வாத்து என்பது வாத்து வகையை சார்ந்தது. கூஸ் வாத்து ஒரு சில இடங்களில் மடை வாத்து என்றும் பங்களா வாத்து என்றும் அழைக்கப்படுகின்றன. கூஸ் வாத்துக்கள் வேகமாகவும், மேய்ச்சலில் உள்ள புல் அதிகமாகவும், நோய் எதிர்ப்புத் தன்மை அதிகம் கொண்டவையாகவும் உள்ளது.இவற்றை பராமரிப்பதற்கு குறைந்த அளவு இடவசதி இருந்தாலே போதுமானது ஆகும்.

வளர்ப்பும் பராமரிப்பும்

இந்த கூஸ் வகை வாத்துக்கள் இறைச்சிக்காவும், அழகுக்காகவும் வளர்க்கப்பட்டு வருகின்றன. மேலும் இவை காவல்காப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கோழியை போல பண்ணை வீடோ, அதிக பராமரிப்பு செலவோ தேவையில்லை. கூஸ் வாத்தும், வாத்துக்களை போன்றே நீர் நிலைகளிலும், அறுவடை செய்த விளைநிலங்களில் உள்ள தானியங்களையும் உண்டு வாழக்கூடியது.4 முதல் 20 கூஸ் வாத்துக்களை வீட்டின் புறக்கடையில் வளர்க்கலாம். அவ்வாறு வளர்க்கும் பொழுது சமையல் கழிவுகளை தீவனமாக பயன்படுத்தலாம்.

ஜோடி வாத்துக்கள்

வாத்துக்களை ஜோடியாக பார்த்து வாங்கவேண்டும். அப்பொழுதுதான் அவை உற்சாகமாக நம் வீட்டில் வந்து வளரும். சுத்தமான தண்ணீர் அவசியம் அப்பொழுதுதான் நோய் தாக்குதல் ஏற்படாது. அவ்வப்போது தண்ணீரை சோதனை செய்து வெளியேற்றிவிட்டு சுத்தமான தண்ணீரை நிரப்பவேண்டும்.

தண்ணீர் தொட்டியில் சில நேரம் அவை உணவுகளை தேடினாலும், புல் தரையில் இறங்கியும் அவை மேய்கின்றன. எனவே வாத்துக்களுக்கு தேவையான வைட்டமின், தாதுப்பொருட்கள் நிறைந்த உணவினை அளிக்கவேண்டும்.

இளைப்பாற நிழல்

வாத்துக்கள் எப்பொழுதுமே தண்ணீரில் இருப்பதில்லை. எனவே தண்ணீரின் அருகில் நிழல் தரும் மரங்கள், புல்வெளிகளில் சிறு குடில்போல அமைத்து அவை இளைப்பாற வசதி ஏற்படுத்தலாம்.

நோய் தாக்குதல்

வாத்து காலரா, வாத்து பிளேக் போன்ற நோய்கள் வாத்துக்களை தாக்குகின்றன. இந்த நோய்களிலிருந்து வாத்துகளை பாதுகாப்பதற்கு தடுப்பூசி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். வாத்து காலராவிற்கு 3 முதல் 4 வாரத்திற்கும், வாத்து பிளேக்கிற்கு 8 முதல் 12 வாரத்திற்குள்ளும் தடுப்பூசி போடப்பட வேண்டும். நாய், பூனைகள் போன்றவைகளிடம் இருந்தும் வாத்துக்களை பாதுகாக்கவேண்டும்.

Story first published: Monday, February 20, 2012, 17:41 [IST]
Desktop Bottom Promotion