ரோஜா பூ பூக்கணுமா ? செடியோடு பேசுங்கள்

By Mayura Akilan

Rose Garden
காதலின் சின்னமாக காதலர்களின் தேசிய மலராக உள்ளது ரோஜா. ரோஜா செடிகளை வீட்டுத்தோட்டத்தில் வளர்ப்பது மிகவும் அற்புதமான மனதிற்கு இதமான செயல். ரோஜா செடிகளை நேர்த்தியாக பராமரித்தால் கொத்துக் கொத்தாய் பூக்கள் பூத்துக் குலுங்கும்.

ரோஜா செடிகளை வளர்க்க நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் அல்லது குறுமண் நிலம் ஏற்றது. பருவமழை பெய்ய ஆரம்பிக்கும் முன்னரே, 45 செ.மீ நீள, அகல, ஆழம் உள்ள குழிகளை 2.0 x 1.0 மீட்டர் இடைவெளியில் எடுத்து ஆறவிடவேண்டும். நடுவதற்கு முன்னர் குழி ஒன்றிற்கு 10 கிலோ தொழு உரம், 1.3 சதம் லிண்டேன் மருந்து 20 கிராம் மற்றும் மேல்மண் இடவேண்டும். லிண்டேன் மற்றும் இடுவதால் கரையான் மற்றும் எறும்புகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும். பிறகு வேர்பிடித்த வெட்டுத் துண்டுகளைக் குழிகளின் மத்தியில் மழைக்காலங்களில் நடவேண்டும்.

உப்புநீர் ஆகாது

நட்ட செடிகளுக்கு உடன் நீர்ப்பாய்ச்சவேண்டும். செடிகள் வேர்ப்பிடித்து துளிர்விடும் வரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறையும், பின்பு மண் மற்றும் கால நிலைகளுக்குத் தகுந்தவாறு வாரத்திற்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும். ரோஜா செடிகளுக்கு உப்புநீர் பாய்ச்சினால் செடிகள் நாளடையில் காய்ந்துவிடும். எனவே உப்புநீர் பாய்ச்சுவதைத் தவிர்க்கவேண்டும்.

ரோஜாத் தோட்டத்தில் காய்ந்த, நோயுற்ற பூச்சி தாக்கப்பட்ட கிளைகள் மற்றும் குறுக்காக வளர்ந்த கிளைகளையும் வெட்டி அப்புறப்படுத்தவேண்டும். அப்பொழுதுதான் குப்பைகள் சேருவது தடுக்கப்படும். வெட்டிய தண்டுப் பகுதிகளைப் பாதுகாக்க போர்டோபசை அல்லது பைட்டலான் பகையுடன் கார்பரில் 50 சதம் நனையும் தூள் கலந்து தடவிவிடவேண்டும்.

பூச்சித்தாக்குதல்

வீட்டு தோட்டத்தில் வளர்க்க படும் ரோஜா செடியை அவ்வப்போது பூச்சி மற்றும் நோய் தாக்க வாய்ப்புண்டு. அவ்வாறு ஏற்படும் பூச்சி மற்றும் நோயை கட்டு படுத்த விவசாயிகளால் கண்டுபிடிக்க பட்ட எளிய முறை உள்ளது. 10 கிராம் பெருங்காயத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் மீது தெளித்தால் அது பூச்சி/நோய் தாக்குதலை தடுப்பதுடன் அழகான மலரை மலர வைக்கவும் உதவும்.

ரோஜா செடியின் இலைகளில் அடிப்பாகம், இலைக்காம்பு மற்றும் பூங்கொத்துகளில் வெள்ளைநிறப்படலம் போன்று காணப்படும். இந்நோய் தாக்கப்பட்ட இலைகள் உதிர்ந்து விடும். பூ மொட்டுகள் வளராமல் நின்றுவிடும். ஒரு கிராம் மருந்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

செடியின் கிளைகளில் ஐந்து இலைகள் கொண்ட கிளைகள் மட்டுமே பூக்கும் தன்மை கொண்டவை. ஏழு இலைகள் கொண்ட கிளைகள் இருந்தால் அவற்றை அகற்றிவிடவேண்டும் ஏனெனில் அவை பூக்காது.

டீதூள், காய்கறி தோல், பழத்தோல், வெங்காயச் சருகு, முட்டை ஓடு இவற்றை நேரடியாக உரமாக பயன்படுத்தினால் பூஞ்சை ஏற்பட்டு செடி பட்டுப்போகும். எனவே அவற்றை மக்கட்செய்து உரமாக பயன்படுத்தலாம். இல்லையெனில் ஆர்கானிக் பெட்டிலைசர் கடைகளில் ரோஜாச் செடிகளுக்கு என தனி உரம் உள்ளது அவற்றை வாங்கி உபயோகிக்கலாம். செடியை சுற்றி மண்ணை கிளறிவிட்ட பின்பே உரம் இடவேண்டும். பின்னர் நன்றாக நீர் விடலாம். மண்புழு உரம் ரோஜாத் தோட்டத்தின் முக்கிய நண்பன். இது கோடை காலத்திலும் மண்ணின் ஈரப்பதத்தை தக்கவைக்கும்.

முக்கியமான விசயம் ரோஜா செடிகளில் பூக்கள் பூக்க அவற்றோடு நாம் பேசவேண்டும். செடிகளுக்கு ஆசையாய் முத்தமிட வேண்டும். கொத்துக் கொத்தாய் பூக்கள் பூக்கும்.

Story first published: Saturday, February 18, 2012, 17:26 [IST]
Desktop Bottom Promotion