வீட்டுத் தோட்டத்தில் கற்றாழை செடி வளர்ப்பு!

By Mayura Akilan

Aloe Vera
கற்றாழையானது வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்கேற்ற ஒரு மருந்துச் செடி ஆகும். பல்வேறு அழகுச் சாதனங்கள் மருந்துப் பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுகின்றது. இது வீட்டுத் தோட்டங்களில் அழகுக்காக மட்டுமின்றி முதலுதவி மருந்துப் பொருளாகவும் வளர்க்கின்றனர். இது வறட்சியைத் தாங்கி நன்கு வளரும்.

மருத்துவ குணம்

கற்றாழையின் இலையில் 'அலோயின்" 'அலோசோன்" போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. 'அலோயின்" வேதிப்பொருளின் அளவு நான்கிலிருந்து இருபத்து ஐந்து சதம் வரை இதன் இலையில் காணப்படுகிறது. சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழைச்சாறு, இருமல், சளி, குடல்புண் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகின்றது. கடும் வயிற்றுப்புண், தோலில் ஏற்படும் தீக்காயம், அரிப்பு வெட்டுக்காயங்கள் ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகின்றது. வீட்டுதோட்டத்தில் வளர்ப்பதன் மூலம் எளிதில் மருத்துவ சிகிக்சை செய்துகொள்ளலாம் என்பதால் பெரும்பாலோனோர் வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கின்றனர்.

மண் வளம் அவசியம்

வீட்டுத் தோட்டங்களில் கற்றாழை வளர்ப்பது அழகுக்காக மட்டுமின்றி மருந்துக்காகவும்தான். எனவே அவற்றை சரியான முறையில் நடவு செய்து பாதுகாப்பது அவசியம். கற்றாழையில் குர்குவா கற்றாழை, கேப் கற்றாழை, சாகோட்ரின் கற்றாழை, என மூன்று வகை உள்ளது.

கற்றாழை பயிரிட தரிசு மண், மணற்பாங்கான நிலம், பொறை மண் போன்றவை ஏற்றது. எனினும் எல்லா வகையான மண்ணிலும் கற்றாழையை சாகுபடி செய்யலாம். காரத்தன்மை 7 முதல் 83.5 வரை உள்ள மண் வகைகளில் கற்றாழை வளர்கின்றது. நல்ல வடிகால் வசதியுடன் கூடிய மணற்பாங்கான நிலம் மிகவும் ஏற்றது.

தொழு உரம் போதும்

நிலத்தை இரண்டு முறை உழுது எக்டருக்கு 10 டன் தொழு எரு இட்டு, சமன் செய்து சிறிய பாத்திகளை அமைக்கவேண்டும். செடிகள் வாளிப்பாக வளர்வதற்காக செடிக்குச் செடி மூன்று அடி இடைவெளி விட்டு நடவேண்டும். கற்றாழைச் செடிகளுக்க இராசயன உரங்கள் தேவைக்கேற்ப இடவேண்டும். வளமான நிலங்களுக்கு தொழு எரு இட்டால் போதுமானது.

தரிசு மற்றும் வளமில்லாத மண்ணிற்கு செடிகளை நட்ட 20வது நாளில் எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து உரத்தை இடுவது அவசியம். எக்டருக்கு 120 கிலோ உரத்தையும் அடியுரமாக இடுவது நல்லது. இதனால் செடிகள் நன்கு செழித்து வளரும் வீட்டுத் தோட்டம் அழகு பெருவதோடு சரும பாதுகாப்பிற்குத் தேவையான அதிக கூழ் நிறைந்த கற்றாழையும் கிடைக்கும்.

ஆரோக்கியமான செடிகள்

செடிகளை நடவு செய்யும் முன்பு தரமான செடிகளாக பார்த்து வாங்கவேண்டும். வேர்கள் சரியான முறையில் உள்ளதா? செடிகளை பூச்சிகள் எதுவும் தாக்கியுள்ளதா என்பதை பார்த்து வாங்கி நடவு செய்வது அவசியம். கற்றாழைச் செடிகளுக்கு அதிகம் தண்ணீர் தேவைப்படாது. இரு வாரங்களுக்கு ஒருமுறை தண்ணீர் விட்டால் போதுமானது. அடிக்கடி செடிகளின் வேர் பகுதிகளை கவனிக்க வேண்டியது அவசியம். அப்பொழுதுதான் நோய் தாக்குதலை கண்டறிந்து அதற்கேற்ப மருந்து தெளிக்கமுடியும். தோட்டங்களின் நடுப்பகுதியில் கற்றாழை வளர்ப்பது அழகை அதிகரிக்கும் அதனைச் சுற்றி பல்வேறு செடிகளை வளர்க்கலாம். தோட்டத்திற்கு கூடுதல் அழகு தரும்.

Story first published: Wednesday, February 15, 2012, 14:43 [IST]
Desktop Bottom Promotion