இந்த விஷயங்கள் ஒருவருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயை வரவழைக்குமாம்.. உஷாரா இருங்க...

World Cancer Day 2024: நேற்று பாலிவுட்டின் சர்ச்சை நடிகையான பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் இறந்த செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. 32 வயதான பூனம் பாண்டே ஏற்கனவே கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்கு சிகிச்சை மேற்கொண்டு வந்திருந்தார்.

இந்நிலையில் இவரது மரணத்தால் பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைக் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள ஆவல் காட்டுகின்றனர். மேலும் மருத்துவர்களும் இந்த புற்றுநோய் குறித்து ஒவ்வொரு பெண்களும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் அவ்வப்போது பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர்.

 World Cancer Day 2024: Top 7 Risk Factors of Cervical Cancer In Women In Tamil

ஆனால் தற்போது பூனம் பாண்டே தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் உயிருடன் இருப்பதாக ஒரு வீடியோவை பகிர்ந்து, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். மேலும் இப்படியான ஒரு செய்தியை வெளியிட்டதற்கு காரணம், கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் விழிப்புணர்வை ஏற்படுத்தவே செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 04 ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்படும். எனவே உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, மார்பக புற்றுநோய்க்கு அடுத்தப்படியாக பெண்களை அதிகம் தாக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் காரணிகள் எவையென்பதை கீழே பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து உஷாராகிக் கொள்ளுங்கள்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்றால் என்ன?

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பது கருப்பை வாயில் வளரும் அசாதாரண செல்களின் வளர்ச்சியாகும். கருப்பை வாய் கருப்பையை யோனியுடன் இணைக்கிறது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பொதுவாக மெதுவாகவே உருவாகும்.

கர்ப்பப்பை வாயில் புற்றுநோய் தோன்றுவதற்கு முன், கருப்பை வாயின் செல்கள் டிஸ்ப்ளாசியா எனப்படும் மாற்றங்களைச் சந்திக்கின்றன, இதில் கர்ப்பப்பை வாய் திசுக்களில் அசாதாரண செல்கள் தோன்றத் தொடங்குகின்றன. இந்த செல்கள் அழிக்கப்படாமல் இருந்தால், அது அசாதாரண புற்றுநோய் செல்களாக மாறி, மற்ற பகுதிகளுக்கும் பரவத் தொடங்கும்.

சொல்லப்போனால் இந்த வகை புற்றுநோய் அமைதியாக ஒரு பெண்ணின் கருப்பையில் வளர்ந்து, உயிரைப் பறிக்கும் அளவில் கொடியது. ஒரு பெண்ணிற்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் சில காரணிகள் உள்ளன. அதாவது, குறிப்பிட்ட பழக்கங்களைக் கொண்ட பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. இப்போது அந்த காரணிகள்/பழக்கங்கள் என்னவென்பதைக் காண்போம்.

HPV தொற்று

HPV தொற்று அல்லது மனித பாப்பிலோமா வைரஸ் தொற்று, பாலியல் ரீதியாக பரவக்கூடிய நோய்த்தொற்றாகும். இத்தொற்று கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான முக்கியமான ஆபத்து காரணியாகும். இந்த தொற்று கருப்பையில் ஒழுங்கற்ற செல்களின் வளர்ச்சியைத் தூண்டி, புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.

அதிகமாக புகைப்பிடிப்பது

ஆம், புகைப்பிடிக்கும் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. பொதுவாக புகைப்பிடித்தால் நுரையீரல் புற்றுநோய் மட்டும் தான் வரும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அப்பழக்கம் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கும். அது எப்படியென்றால், சிகரெட்டில் உள்ள நச்சுக்கள் கருப்பையில் உள்ள செல்களின் டிஎன்ஏவில் தாக்கத்தை ஏற்படுத்தி, புற்றுநோய் செல்களாக வளரச் செய்துவிடும்.

பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி

பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்ட பெண்களுக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலமானது, HPV அல்லது பிற தொற்றுக்களை எதிர்த்துப் போராட தேவையான ஆற்றல் இல்லாமல், கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.

தகாத உறவுகள்

முக்கியமாக ஒன்றிற்கு மேற்பட்டவருடன் பாலியல் தொடர்புகளை கொண்டிருக்கும் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.

அதிகமான பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள்

பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளை அதிகமாக பயன்படுத்தும் பெண்களுக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. எனவே பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளை பெண்கள் எடுக்கும் முன், மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

அதிகமாக மது அருந்துவது

தற்போது ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் அதிகமாக மது அருந்துகிறார்கள். இப்படி அதிகமாக பெண்கள் மது அருந்தினால், அது கல்லீரல் புற்றுநோயை மட்டுமின்றி, கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கும். எனவே இப்பழக்கம் இருந்தால் அதைக் கைவிடுங்கள்.

பாப் சோதனை செய்ய தவறுவது

ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின் ஆரம்ப கால கர்ப்பப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய வேண்டுமானால் சீரான இடைவெயில் பாப் சோதனைகளை செய்ய வேண்டும். ஆனால் இப்படி அடிக்கடி ஸ்கிரீனிங் செய்யத் தவறியவர்களுக்கு தாமதமான புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion