வெட்டுக்காயங்களை குணமாக்கும் சேப்பங்கீரை!

By Mayura Akilan

Yam leaves
சேப்பங்கிழங்கு இந்தியா முழுவதும் மருந்திற்காகவும், உணவிற்காகவும் பயிரிடப்படுகிறது. இதற்கு சாமைக்கிழங்கு, சேமைக்கிழங்கு, சேம்பு என பல பெயரிட்டு அழைக்கின்றனர். சேப்பங்கிழங்கில் இருந்து உற்பத்தியாகும் கீரையும் உணவாகப் பயன்படுகிறது. பொதுவாக நாம் கிழங்கை உபயோகப்படுத்தும் அளவிற்கு கீரையை பயன்படுத்துவதில்லை.

சேம்பில் ஆயிரம் வகை உள்ளது. இலையில் வடிவம், அமைப்பு ஆகியவற்றைப் பொருத்து இது வகைப்படுத்தப்படுகிறது. சேம்பு வெப்பப் பிரதேசங்களில்தான் செழிப்பாக வளர்கிறது. நீர் வசதியுள்ள பள்ளத்தாக்குகளிலும் கால்வாய் பக்கங்களிலும் இயல்பாகவே முளைத்து வளரக்கூடியது. பெரும்பாலும், ஆற்றங்கரை, ஆற்றுப்படுகை முதலிய அதிக நீர்வளம் உள்ள இடங்களில் செழிப்பாக வளரும்.

சேம்பங்கீரையும், இளந்தண்டுகளும், உணவாக சமைக்கப்படுகிறது. முதிர்ந்த இலையை விட இளந்தளிரே உண்பதற்கு ஏற்றது. சமைக்கும் போது சிறிதளவு சோடா உப்பு சேர்க்க வேண்டும். தண்டுகளை சமைக்கும் போது சிறிது புளி, எலுமிச்சை சாறு சேர்த்து சமைக்கவேண்டும். இதனால் காரல் தன்மை நீங்கும்.

வைட்டமின், தாது உப்புக்கள்

சேம்பங்கிழங்கில் புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, மாவுச்சத்தும் காணப்படுகின்றன. மேலும் கால்சியம், ஆக்ஸாலிக் அமிலம், மணிச்சத்து, இரும்புச்சத்தும் காணப்படுகின்றன.

உயிர்சத்துக்களில் வைட்டமின் ஏ, சி12 தையாமின், ரிபோஃப்ளோவின், தையாமின், நிக்கோடினிக் அமிலம் போன்றவை காணப்படுகின்றன.

இக்கீரையை தண்டோடு சேர்த்து சமைப்பது ஒருமுறை, அவ்வாறு தண்டோடு சேர்த்து சமைக்கும் போது அனைத்து சத்துக்களும் மிகுதியாக கிடைக்கின்றன.

வெட்டுக்காயம் குணமடையும்

சேம்பங்கீரை சிறந்த மூலிகையாகவும் செயல்படுகிறது. இது பலவித நோய்களை நீக்கும் ஆற்றல் பெற்றது. இந்த இலையில் சாற்றை வெட்டுக்காயங்களுக்குப் பூச விரைவில் காயங்கள் ஆறும். தசைநார்களை வேகமாக வளரச் செய்யும்.

இந்த இலையின் சாற்றினை ரத்தம் சொட்டும் இரத்தக் காயங்களின் மீது பூச இரத்தம் ஒழுகுவது நிற்கும். மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலிக்கு இதன் சாற்றைக் கொடுக்க வலி நீங்கி நிவாரணம் கிடைக்கும். கீரையையும், தண்டையும், வேகவைத்த நீரில் நெய் கலந்து கொடுக்க வயிற்றுவலி குணமாகும். காதுவலி, காதில் சீல் வடிதல், போன்றவற்றிர்க்கு கீரை சாற்றினை இரண்டொரு துளி விடலாம். இதனால் வலி நீங்கும்.

விஷக்கடி நீங்கும்

குளவி, வண்டு, பூரான் போன்ற விஷப் பூச்சிகள் கடித்த இடத்தில் இக்கீரையின் சாற்றைப் பூச நஞ்சு இறங்கி வேதனை நீங்கும்.

மூலநோய்க்கு மருந்து

சேப்பங்கீரை இலைச்சாற்றை விந்தணு பாதிக்கப்பட்ட ஆண்களுக்குத் தர விந்து கட்டும். இது மூல நோய்களுக்கு நல்ல மருந்தாகும். சேம்புக்கீரையுடன் புளி சேர்த்து சமைத்து உண்ண வெளித்தள்ளிய மூலமும் ரத்தக்கடுப்பும் நீங்கும். இந்த கீரையை சமையலில் சேர்த்துக்கொள்ள மேக சாந்தி குணமடையும். மேலும் மூலவாய்வு, மூலச்சூடு, ரத்த மூலம், மூளை மூலம் இவைகள் நீங்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Monday, January 30, 2012, 16:08 [IST]
Desktop Bottom Promotion