ஆஸ்துமா போக்கும் அம்மன் பச்சரிசி

By Mayura Akilan

இயற்கையாக மண்ணில் வளரும் பல தாவரங்கள் மூலிகைகளாகவும், மருத்துவ குணம் கொண்டவையாகவும் காணப்படுகின்றன. அவற்றை நாம் கண்டுகொள்வதில்லை. நம்முடைய பாராமுகத்தினால் மழைக்காலத்தில் அவை தானாகவே வளர்ந்து கோடை காலத்தில் வாடிப்போகின்றன. சித்தர்கள் மட்டுமே அந்த மூலிகைகளை கண்டறிந்து மருத்துவத்தில் பயன்படுத்தியுள்ளனர்.

அம்மன் பச்சரிசி எனப்படும் தாவரம் நம் வீட்டின் ஓரங்களிலும், சாலையோரங்களிலும் தானாகவே வளரும் சிறு தாவரம். இது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பகுதிகளிலும், வெப்பமண்டலப்பகுதிகளிலும் வளரும் குறுஞ்செடி. தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் விவசாய நிலங்களில் கழைச் செடியாக காணப்படும். விதை மூலம் இனப்பெருக்கம் அடைகிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

இத்தாவரத்தில் ஃபிளேவனாய்டுகள், டெர்பினாய்டுகள், அல்கனின்கள்,பினோலிக் அமிலங்கள், சிகிமிக் அமிலம் மற்றும் கோலைன் அடங்கி உள்ளன. வொன்ட்ரி அகோன்டேன்,மெரிகியல் ஆல்கஹால் யூபோஸ்டிரால்,டாராசிரால் டாராசிரோன் டைனி அடோக்சின் போன்றவை பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

குடல் பூச்சிகளை வெளியேற்றும்

பெரியம்மன் பச்சரிசி, சிற்றம்மன் பச்சரசி, சிவப்பம்மான் பச்சரிசி, வெள்ளையம்மான் பச்சரிசி,வயம்மாள் பச்சரிசி என பல வகை உள்ளன. இதன் முழுத்தாவரமும் மருத்துவ பயன் கொண்டது.

இத்தாவரத்தின் தரைமேல் உறுப்புகள் மூச்சுக்குழல் ஆஸ்துமா போக்க வல்லது. இருமல் போக்குவி, மிததுயில் தூண்டுவி. ஆங்கில அமெரிக்க மருத்துவத்தில் குடல் அமீபா நோயினைப் போக்க பயன்படுகிறது. வயிற்றுக் குடல் பூச்சிகளையும் வெளியேற்றும். இது வயிற்றுப்பூச்சி அகற்றியாகவும், மலமிளக்கியாகவும்,வெப்புத் தணிப்பானாகவும், சதை நரம்புகளில் வீக்கம் குறைப்பானாகவும், செயற்படுகிறது.

இலையை சமைத்து உண்ண வறட்சி அகலும், வாய், நாக்கு, உதடு, ஆகியவற்றில் வெடிப்பு ரணம் தீரும். இந்த இலையை அரைத்து பால் அல்லது மோரில் கலக்கிப் பெரியவர்களுக்குக் கொடுக்க வெட்டை, வெள்ளைபடுதல், மருந்துகளின் உஷ்ணம் ஆகியவைபோகும்.

தூதுவளை இலையுடன் துவையல் செய்து சாப்பிட்டால் உடல் பலப்படும்.

கீழாநெல்லியுடன் சம அளவு அம்மன் பச்சரிசி இலை சேர்த்து காலை, மதியம், இரு வேளையும் எருமைத் தயிரில் உண்ண உடம்பு எரிச்சல், நமைச்சல், மேக ரணம், தாது இழப்பு தீரும். இலையை அரைத்து ஊறலுடன் பரவுகின்ற படைகளுக்குப்பூச அவை குணமாகும்.

வயிறு நோய்கள் போக்கும்

சிவப்பு அம்மன் பச்சரிசி மூலிகைக்கு வாதம், பிரமேகம், ஆகியவற்றை போக்கும் தன்மை உண்டு. இதன் மூலம் சுக்கில தாது விருத்தியாகும். இதனை வெள்ளிபஸ்பம் என்றும் கூறுவர். இதை நிழலில் உலர்த்தி இடித்து சூரணம் செய்து வைத்துக்கொண்டு 5 - 7 குன்றுமணி எடை வீதம் மோரில் கொடுக்க குழந்தைகளுக்கு மலத்தை போக்கும், வயிறு தொடர்பான நோய்களையும் கிருமிக் கூட்டத்தையும் ஒழிக்கும்.

அம்மன் பச்சரி செடியின் பால் முகப்பரு, பால்பரு ஆகியவற்றைப் போக்கும். நக சுற்று ஏற்பட்டுள்ள இடத்தில் இதன் பாலை தடவி வர குணமாகும். கால் ஆணி வலி குறையும். இலையை நெல்லிக்காய் அளவு நன்கு அரைத்துபசும் பாலில் கலக்கிக் காலையில் மட்டும் மூன்று நாட்கள் கொடுக்கச் சிறு நீருடன் குருதிப்போக்கு, மலக்கட்டு, நீர்கடுப்பு, உடம்பு நமச்சல் ஆகியவை தீரும். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு அம்மன் பச்சரிசிப் பூவை அரைத்து கொட்டைப் பாக்களவு பாலில் கலந்து ஒரு வாரம் கொடுக்கத் தாய் பால்பெருகும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Thursday, August 25, 2011, 13:17 [IST]
Desktop Bottom Promotion