சர்க்கரை நோயாளிகளே! இந்த அறிகுறி தெரியுதா? அப்ப உங்க சிறுநீரகம் ஆபத்தான நிலையில இருக்குன்னு அர்த்தம்..

Diabetic Kidney Disease Symptoms In Tamil: சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் நிலையாகும். இந்த சர்க்கரை நோயால் உலகளவில் நிறைய பேர் அவதிப்பட்டு வருகிறார்கள். அதுவும் உலகிலேயே சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ளனர். அதுவும் 77 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு நாளுக்கு நாள் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.

இந்த சர்க்கரை நோயாளிகளைத் தாக்கும் ஒரு மோசமான பிரச்சனை தான் டயபெடிக் நெஃப்ரோபதி என்று அழைக்கப்படும் டயபெடிக் சிறுநீரக நோய். இது சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் ஒரு ஆபத்தான நாள்பட்ட நிலை. பொதுவாக இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில்லாமல் அதிகமாக இருக்கும் போது மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்துகளை நீண்ட காலமாக எடுப்பதன் விளைவாக ஏற்படுகிறது.

Diabetic Kidney Disease Symptoms In Tamil: Warning Signs Of Diabetic Kidney Disease

நமது உடலில் உள்ள சிறுநீரகங்கள் உடலில் உள்ள கழிவுப் பொருட்கள் மற்றும் உபரி திரவங்களை வெளியேற்றும் செயல்பாட்டை செய்கின்றன. ஆனால் இந்த டயபெட்டிக் சிறுநீரக நோயினால் வழக்கமான செயல்பாட்டைச் செய்யும் சிறுநீரகங்களின் திறன் பாதிக்கப்படுகிறது. ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயை திறம்பட கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதன் மூலம் இந்நோயின் அபாயத்தைத் தடுக்கலாம்.

ஒருவேளை அதிகரித்த இரத்த சர்க்கரையால் ஏற்பட்ட டயபெட்டிக் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை எடுக்காமல் இருந்தால், அதன் விளைவாக சிறுநீரகங்கள் நிரந்தரமாக செயலிழக்க நேரிடும். அதன் பின் டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படக்கூடும். சரி, சர்க்கரை நோயாளிகளுக்கு சிறுநீரக நோய் இருந்தால் எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும் என்று பலரும் கேட்கலாம். கீழே டயபெடிக் சிறுநீரக நோயின் சில எச்சரிக்கை அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சிறுநீரில் புரோட்டீன்

டயபெடிக் சிறுநீரக நோயின் ஆரம்ப அறிகுறியானது சிறுநீரில் அல்புமின் என்னும் ஒரு வகை புரதம் இருப்பதைக் கொண்டு வகைப்படுத்தப்படுகிறது. இதை ஒரு சிறுநீர் பரிசோதனையின் மூலம் கண்டறிய முடியும். பொதுவாக சிறுநீரகங்களானது சிறுநீரின் வழியே புரோட்டீனை வெளியேற்றாது. ஆனால் அந்த சிறுநீரில் புரோட்டீன் இருந்தால், சிறுநீரகங்கள் மோசமான நிலையில் உள்ளது என்று அர்த்தம்.

கால் வீக்கம்

பொதுவாக சிறுநீரகங்களினால் உடலில் இருந்து அதிகப்படியான திரவங்களை வெளியேற்ற முடியாத போது, நீர்த்தேக்கத்தால் வீக்கம் ஏற்படும். அதுவும் இந்த வீக்கங்களானது பாதங்கள், கணுக்கால் அல்லது கைகளில் ஏற்படும். இப்படி உடலில் திரவங்கள் தேங்கும் போது, அதன் விளைவாக உடல் பருமன் அதிகரிக்கும். எனவே சர்க்கரை நோயாளிகள் உடல் வீக்கத்துடன், உடல் எடை அதிகரிப்பையும் சந்தித்தால், சிறுநீரகம் ஆபத்தான நிலையில் உள்ளது என்று அர்த்தம்.

உடல் களைப்பு அல்லது பலவீனம்

டயபெடிக் சிறுநீரக நோயாளிகள் பொதுவாக கூறும் ஒரு பிரச்சனை மிகுந்த உடல் சோர்வு அல்லது பலவீனம் ஆகும். பொதுவாக இது இரத்த சோகையால் ஏற்படுகிறது. எப்படியெனில் சிறுநீரகங்களானது எரித்ரோபொய்டின் என்னும் எலும்பு மஜ்ஜையில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியைத் தூண்ட உதவும் ஹார்மோன்களை உற்பத்தி செய்வதை நிறுத்துகிறதோ, அப்போது இந்த இரத்த சோகை ஏற்படுகிறது.

உயர் இரத்த அழுத்தம்

டயபெடிக் சிறுநீரக நோயின் மற்றொரு பொதுவான அறிகுறி உயர் இரத்த அழுத்தம். எப்போது சிறுநீரகங்கள் சேதமடைந்துள்ளதோ, அப்போது உடலின் இரத்த அழுத்த ஒழுங்குமுறை அமைப்பில் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. இதன் விளைவாக உயர் இரத்த அழுத்த பிரச்சனையை சந்திக்க நேரிடுகிறது.

பசியுணர்வில் மாற்றம்

உங்களுக்கு திடீரென்று பசி அதிகமாகவும், சில சமயங்களில் பசி எடுக்காமலும் இருப்பதை உணர்ந்தால், டயபெடிக் சிறுநீரக நோய் இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் சிறுநீரகங்களில் பிரச்சனை இருந்து, அவற்றின் செயல்பாடு தடைபடும் போது, இரத்தத்தில் கழிவுப் பொருட்கள் அதிகம் தேங்கி, வாந்தி, ழுமட்டல், பசியின்மை, எடை இழப்பு போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.

தூக்கமின்மை அல்லது தூங்குவதில் சிரமம்

சிறுநீரக நோய் முற்றிய நிலையில் இருந்தால் தூக்கமின்மை அல்லது தூங்குவதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். பொதுவாக இது அமைதியற்ற கால்கள் நோய்க்குறி (RLS) உடன் சேர்ந்து சோர்வு, கால் எரிச்சல் மற்றும் மந்தமான மனநிலை போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே இந்த பிரச்சனையை அனுபவித்தால் கவனமாக இருங்கள்.

சரும வறட்சி மற்றும் சரும அரிப்பு

சிறுநீரக நோய் இருந்தால் சருமத்தில் கடுமையான அரிப்பு மற்றும் வறட்சியை சந்திக்க நேரிடும். எப்போது சிறுநீரகங்களின் செயல்பாடு குறைந்து, இரத்தத்தில் கழிவுப் பொருட்கள் மற்றும் நச்சுக்கள் அதிகம் தேங்குகிறதோ, அப்போது இந்த சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்நிலையில் இந்த அறிகுறிகளை சந்திக்கும் சர்க்கரை நோயாளிகள் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

டயபெடிக் சிறுநீரக நோய் என்பது மிகவும் ஆபத்தான நிலை. இதற்கு உடனே சிகிச்சை மேற்கொண்டு, கண்காணித்து வர வேண்டும். மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை சர்க்கரை நோய் உள்ளவர்கள் அனுபவித்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி, அவரிடம் இவற்றை தெரிவிக்க வேண்டும். அதோடு இரத்த சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் பராமரிக்க வேண்டும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Friday, March 1, 2024, 19:20 [IST]
Desktop Bottom Promotion