உங்க முகம் பொலிவிழந்து டல்லா இருக்கா? இந்த ஃபேஸ் பேக்கை நைட் டைம்-ல போடுங்க..

Face Packs To Get Rid Of Dull Skin In Tamil: தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழல் காரணமாக, வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டாலே நமது சருமத்தில் அழுக்குகள் அதிகம் சேரத் தொடங்கிவிடுகிறது. முகத்தில் அழுக்குகள் அதிகம் சேர்ந்தால், முகம் பொலிவிழந்து காணப்படுவதோடு, பலவிதமான சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே அவ்வப்போது முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்க வேண்டும்.

அதுவும் முகத்தில் சேரும் அழுக்குகளை வெறும் சோப்பு பயன்படுத்தி கழுவினால் மட்டும் போதாது, அவ்வப்போது ஃபேஸ் பேக்குகளையும் போட வேண்டும். அதுவும் கெமிக்கல் கலந்த ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்துவதற்கு பதிலாக, நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தி வந்தால், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் திறம்பட வெளியேறுவதோடு, சரும செல்களும் ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் சருமத்தின் இளமையையும் நீட்டிக்கலாம்.

Skin Care Tips In Tamil Face Packs To Brighten Dull Skin

உங்கள் முகம் பொலிவிழந்து காணப்படுகிறதா? முகப்பொலிவை மேம்படுத்த எந்த மாதிரியான நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுவது என்று தெரியவில்லையா? கீழே முகப் பொலிவை மேம்படுத்த உதவும் சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றை இரவு தூங்கும் முன் பயன்படுத்தினால், முகத்தை எப்போதும் பளிச்சென்று பிரகாசமாக வைத்துக் கொள்ளலாம்.

பழ ஃபேஸ் மாஸ்க்

முகப்பொலிவை அதிகரிப்பதில் பழங்கள் பெரிதும் உதவி புரியும். மேலும் பழங்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போடும் போது, அதில் உள்ள வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் பிற சத்துக்கள் சருமத்தின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, சருமமும் விரைவில் பொலிவு பெறும். அதற்கு நன்கு கனிந்த பப்பாளி, மாம்பழம் போன்றவற்றை சம அளவில் எடுத்து மசித்து, அத்துடன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 25-30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தி வந்தால், முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கும்.

முல்தானி மெட்டி மாஸ்க்

முல்தானி மெட்டி என்பது ஒரு வகையான களிமண். இது பழங்காலம் முதலாக சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முல்தானி மெட்டி பொடியை 2 டேபிள் ஸ்பூன் எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சிறிது ரோஸ்வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர முகம் பளிச்சென்று இருக்கும்.

கற்றாழை மாஸ்க்

இந்தியாவின் பெரும்பாலான வீடுகளில் காணப்படும் ஒரு செடி தான் கற்றாழை. இந்த கற்றாழை ஜெல்லில் சருமத்திற்கு நன்மை விளைவிக்கும் பண்புகள் அதிகம் உள்ளன. இந்த கற்றாழை ஜெல்லை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேடும். இப்படி தினமும் இரவு தூங்கும் முன் இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தினால், முகம் பிரகாசமாக இருக்கும்.

ஆலிவ் ஆயில் மாஸ்க்

ஆலிவ் ஆயில் மாஸ்க்கை பயன்படுத்தினால் கரும்புள்ளி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதோடு, சருமத்தின் நிறமும் மேம்படும். அதற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயிலை எடுத்து, பாதி எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 25 நிமிடம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் நனைத்த துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி ஒரு நாள் விட்டு ஒரு நாள் பயன்படுத்தி வந்தால், ஒரு மாதத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள்.

அவகேடோ வாழைப்பழ மாஸ்க்

உங்கள் முகம் மிகவும் பொலிவிழந்து காணப்படுகிறதா? முகப்பொலிவை விரைவில் அதிகரிக்க வேண்டுமா? அப்படியானால் அவகேடோ வாழைப்பழ மாஸ்க்கைப் போடுங்கள். அதற்கு ஒரு பௌலில் அவகேடோ பழத்தை மசித்து, அத்துடன் வாழைப்பழத்தையும் சேர்த்து மசத்து, முகத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போட முடியாவிட்டாலும், மாதத்திற்கு 2 முறை பயன்படுத்தினாலே நல்ல பலனைக் காணலாம்.

ஆரஞ்சு மற்றும் பால் மாஸ்க்

பிரகாசமான மற்றும் மென்மையான சருமத்தைப் பெற விரும்பினால், ஆரஞ்சு மற்றும் பால் ஃபேஸ் மாஸ்க்கைப் பயன்படுத்துங்கள். அதற்கு ஒரு கப் ஆரஞ்சு ஜூஸ் உடன் 1 டேபிள் ஸ்பூன் பால் பவுடர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை இந்த ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தி வந்தால், முகம் எப்போதும் பளிச்சென்று இருக்கும்.

Story first published: Sunday, March 3, 2024, 19:04 [IST]
Desktop Bottom Promotion