Latest Updates
-
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...!
நான் ஒரு 26 வயது விதவை. என் வலி யாருக்கும் புரிவதில்லை - My Story #211
நான் ஒரு 26 வயது விதவை. என் வலி யாருக்கும் புரிவதில்லை - My Story #211
சிறு வயதில் இருந்தே நான் விரும்பியது எல்லாம் எனக்கு கிடைத்தது. ஒரு வருடத்திற்கு முன்பு வரை, யாரேனும் என்னிடம் "உன் வாழ்வில் நடந்த கஷ்டத்தை பற்றி கூறு?" என கேள்விக் கேட்டிருந்தால் என்னிடம் பதில் ஏதும் இருந்திருக்காது. காரணம், நான் என் வாழ்வில் கஷ்டம் என பெரிதாக எதையும் அனுபவித்து கிடையாது.
பெரிய கஷ்டம் என்றால், எனக்கு ஸ்மார்ட் போன் வேண்டும் என்று அப்பாவிடம் அடம்பிடித்த அந்த இரண்டு நாட்களை கூறலாம். மற்றபடி நான் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்ட மகள்.
அம்மா கூறுவாள், "இப்போ உனக்கு வாழ்க்கைன்னா என்னன்னு தெரியாது, கல்யாணம் ஆகி புருஷன் வீட்டுக்கு போ... அப்பதான் தெரியும்டி உனக்குன்னு... " அப்படி அம்மா கூறும்போதெல்லாம் அப்பா சண்டைக்கு வருவார், "பெத்த மகளுக்கே சாபம் கொடுக்கிறியா" என்று. ஒருவகையில் அம்மா சொன்னது உண்மையும் கூட.
ஆனால், அப்படி கூறியதற்கு அம்மா இப்போது வருந்துகிறார். தவறு அவர் மீதில்லை. என் தலைவிதி... வேறொன்றும் சொல்வதற்கு இல்லை.

காதல் திருமணம்!
நான், என் கணவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டோம். காதலிக்க துவங்கிய போதே இருவீட்டிலும் கூறி சம்மாதம் வாங்கிவிட்டோம். பொருளாதார ரீதியாக நாங்கள் இருவருமே செட்டிலான குடும்பம் என்பதால், பெரிதாக எந்த பிரச்சனையும் எழவில்லை. வீட்டில் சம்மதம் பெற்றே ஓரிரு ஆண்டுகள் காதலித்து வந்தோம்.
பிறகு, நாங்கள் கேட்பதற்கு முன்னரே, வீட்டில் ஒரு நல்ல நாள் குறித்து எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தனர்.

பத்து மாதம்!
திருமணமான நாளில் இருந்து என் சந்தோஷம் இரட்டிப்பு ஆனது. மாமியார், மாமனார் கொடுமை எல்லாம் எதுவும் இல்லை. கணவர் என்னை அப்பாவை விடவும் அதிகம் நேசிப்பவர். அப்பாவுக்கு நான் எத்தனை செல்லமோ, அவ்வளவு செல்லம் என் கணவருக்கும். ஆனந்தத்தின் பெயரில் கூட நான் கண்ணீர் சிந்தியது இல்லை.
ஒருவேளை, நான் என் வாழ்நாளின் பெரும்பங்கை அழுது தீர்க்க வேண்டியிருக்கும் என்பதால் தான், அந்த கடவுள் என்னை திகட்ட, திகட்ட சந்தோஷத்தை அனுபவிக்க செய்தான் போல.

கார் விபத்து!
தனது இளைய சகோதரனுடன் காரில் சென்ற போது பெரும் விபத்து ஏற்பட்டது. விபத்துக்கு முழுக் காரணம் கணவரின் இளைய சகோதரன் தான். வேகமாக கார் ஓட்டி சென்றதால் ஒரு தருணத்தில் கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்துக்குள்ளானது. தம்பி காயங்களுடன் உயிர் தப்பித்துவிட்டான். என் கணவருக்கு தலையில் அடி. தீவிர சிகிச்சையில் அனுமதித்திக்கபட்டிருந்தார்.

மரணம்!
ஒரு வார காலம் மருத்துவர்கள் போராடியும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. என் காதல் துணையை திருமணமான பத்தே மாதத்தில் இழந்தேன். வாழ்வில் கஷ்டம் என்றால் என்னவென்று இப்போது கேட்டால்... நான் பி.எச்.டி படித்த அறிஞர் போல வகுப்பே எடுப்பேன். கஷ்டக் காலத்தில் உறவுகள் எப்படி எல்லாம் நம்மை தவிக்கவிடுவார்கள் என்பதை முற்றிலும் அறிந்தவள் நான்.

சத்தியம் என்ன ஆனது?
திருமணம் என்பது வாழ்நாளின் கடைசி வரை சேர்ந்திருப்பது என்று பெரியோர்கள் கூறினார்கள். எங்கள் திருமணத்தின் போது ஒருவருக்கு ஒருவர் சத்தியம் செய்தோம். வாழ்நாளின் கடைசி வரை உன்னோட இருப்பேன் என்று. அந்த சத்தியம் என்ன ஆனது?
என் வாழ்நாள் பத்தே மாதங்களில் முடிந்துவிட்டது.

பணத்தாசை!
பெற்ற மகன் விபத்தில் சிக்கி அகாலமரணம் அடைந்ததை நினைத்து வருந்தாமல், அவரது இன்சூரன்ஸ் பாலிசி, வங்கி கணக்கில் இருந்த பணம் என அனைத்தையும் என் கண் முன்னேயே கொள்ளையடித்துக் கொண்டிருந்தது என் கணவர் குடும்பம்.
அதை தட்டிக் கேட்கும் தெம்பு எனது உடலில் இல்லை. என் உலகமே காரிருள் சூழ்ந்து கிடைக்கும் போது வெறும் பணத்தை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன். பேசாமல் இறந்துவிடலாம் போல இருந்தது.

அக்கறை?
நான் பேசாமல் எனது அப்பா வீட்டுக்கே சென்றுவிடலாம் என்று இருந்தேன். ஆனால், என் மாமியாருக்கு நான் அங்கேயே இருக்க வேண்டும் என்று ஆசை. அதுவும் அவரை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தான். வேறு எதற்கும் இல்லை. அவர் உடல்நலம் கொஞ்சம் நல்லாயில்லை என்பதற்காக அவரை பார்த்துக் கொள்ள நான் அங்கேயே இருக்க வேண்டும் என்கிறார்.
அப்பா வீட்டுக்கு செல்கிறேன் என்றால், என்னை மோசமானவள் என்று கூறி திட்டுகிறார்.

யோசித்து பாருங்கள்!
அவரை பார்த்துக் கொள்ள அவரது கணவர் மற்றும் இளைய மகன் இருக்கிறான். இளைய மகனுக்கு திருமணம் செய்ய பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என் கணவர் இறந்ததால், ஒரு வருடம் ஆகட்டும் என்று காத்திருந்தனர். இன்னும் ஒருசில மாதங்களில் எப்படியும் திருமணம் நிச்சயம் நடந்துவிடும். அதன் பிறகும் நான் அங்கேயே இருந்து என்ன செய்ய?
அவர்கள் நன்கு வாழ்வதை கண்டுகளிக்க வேண்டும்.

வெறும் 26 வயது?
என் கணவர் இறக்கும் போது அவருக்கு வயது 29. நான் விதவை கோலம் ஏற்ற போது என் வயது 26. என் மனதில் எத்தனை ரணம் இருக்கும், வலி இருக்கும் என்பதை யாரும் புரிந்துக் கொள்வதே இல்லை.
நான் வருத்தமாக இருப்பதை கண்டால்... உனக்காவது வெறும் ஒரு ஆண்டு தான் பழக்கம். எங்களுக்கு பெற்று எடுத்த நாள் முதல் என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார். அப்படியான வருத்தத்தில் தான் பணத்தை சுருட்டுவதில் ஆர்வம் காட்டினார்களா?
இழப்பில் என்ன ஒரு வருடம் , 29 வருடம். நான் என் கணவனை இழந்துள்ளேன். ஒரு வருட இழப்பு என்பதால் அவர் என் கணவரல்லாமல் போய்விடுவாரா?

தகாத வார்த்தை!
என் கணவரை இழந்த பிறகு அந்த வீட்டில் என்னால் இருக்க முடியவில்லை. தொட்டதற்கு எல்லாம் தகாத வார்த்தையில் திட்ட ஆரம்பித்துவிட்டார்கள். கடந்த ஆறு மாத காலத்தில் குறைந்தது ஆயிரம் முறை என் மாமியாரின் வாய் என்னை இகழ்ந்து பேசியிருக்கும்.
இப்போதும் என் அப்பா வீட்டிற்கு கால் செய்து, என்னை அவர்கள் வீட்டுக்கு அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். பாசம், கீசம் என்று ஒன்றும் இல்லை. அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும், மருந்து மாத்திரை வாங்கி தர வேண்டும். பணிவிடை செய்ய வேண்டும் எவ்வளவு தான்.

நினைவிற்கு?
என் கணவரை நினைவுக் கூர்வதற்கு கூட அந்த வீட்டில் இருந்து நான் எதுவும் எடுத்து வரவில்லை. அவருடன் வாழ்ந்த அந்த பத்து மாத நினைவுகள் போதும் எனக்கு. அவரது உடமைகள் அனைத்தையும் (எதை எல்லாம் விற்று காசாக்க முடியுமோ) அனைத்தையும் எடுத்துக் கொண்டனர். இப்போது அவர்களுக்கு வீட்டுடன் சம்பளம் இல்லாமல் ஒரு வேலைக்காரி வேண்டும். அதற்காக மட்டுமே என்னை அழைக்கிறார்கள்.
என் கணவரையும் அவர்கள் ஒரு பணம் சம்பாதித்துக் கொட்டும் மெஷினாக தான் பார்த்துள்ளனர் என்பது இப்போது தான் எனக்கு புரிகிறது. நான் அங்கு போவதாக இல்லை.
அவர்கள் இழந்தது மகனை மட்டுமல்ல, மருமகளையும் தான்.



Click it and Unblock the Notifications











