அன்னையர் தினத்தில் அம்மாவுக்கு பிடித்ததை பரிசளியுங்கள்!

By Mayura Akilan

Mother's Day gift
வாழும் தெய்வங்களான அன்னையர்களை போற்றும் வண்ணம் ஆண்டு தோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்று கிழமை (மே 13) அன்னையர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் அன்னையர்களின் ஆசிர்வாதங்களை பெறுவது ஒவ்வொருவரின் கடமை. அவர்களுக்கு இன்று வாழ்த்து அட்டைகள், பரிசு பொருட்களை வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்து ஆசிர்வாதங்களை பெறலாம்.

உலகில் பல நாடுகளில் வெவ்வேறு தினங்களில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக அன்னா ஜார்விஸ் என்பவரால், அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியாவின் கிராம்ப்டன் நகரில் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது. இந்த நாளே பெரும்பாலான நாடுகளில் அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது.

சமுதாயத்துக்கு நல்ல மனிதர்களை உருவாக்கி வழங்குவது அன்னை தான். தீய வழியில் செல்லும் குழந்தைகளை திருத்தி நல்வழிக்கு கொண்டு வருவதும் அன்னை தான். இன்றைய தினத்தில் ஒவ்வொருவரும் அன்னையின் தியாகத்தை நினைத்து அவர்களுடன் இந்த நாளை கொண்டாடி மகிழலாம். அன்னையை சந்திக்க முடியாதவர்கள் போனில் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம். கோவிலுக்கு சென்று கடவுளை வணங்குவதை விட, நாம் இந்த உலகுக்கு வர காரணமாய் இருந்த அன்னையை இந்த நாளில் மனதார போற்றி வணங்குவோம்.

ஈன்ற பொழுதை விட தன் பிள்ளையை சான்றோன் என கேட்டால் அன்னை மகிழ்ச்சியடைவாள். குற்றவாளி என்று சொல்லக்கேட்டால் வருத்தப்படுவாள், ஆனால் பிள்ளைகளை வெறுக்கமாட்டாள். இந்த தாயுள்ளத்தை, நம்மில் எத்தனை பேர் போற்றி பாராட்டுகிறோம்? திருமணத்திற்கு பின் நிறைய பேருக்கு, தாய், தந்தையர் வேண்டாத பொருளாகி விடுகின்றனர். கர்ப்பத்தில் பத்து மாதம் பத்திரமாய் சுமந்த தாயை, முதுமையின் காரணமாக முதியோர் இல்லத்தில் விடுவது நியாயமா? என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். நம‌‌க்கு உ‌யிரை‌க் கொடு‌த்ததோடு ம‌ட்டு‌ம் அ‌‌ல்லாம‌ல், ந‌ம்மை உ‌யிரு‌க்கு‌யிரா‌ய் வள‌ர்‌‌க்கு‌ம் நமது அ‌ன்னையை, இ‌ந்த அ‌ன்னைய‌ர் ‌தின‌த்‌தி‌ல் கொ‌ண்டாட வே‌ண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

ஆண்டு முழுவதும் நமக்காக உழைக்கும் அம்மாவுக்கு அன்னையர் தினத்தன்று ஓய்வு கொடுக்கலாம். அம்மாவுக்கு முன் எழுந்து, அ‌ம்மா காலை‌யி‌ல் எழு‌ந்து செ‌ய்ய வே‌ண்டிய வேலைக‌ள், அதாவது வாச‌லி‌ல் கோல‌ம் போடுத‌ல், பா‌ல் கா‌ய்‌ச்சு‌த‌ல் போ‌ன்றவ‌ற்றை செ‌ய்து‌வி‌ட்டு அம்மாவை பூக்களோடு அல்லது பரிசுப் பொருளோடு எழுப்புங்கள்.

"வேண்டாம், வேண்டாம்", என்று அம்மா சொல்லச் சொல்ல, அவரை உட்கார வைத்து விட்டு வேலைகளை செய்யலாம். அவர் மிகவும் விரும்பும் உணவை சமைத்து பரிமாறலாம். சமை‌க்க முடிய‌வி‌ல்லை எ‌ன்றாலு‌ம் கவலை இ‌ல்லை. அவ‌ரை இரவு உணவு‌க்கு வெ‌ளியே அழை‌த்து‌ச் செ‌ன்று அ‌ல்லது அவ‌ர் ‌விரு‌ம்‌பி உ‌ண்ணு‌ம் உணவுகளை வரவழை‌த்து அவ‌ரை ம‌கி‌ழ்‌ச்‌சி‌க்கு‌ள்ளா‌க்கலா‌ம்.

அன்னையர் தினத்தில் அம்மாவுக்கு பரிசாக அவ‌ர் ‌விரு‌ம்பு‌ம் ஒ‌ன்றை அ‌ளி‌த்து ம‌கிழலா‌ம்.

என்ன பரிசு தரலாம்

அன்னையர் தினத்தைக் கொண்டாட அதிகமாக செலவழிக்க வேண்டும் என்றில்லை. அம்மா பார்ப்பது உங்கள் அன்பைத்தான் நீங்கள் எவ்வளவு செலவு செய்தீர்கள் என்பதல்ல.

பூக்களும் புடவையும்

வெகு நாட்களாக அம்மா ஏதாவது ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்கிறாரா? உங்களால் முடிந்தால் அதை வாங்கித் தரலாம். அன்னையர் தினத்தன்று அணிந்து மகிழ அம்மா விரும்பும் நிறத்தில் அவருக்கு ஒரு அழகான புடவை, சல்வார் கமீஸ் என்று ஒரு உடையை பரிசளிக்கலாம்.

பூக்களை விட சிறந்த பரிசுப் பொருள் வேறேதுமில்லை! பூக்களே உங்கள் பரிசாக இருக்கலாம். அல்லது அன்னைக்கு பிடித்த நிறத்தில் புடவையை எடுத்து உங்கள் பரிசோடு சேர்த்து பூக்களையும் தரலாம். அம்மாவுக்கு ஒரு அழகான நகை வாங்கியும் அவரை அசத்தலாம். அது தங்க நகையாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை, குறைந்த விலையில் கண்ணை கவரும் பலவகையான நகைகள் இப்போது கடைகளில் கிடைக்கின்றன.

நறுமணப்பொருட்கள்

அம்மா விரும்பும் வீட்டிற்கு தேவையான மின் சாதனம், அலங்காரப் பொருள் போன்றவற்றை பரிசாகத் தரலாம். இவ்வாறு கொடுக்கும் போது அம்மாவுக்கு மட்டும் என்று பூக்கள், வாழ்த்து அட்டை ஆகியவற்றையும் சேர்த்து தருவது முக்கியமாகும். அம்மாவுக்கு மூலிகைத் தாவரங்களை வளர்ப்பது பிடிக்கும் எனில் அவருக்கு பிடித்தமான தாவரங்களை வாங்கி பரிசளியுங்கள்.

எவ்வளவு இருந்தாலும் வாசனை பொருட்கள் பெற அனைவரும் விரும்புவர். நல்ல வாசனைப் பொருட்களை வாங்கி பரிசளித்து அன்னையை மகிழ்விக்கலாம்.

வாழ்த்து அட்டைகள்

எந்த பரிசு தந்தாலும் உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த உதவுவது ஒரு வாழ்த்து அட்டை தான். தனியாகவும் அல்லது பரிசோடும் கொடுக்கலாம். வெகு நாட்களாக அம்மா பார்க்க விரும்பும் சினிமாவுக்கு அ‌ல்லது போக வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌விரு‌ம்‌பிய கோ‌யிலு‌க்கு அழைத்துச் செல்லலாம்.

நினைவுச் சின்னங்கள்

அன்னையர் தினத்தில் அன்னைக்கு மிகவும் பிடித்த போட்டோக்களை லேமினேட் செய்து பரிசளியுங்கள். அவரது முகத்தில் சந்தோச பூக்கள் பூக்குமே.

நமக்காக நாள் முழுவதும் உழைத்து களைத்த அன்னையின் கைகளும், கால்களும் காப்பு காய்த்திருக்கும். இந்த தினத்தில் அன்னையை ‘ஸ்பா’விற்கு அழைத்துச் சென்று பெடிக்யூர், மெனிக்யூர் செய்யலாம் அன்னையின் உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி தரும்.

அன்னைக்கு பரிசு தருவதற்கு முன் அப்பாவின் உதவியை தவறாமல் பெற்றுக் கொள்ளவும்! ‌நீ‌ங்க‌ள் எ‌ன்ன செ‌ய்யலா‌ம் எ‌ன்று ‌‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்‌ளீ‌ர்க‌ள் எ‌ன்பது கு‌றி‌த்து அப்பாவிடம் தெரிவித்து விடவும். அவரிடமும் யோசனைப் பெறலாம்.

Story first published: Saturday, May 12, 2012, 10:51 [IST]
Desktop Bottom Promotion