பன்னீர் சாண்ட்விச்

By Maha

தற்போது காலை உணவுகளில் ஒன்றாகிவிட்டது சாண்ட்விச். ஏனெனில் காலையில் அவசரமாக செய்வதற்கு ஏற்றவாறு மிகவும் எளிமையாக இருக்கிறது. இத்தகைய சாண்ட்விச்சில் நிறைய உள்ளன. இப்போது அதில் ஒன்றான அனைவருக்கும் பிடித்த உணவுப் பொருளான பன்னீரைக் கொண்டு எப்படி சாண்ட்விச் செய்வதென்று கொடுத்துள்ளோம்.

இந்த பன்னீர் சாண்ட்விச்சில் உள்ள ஒரு ஸ்பெஷல் என்னவென்றால், இதில் பன்னீரைக் கொண்டு ஒரு மசாலா போன்று செய்து பின் பிரட்டில் பயன்படுத்துவது தான். சரி, அந்த பன்னீர் சாண்ட்விச்சை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Stuffed Paneer Sandwich

தேவையான பொருட்கள்:

பன்னீர் - 100 கிராம்
பிரட் துண்டுகள் - 8-10
வெங்காயம் - 2 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1/2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து 3-4 நிமிடம் வதக்கி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும். அதே சமயம் பன்னீரை துருவிக் கொள்ள வேண்டும்.

பின்பு வாணலியில் மிளகாய் தூள், தக்காளி சாஸ் சேர்த்து கிளறி, துருவி வைத்துள்ள பன்னீரை சேர்த்து பிரட்டி விட வேண்டும்.

பன்னீரானது கலவையுடன் நன்கு ஒன்று சேர்ந்த பின்னர், அடுப்பில் இருந்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து டோஸ்ட்டரை சூடேற்ற வேண்டும்.

பிறகு ஒரு பிரட்டை எடுத்து, அதில் பன்னீர் கலவையை பரப்பி, மற்றொரு பிரட்டினால் மூடி, பின் பிரட்டின் மேல் வெண்ணெயை தடவி டோஸ்ட்டரில் வைத்து, டோஸ்ட் செய்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து பிரட்டையும் டோஸ்ட் செய்ய வேண்டும்.

Story first published: Wednesday, December 11, 2013, 6:05 [IST]
Desktop Bottom Promotion