மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும்

Posted By:

Soya Chunks Potato Kurma Recipe in Tamil: வழக்கமாக சப்பாத்தி மற்றும் பூரிக்கு குருமாதான் பிரதான சைடிஷாக இருக்கும். சில சமயங்களில் சிக்கன் அல்லது மட்டன் வைத்து சைடிஷ் செய்யலாம். ஆனால் எல்லா நேரத்திலும் இவற்றையே செய்து கொண்டிருக்க முடியாது. சில சமயங்களில் புதிய சைடிஸ்களை முயற்சித்து பார்க்க வேண்டும்.

Soya Chunks Potato Kurma Recipe How to Make at Home in Tamil

புதிய சைடிஷ் என்று வரும்போது அதை மீல்மேக்கரை வைத்து முயற்சிக்கலாம். சரியான முறையில் செய்தால் மீல் மேக்கரையே அசைவ உணவுகளை விட அட்டகாசமான சுவையில் செய்யலாம். அதிலும் இந்த ஸ்டைல் சோயா கிரேவியில் உருளைக்கிழங்கு சேர்த்து செய்யப்படுவதால் இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சோயா உருளை குருமா சப்பாத்தி, பூரி மட்டுமின்றி சாதம், புலாவ் என அனைத்துடனும் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு சுவையான சோயா உருளை கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழெ சோயா உருளை கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- மீல் மேக்கர் - 1 கப்
- வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
- உருளைக்கிழங்கு - 1 (நடுத்தர அளவு)
- இஞ்சி-பூண்டு விழுது - 2 ஸ்பூன்
- தக்காளி - 1 கப் (பொடியாக நறுக்கியது)
- தயிர் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- மல்லித் தூள் - 2 ஸ்பூன்
- சீரகத் தூள் - 1/2 ஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
- கொத்தமல்லி - 2 ஸ்பூன் பொடியாக நறுக்கியது

தாளிக்க:

- எண்ணெய் - 2-3 மேசைக்கரண்டி
- சீரகம் - 1 தேக்கரண்டி
- கருப்பு மிளகு - 1/4 தேக்கரண்டி
- இலவங்கப்பட்டை - 1/2 இன்ச்
- கிராம்பு - 2

செய்முறை:

- முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிது உப்பு மற்றும் நீரை நன்கு கொதிக்கவிடவும். நீர் கொதிக்கத் தொடங்கியதும், மீல் மேக்கரைச் சேர்த்து, மிதமான தீயில் 2 முதல் 3 நிமிடங்கள் வரை வேகவிடவும்.

- பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு, பாத்திரத்தை மூடிய நிலையில் 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.

- அதன் பிறகு, நீரை வடித்துவிட்டு, சோயாவின் வாசனையை முழுமையாக நீக்க இரண்டு முறை நன்கு அலசவும்.

- சோயாவில் உள்ள அதிகப்படியான நீரைப் பிழிந்து அகற்றிவிட்டு, அவற்றை இரண்டு துண்டுகளாக வெட்டித் தனியாக எடுத்து வைக்கவும்.

- ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, சீரகம், மிளகு, இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பு ஆகியவற்றைச் சேர்த்து தாளிக்கவும்.

- சீரகம் பொரிந்தவுடன், ​​பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் சிறிதளவு உப்பை சேர்க்கவும்.

- பின்னர் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து, அதன் பச்சை வாசனை நீங்கும் வரை சில நிமிடங்கள் வதக்கவும்.

- பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி குழையும் அளவிற்கு வெந்தவுடன் மசாலாப் பொடிகள் ஒவ்வொன்ராக வரிசையாக சேர்க்கவும்.

- பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

- எண்ணெய் பிரிந்து வந்ததும் தயிரை சேர்த்து நன்கு கிளறவும். பின்னர், அவ்வப்போது கிளறியவாறு, மிதமான தீயில் மேலும் 3 முதல் 4 நிமிடங்கள் சமைக்கவும்.

- பின்னர் நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் நறுக்கிய சோயா துண்டுகளைச் சேர்த்து, நன்றாகக் கிளறவும்.

- சோயா துண்டுகள் மசாலாவை நன்கு உறிஞ்சும் வகையில், அவ்வப்போது கிளறிக்கொண்டே மிதமான தீயில் சமைக்கவும்.

- பின்னர் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, நன்கு கலந்து உப்பு சரிபார்க்கவும்.

- குக்கரை மூடி, 2 அல்லது 3 விசில் வரும் வரை வேகவிடவும். அழுத்தம் குறைந்ததும், குக்கரைத் திறந்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

- இறுதியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து நன்கு கிளறினால் சூப்பரான சோயா உருளை குருமா ரெடி!

[ of 5 - Users]
Story first published: Friday, April 24, 2026, 20:16 [IST]
Desktop Bottom Promotion