கோதுமை மாவு இல்லாமல் வெறும் ரவையைக் கொண்டே பூரி சுடலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க...

Posted By:

Rava Poori And Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி பூரி செய்வீர்களா? பொதுவாக பூரியை கோதுமை மாவு அல்லது மைதா மாவைக் கொண்டு தான் செய்வோம். ஆனால் இவ்விரண்டு மாவுகளும் இல்லாமலேயே பூரி செய்யலாம் என்பது தெரியுமா? ஆம், கோதுமை மாவு இல்லாமலேயே சுவையான பூரியை செய்யலாம். அதற்கு ரவை இருந்தால் போதும். அதோடு, அந்த ரவா பூரிக்கு வெங்காயம், தக்காளி சேர்க்காமலேயே உருளைக்கிழங்கு மசாலாவை செய்யலாம்.

உங்களுக்கு ரவா பூரியையும், வெங்காயம், தக்காளி சேர்க்காத உருளைக்கிழங்கு மசாலாவையும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த ரெசிபிக்களின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Rava Poori And Masala How To Make a Crispy Rava Poori And Potato Masala Recipe

தேவையான பொருட்கள்:

பூரிக்கு...

* வறுக்காத ரவை - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு

மசாலாவிற்கு...

* உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது)
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* பச்சை மிளகாய் - 2
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 டம்ளர்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

பூரி செய்வதற்கு...

* முதலில் மிக்சர் ஜாரில் ரவையை சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த ரவையை போட்டு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை மூடி வைத்து 5-10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, பிசைந்து வைத்துள்ள மாவை நன்கு பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பிரித்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு உருண்டையை எடுத்து, மைதா அல்லது கோதுமை மாவில் பிரட்டி, தட்டையாக பூரி அளவிற்கு தேய்த்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தேய்த்து வைத்துள்ள பூரிகளை ஒவ்வொன்றாக சேர்த்து சுட்டு எடுத்தால், சுவையான ரவா பூரி தயார்.

உருளைக்கிழங்கு மசாலாவிற்கு...

* முதலில் வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, கைகளால் கட்டிகளின்றி நன்கு பிசைந்து உதிர்த்து விட வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் வரமிளகாயை இரண்டாக கிள்ளிப் போட்டு, பச்சை மிளகாயை அப்படியே போட்டு 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் பெருங்காயத் தூள் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி, பின் உருளைக்கிழங்கை சேர்த்து மசாலா அனைத்தும் உருளைக்கிழங்கில் படும்படி நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் 1 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, கரம் மசாலா, சாட் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு மசாலா தயார்.

Image Courtesy: Reddit

[ of 5 - Users]
Story first published: Friday, March 22, 2024, 19:33 [IST]
Desktop Bottom Promotion