சத்தான.. ராகி களியும், தண்ணி சட்னியும்.. எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...

Posted By:

Ragi Kali With Peanut Neer Chutney Recipe In Tamil: உடல் பலவீனமாக உள்ளதா? காலையில் உடலுக்கு வலு சேர்க்கும்படியான காலை உணவை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் ராகி களியை செய்து, அதற்கு வேர்க்கடலை தண்ணி சட்னியை சைடு டிஷ்ஷாக செய்து சாப்பிடுங்கள். இது மழை நேரத்தில் சாப்பிட இதமாக இருப்பதோடு, உடலுக்கும் வலு சேர்க்கும். இப்படி ராகி களியை வாரம் ஒருமுறை செய்து சாப்பிட்டால், உடலும் ஃபிட்டாக இருக்கும்.

உங்களுக்கு ராகி களியையும், வேர்க்கடலை தண்ணி சட்னியையும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி களி மற்றும் வேர்க்கடலை தண்ணி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Ragi Kali How To Make a Ragi Kali With Peanut Neer Chutney

தேவையான பொருட்கள்:

ராகி களிக்கு...

* ராகி மாவு - 1 கப்
* தண்ணீர் - 1/4 கப் + 1 3/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* நெய் - 1 டீஸ்பூன்

சட்னிக்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 7
* பொட்டுக்கடலை - 1/4 கப்
* வேர்க்கடலை - 1/4 கப்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 3 பல்
* புளி - சிறிய
* தேங்காய் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு கப் ராகி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு கிண்ணத்தில் 4 டேபிள் ஸ்பூன் ராகி மாவை எடுத்து, அதில் 1/4 கப் நீரை ஊற்றி கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 3/4 கப் நீரை ஊற்றி, அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து, நீர் நன்கு சூடானதும், கரைத்து வைத்துள்ள ராகியை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* ராகியானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் மீதமுள்ள ராகி மாவை சேர்த்து, மரக்கரண்டி கொண்டு நன்கு ஒன்று சேரும் வரை கிளறி, 5 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* ராகி மாவின் நிறம் அடர் நிறத்தில் வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, மூடி வைத்து குளிர வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வெள்ளையாகும் வரை வதக்கி, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, வேர்க்கடலை, சீரகம், கறிவேப்பிலை, பூண்டு, புளி மற்றும் தேங்காய் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த சட்னியை போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்கி இறக்கி, கொத்தமல்லியைத் தூவி சிறிது நேரம் வதக்கி, சட்னியுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு கையில் நீரைத் தொட்டு, தயாரித்து வைத்துள்ள ராகி களியை கொஞ்சம் எடுத்து உருண்டையாக உருட்டி, சட்னி ஊற்றி பரிமாறினால், சுவையான ராகி களியும், தண்ணி சட்னியும் தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, December 2, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion