கிராமத்து கோழி குழம்பு

By Maha

சிக்கன் குழம்பை பலவாறு சமைக்கலாம். இப்போது அதில் ஒரு ஸ்டைலைத் தான் பார்க்கப் போகிறோம். இந்த குழம்பின் ஸ்பெஷல் சிக்கனை ஊற வைத்து, சமைப்பது தான். மேலும் இதில் தேங்காய் பால் சேர்த்து செய்வதால் இதன் சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.

சரி, இப்போது அந்த சிக்கன் குழம்பை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2 (நறுக்கியது)
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 2 இன்ச்
கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - நறுக்கியது

ஊற வைப்பதற்கு...

கரம் மசாலா - 2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

மசாலாவிற்கு...

இஞ்சி - 1/4 கப் (நறுக்கியது)
பூண்டு - 1/4 கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 6-7

செய்முறை:

முதலில் மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் சிக்கனை நீரில் நன்கு சுத்தமாக கழுவி, பின் அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி, அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலாவில் பாதியை சேர்த்து பிரட்டி 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, பட்டை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

பிறகு அதில் மீதமுள்ள மசாலாவை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி வதக்கி, ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து பிரட்டி மூடி வைத்து 30 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்.

அடுத்து அதில் தேங்காய் பாலை ஊற்றி, பச்சை வாசனை போக கொதிக்க வைத்து, கொத்தமல்லி தூவி இறக்கினால், கிராமத்து கோழி குழம்பு ரெடி!!!

Image Courtesy: yummytummyaarthi

Desktop Bottom Promotion