தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

Posted By:

Coconut Chutney Without Coconut In Tamil: நீங்கள் வேலைக்கு செல்பவரா? காலையில் பெரும்பாலும் இட்லி, தோசையைத் தான் காலை டிபனாக செய்வீர்களா? அந்த இட்லி, தோசைக்கு சட்டென்று செய்யக்கூடிய சைடு டிஷ் என்றால் அது சட்னி தான். இந்த சட்னியில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி, புதினா சட்னி, மல்லி சட்னி என பல வகைகள் உள்ளன. இதில் தேங்காய் சட்னியை பலவிதங்களில் செய்யலாம். முக்கியமாக இந்த தேங்காய் சட்னியை தேங்காய் சேர்க்காமலேயே செய்யலாம் என்பது தெரியுமா? ஆம், தேங்காய் சேர்க்காமல் தேங்காய் சட்னியின் சுவையைத் தரும் வகையில் சூப்பரான சட்னியை செய்யலாம். இந்த சட்னியை இட்லியுடன் சேர்த்து நன்கு பிரட்டி சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

No Coconut Chutney How To Make Coconut Chutney Without Coconut

இந்த நோ தேங்காய் சட்னி குறித்து காத்துவாக்குல சமையல் என்னும் இன்ஸ்டா தளத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த தேங்காய் சேர்க்காத தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் சேர்க்காத தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

`

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* பூண்டு - 4
* இஞ்சி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* பொட்டுக்கடலை - 3 ஸ்பூன்
* புளி - 1 நெல்லிக்காய் அளவு
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வரமிளகாய் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் 4 பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் பொட்டுக்கடலை மற்றும் புளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, சற்று அதிகமாக நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக சட்னியை தாளிக்க ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான தேங்காய் சேர்க்காத தேங்காய் சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, April 20, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion