தித்திக்கும் கர்நாடகா ஸ்டைல் மாம்பழ கேசரி ரெசிபி - செஞ்சு பாருங்க, டேஸ்ட் தாறுமாறா இருக்கும்

Posted By:

Karnataka Style Mango Kesari Recipe in Tamil: வீட்டில் செய்யப்படும் இனிப்புகள் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது கேசரிதான். ஆரஞ்சு நிறத்தில், நெய் மிதக்கும் கேசரி என்றால் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். கேசரி தமிழர்களின் விருந்தில் மட்டுமல்ல கலாச்சாரத்திலும் முக்கியப்பங்கு வகிக்கிறது.

Karnataka Style Mango Kesari Recipe How to Make at Home in Tamil

வீட்டில் விஷேசம், பண்டிகை, பிறந்த நாட்கள், என எது வந்தாலும் நாம் முதலில் செய்யும் ஒரு இனிப்பு ரவா கேசரிதான். கல்யாண விருந்துகளிலும் கட்டாயம் இடம் பிடித்திருக்கும் இனிப்பான கேசரியை வெறும் 3 அல்லது 4 பொருட்களை கொண்டே வெகு சுலபமாக இதை செய்து விடலாம். பொதுவாக கேசரியை நாம் ரவையை வைத்துதான் செய்வோம்.

இப்போது மாம்பழ சீசன் தொடங்கி விட்டதால் மாம்பழத்தை வைத்தும் கேசரி செய்யலாம். மாம்பழ கேசரி தென்னிந்தியாவில் குறிப்பாக கர்நாடகாவில் மிகவும் பிரபலமானதாகும். மாம்பழத்தை வைத்து கேசரி செய்வது அதன் சுவையை பல மடங்கு அதிகரிக்கும். ரவா கேசரி சாப்பிட்டு உங்கள் போரடித்திருந்தால் இந்த அவல் கேசரியை ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள்.

உங்களுக்கு சுவையான கர்நாடகா ஸ்டைல் மாம்பழ கேசரியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மாம்பழ கேசரி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- அரை கப் ரவை
- ½ கப் மாம்பழக் கூழ் (புதிய, பழுத்த மாம்பழம்)
- 1 கப் சர்க்கரை
- 1½ கப் தண்ணீர்
- ஒரு சிட்டிகை உப்பு
- கால் ஸ்பூன் ஏலக்காய்ப் பொடி
- ¼ கப் நெய்
- 10 முந்திரிப் பருப்பு

செய்முறை:

- முதலில் மாம்பழத்திலிருந்து சதைப் பகுதியை தனியாக எடுத்துக்கொள்ளுங்கள். அதன்பிறகு, அதை மிக்சி ஜாரில் சேர்த்து மென்மையாக மாறும்வரை அரைத்துக்கொள்ளுங்கள்.

- ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து, அதில் முந்திரிப் பருப்பை சேர்த்து அது பொன்னிறமாகும் வரை வறுத்துத் தனியே எடுத்து வைக்கவும்.

- பின்னர் அதே வாணலியில் மேலும் நெய் சேர்த்து அதில் ரவையைச் சேர்க்கவும்.

- மிதமான தீயில், நிறம் மாறாமல் வாசனை வரும் வரை ரவையை வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும்.

- பின்னர் ஒரு கடாயில் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

- தண்ணீர் கொதித்ததும் அதனுடன் அரைத்த மாம்பழக் கூழைச் சேர்க்கவும்.

- நன்றாக கிளறிவிட்டு, வறுத்த ரவையை அதில் சேர்க்கவும், கட்டிகள் விழாதவாறு வேகமாக கிளறவும்.

- இது கூழ் போன்ற பதத்திற்கு வந்ததும், தீயைக் குறைத்து, ரவை மென்மையாக வேகும் வரை மூடி வைத்து வேக வைக்கவும்.

- ரவை வெந்ததும் சர்க்கரை மற்றும் ஏலக்காய்ப் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். கலவை சற்று இளகி, அதேசமயம் கட்டி விழாமல் இருக்கும்படி கிளறவும். கலவை நன்கு கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.

- மீண்டும் சிறிதளவு நெய் சேர்த்து நன்றாக கிளறவும்.

- கேசரி பாத்திரத்தில் ஒட்டாமல் பிரிந்து வரும் போது வறுத்த முந்திரியை சேர்த்து கிளறி அடுப்பை அணைத்தால் சுவையான சம்மருக்கு ஏற்ற கர்நாடகா ஸ்டைல் மாம்பழ கேசரி ரெடி!

[ of 5 - Users]
Story first published: Wednesday, May 6, 2026, 17:31 [IST]
Desktop Bottom Promotion