For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பக்ரீத் ஸ்பெஷல்: செட்டிநாடு மட்டன் சாப்ஸ் குழம்பு

பக்ரீத் அன்று செட்டிநாடு மட்டன் ரெசிபியை செய்ய ரெடியாக இருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டிற்கு பக்ரீத் பண்டிகைக்கு வந்த விருந்தினர்களின் பாராட்டைப் பெற செட்டிநாடு மட்டன் சாப்ஸ் குழம்பு செய்யுங்கள்.

Posted By:
|

பக்ரீத் பண்டிகை அன்று உங்கள் வீட்டில் மட்டன் கொண்டு ஒரு அட்டகாசமான மற்றும் வித்தியாசமான ரெசிபியை உங்கள் வீட்டில் செய்ய விரும்புகிறீர்களா? உங்களுக்கு செட்டிநாடு ரெசிபிக்கள் என்றால் ரொம்ப பிடிக்குமா? பக்ரீத் அன்று செட்டிநாடு மட்டன் ரெசிபியை செய்ய ரெடியாக இருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டிற்கு பக்ரீத் பண்டிகைக்கு வந்த விருந்தினர்களின் பாராட்டைப் பெற செட்டிநாடு மட்டன் சாப்ஸ் குழம்பு செய்யுங்கள்.

Eid Al-Adha Special: Chettinad Mutton Chops Kuzhambu Recipe In Tamil

கீழே உங்களுக்காக பக்ரீத் ஸ்பெஷலாக செட்டிநாடு மட்டன் சாப்ஸ் குழம்பு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* மட்டன் - 500 கிராம்

* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்

* பச்சை மிளகாய் - 1

* சீரகம் - 1 டீஸ்பூன்

* மிளகு - 1 1/2 டீஸ்பூன்

* கடுகு - 1/2 டீஸ்பூன்

* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்

* வரமிளகாய் - 2

* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

* கிராம்பு - 4

* பட்டை - 1 இன்ச்

* பிரியாணி இலை - 1

* உப்பு - சுவைக்கேற்ப

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

ஊற வைப்பதற்கு...

* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

* உப்பு - 1 டீஸ்பூன்

* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* சீரகம் - 1 டீஸ்பூன்

* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அந்த மட்டனை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, 2-4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

* பின்னர் குக்கரில் ஊற வைத்துள்ள மட்டனைப் போட்டு, அத்துடன் சீரகம் மற்றும் வெங்காயத்தைப் போட்டு, ஒரு கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

* பின்பு மிக்சர் ஜாரில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதேப் போல் தக்காளியையும் அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், மிளகு, மல்லி, வரமிளகாய் மற்றும் கடுகு சேர்த்து குறைவான தீயில் ஒரு நிமிடம் நன்கு வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.

* பின் அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கிராம்பு, பட்டை மற்றும் பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்பு அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

* அடுத்து அதில் அரைத்த தக்காளியை ஊற்றி நன்கு எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின், அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

* பின்னர் வேக வைத்துள்ள மட்டனை நீருடன் வாணலியில் ஊற்றி கிளறி, குறைவான தீயில் 25 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும். வேண்டுமானால் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி, சுவை பார்த்து உப்பு சேர்த்து ஒருமுறை கொதிக்க வைத்து இறக்கினால், செட்டிநாடு மட்டன் சாப்ஸ் குழம்பு தயார்.

Image Courtesy: archanaskitchen

[ of 5 - Users]
English summary

Eid Al-Adha Special: Chettinad Mutton Chops Kuzhambu Recipe In Tamil

Want to know how to make a chettinad mutton chops kuzhambu during eid al adha-bakrid? Take a look and give it a try...
Desktop Bottom Promotion