வீட்டுல 1 சௌ சௌ இருந்தா.. இப்படி கடைஞ்சு சப்பாத்தியுடன் சாப்பிடுங்க.. டேஸ்ட் செமயா இருக்கும்...

Posted By:

Chow Chow Kadayal Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்திக்கு என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? சப்பாத்தி செய்ய முடிவெடுத்திருந்தால், அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசிக்கிறீர்களா?

வீட்டில் சௌ சௌ இருந்தால், அதைக் கொண்டு அற்புதமான சுவையில் கடைந்து சாப்பிடுங்கள். இந்த சௌ சௌ கடையல் சப்பாத்தியுடன் மட்டுமின்றி, இட்லி, தோசை, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.

Chow Chow Kadayal How To Make A Chow Chow Kadayal Recipe

உங்களுக்கு சௌ சௌ கடையல் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சௌ சௌ கடையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பெரிய சௌ சௌ - 1
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* கறிவேப்பிலை - சிறிது
* பூண்டு - 6 பல்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* உப்பு - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - சிறிது
* சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது)
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் சௌ சௌ காயின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் புளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் அதில் சுவைக்கேற்ப உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து துண்டுகளாக்கப்பட்ட சௌ சௌ காயை சேர்த்து கிளறி விட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, கொதிக்க ஆரம்பித்ததும், குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மத்து கொண்டு கடைந்துவிட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சோம்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து, நன்கு பொன்னிறமாக வதக்கிய பின்பு துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கி, சௌ சௌவுடன் சேர்த்து கிளறினால், சுவையான சௌ சௌ கடையல் தயார்.

Image Courtesy: The Indian Home

[ of 5 - Users]
Story first published: Monday, April 8, 2024, 19:46 [IST]
Desktop Bottom Promotion