செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..

Posted By:

Chettinad Vengaya Kosu Recipe In Tamil: உங்கள் வீட்டில் எப்போதும் காலையில் இட்லி, தோசை தான் டிபனா? இந்த இட்லி, தோசைக்கு எப்போதும் சட்னி, சாம்பார் தான் செய்வீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் வித்தியாசமான சைடு டிஷ் கேட்கிறார்களா? அப்படியானால் ஒருமுறை செட்டிநாடு வெங்காய கோசு செய்யுங்கள்.

Chettinad Vengaya Kosu How To Make Chettinad Onion Curry

காரைக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இட்லி தோசைக்கு பெரும்பாலும் இந்த சைடு டிஷ் தான் செய்வார்கள். இந்த வெங்காய கோசுவை செய்தால், வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாகவே சாப்பிடுவார்கள். அந்த அளவில் சுவை பிரமாதமாக இருக்கும். ஒருமுறை செய்தால், நீங்களே அடிக்கடி செய்வீர்கள். அந்த அளவில் செய்ய ஈஸியாக இருக்கும்.

இந்த செட்டிநாடு வெங்காய கோசு ரெசிபியை ஹேமா சுப்ரமணியன் அவர்கள் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு இந்த செட்டிநாடு வெங்காய கோசு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு வெங்காய கோசு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

மசாலா அரைப்பதற்கு...

* துருவிய தேங்காய் - 1/2 கப்
* பொட்டுக்கடலை - 1/4 கப்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கசகசா - 1 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 5
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு..

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1
* கிரம்பு - 2
* ஏலக்காய் - 2
* கல்பாசி - சிறிய துண்டு
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது)
* தக்காளி - 4 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* அரைத்த மசாலா
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் தேங்காய், பொட்டுக்கடலை, சோம்பு, கசகசா, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, 1 துண்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறி வைத்துள்ள பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* தக்காளி நன்கு வதங்கியதும், அதில் 1 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி வைத்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, 1 கப் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து 10 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* நன்கு பச்சை வாசனை போனதும், அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான செட்டிநாடு வெங்காய கோசு தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, April 28, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion