சென்னை ஸ்டைல் வடகறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்...

Posted By:

Chennai Style Vada Curry Recipe In Tamil: உங்கள் வீட்டில் இட்லி, தோசைக்கு எப்போதும் சட்னி, சாம்பார் செய்து போரடித்துவிட்டதா? சற்று வாய்க்கு ருசியாகவும், இதுவரை நீங்கள் கடைகளில் மட்டுமே வாங்கி சாப்பிட்ட ஒரு சுவையான சைடு டிஷ்ஷை வீட்டில் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் வடகறியை செய்யுங்கள்.

பொதுவாக வடகறிக்கு வடையை செய்து, பின் மசாலாவை செய்வார்கள். ஆனால் இந்த வடகறிக்கு வடையை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மாறாக அதை உதிர்த்த நிலையிலேயே வேக வைத்து கிரேவியுடன் சேர்க்க வேண்டும். இதனால் இந்த ஸ்டைல் வடகறி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். குறிப்பாக பேச்சுலர்களும் வீட்டில் இதை ட்ரை செய்யலாம்.

Chennai Style Vada Curry How To Make a Chennai Style Vada Curry Recipe

உங்களுக்கு வடகறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வடகறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கடலைப்பருப்பு - 200 கிராம்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 2
* பிரியாணி இலை - 2
* அன்னாசிப்பூ - 1
* ஏலக்காய் - 2
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 5
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் கடலைப் பருப்பை நீரில் ஒருமுறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் சோம்பு மற்றும் 3 வரமிளகாய் சேர்த்து, நீரை ஊற்றி 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 2 மணிநேரம் கழித்து, மிக்சர் ஜாரில் ஊற வைத்த கடலைப்பருப்பு, சோம்பு மற்றும் வரமிளகாயை சேர்த்து, கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்த பருப்பை சேர்த்து, 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து கிளறி, மிதமான தீயில் வைத்து, தொடர்ந்து கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* அரைத்த பருப்பானது நன்கு வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, அன்னாசிப்பூ, ஏலக்காய், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் பச்சை மிளகாயை சேர்த்து, வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து குறைவான தீயில் வைத்து கிளறி விட வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, நீர் கொதிக்க ஆரம்பித்ததும், வேக வைத்துள்ள கடலைப்பருப்பை சேர்த்து நன்கு கிளறி விட்டு, மூடி வைத்து 10 நிமிடம் குறைவான தீயில் வைத்து வேக வைத்து இறக்கினால், சுவையான சென்னை ஸ்டைல் வடகறி தயார்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion