சப்பாத்தி, பூரிக்கு இந்த பாம்பே பூரி மசாலாவை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா வேற லெவல்-ல இருக்கும்...

Posted By:

Bombay Poori Masala Recipe In Tamil: விடுமுறை நாளில் தான் உங்கள் வீட்டில் காலை டிபனாக பூரி, சப்பாத்தி என்று செய்வீர்களா? அப்படி பூரி, சப்பாத்தி செய்யும் போது, அதற்கு சைடு டிஷ்ஷாக எப்போதும் உருளைக்கிழங்கு மசாலாவைத் தான் செய்வீர்களா? அதுவும் அந்த உருளைக்கிழங்கு மசாலாயும் ஒரே சுவையில் தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை சற்று வித்தியாசமாக பாம்பே பூரி மசாலாவை செய்யுங்கள்.

இந்த மசாலாவிற்கு வெங்காயம், தக்காளி என்று எதுவுமே தேவையில்லை. உருளைக்கிழங்கு மட்டும் இருந்தாலே 10 நிமிடத்தில் சட்டென்று பூரி மசாலாவை செய்யலாம். இந்த ஸ்டைலில் மசாலா செய்தால் வழக்கமாக சாப்பிடுவதை விட இன்னும் அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கும் போது, விரும்பி சாப்பிடுவார்கள்.

Bombay Poori Masala How To Make a Bombay Poori Masala Recipe

உங்களுக்கு பாம்பே பூரி மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாம்பே பூரி மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* உருளைக்கிழங்கு - 4
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கசூரி மெத்தி - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் உருளைக்கிழங்குகளை இரண்டு துண்டுகளாக்கி, குக்கரில் போட வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, கிழங்கு மூழ்கும் அளவு நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கை ஒரு தட்டில் எடுத்து வைத்து, அதன் தோலை நீக்கிவிட்டு, உருளைக்கிழங்கை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கசூரி மெத்தியை கையால் நசுக்கி சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து, குறைவான தீயில் வைத்து பச்சை வாசனை போக கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, அத்துடன் பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி, மூடி வைத்து, 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* கிழங்கு நன்கு வெந்ததும், அதில் கொத்தமல்லியை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பாம்பே பூரி மசாலா தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, January 26, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion