கர்ப்பிணிகளுக்கு சின்னம்மை தாக்கினா உடனே கவனிங்க!

By Mayura Akilan

Chickenpox
கோடையில் அம்மைநோய் தாக்குதல் ஏற்படுவது இயல்பு. கர்ப்பிணிகள், பிறந்த குழந்தைகளையும் கூட சின்னம்மை தாக்கும் என்பதால் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை கேளுங்களேன்.

சின்னம்மை அறிகுறிகள்

வெரிசெல்லா ஜோஸ்டர் என்ற வைரசால் சின்னம்மை நோய் ஏற்படுகிறது. பாராமிக்ஸோ குடும்பத்தை சேர்ந்த ஆர்.என்.ஏ. வைரஸ் தட்டம்மையை ஏற்படுத்துகிறது.

சின்னம்மை தாக்கியவர்களுக்கு மார்பு பகுதியில் சிவப்பு நிற சிறிய கொப்பளங்கள் காணப்படும். பின்னர், மெதுவாக உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவும். காய்ச்சல், தலைவலி இருக்கும். கொப்பளங்களால் ஏற்படும் பாதிப்பு சுமார் ஒரு மாதம் வரை இருக்கும். தும்மல், இருமல் மற்றும் உடலில் ஏற்படும் கொப்பளங்களில் இருந்து வரும் நீர் போன்றவற்றால் சின்னம்மை பரவுகிறது.

உடலில் அரிப்பு, தாங்க முடியாத வலி போன்ற பிரச்னைகள் உண்டாகும். ஒரு வாரத்தில் கொப்புளங்கள் உலர்ந்து விடும். இந்த அம்மை நோய் குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தாக்கும். மேலும் கொப்புளம் குணமாகும் வரை இருமல் மற்றும் தும்மல் மூலமாக இந்நோய் பிறருக்கு பரவ வாய்ப்புள்ளது.சின்னம்மை தானாகவே குணமாகும் அல்லது தக்க மருந்துகளை பயன்படுத்தி குணப்படுத்தலாம். அம்மை நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது சிலருக்கு நிமோனியா அல்லது மூளைக்காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது.

கர்ப்பிணிகளுக்கு தாக்குதல்

கர்ப்பிணி மற்றும் பிறந்த குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் சின்னம்மை எளிதில் தாக்குகிறது. கருதரித்த பெண்களுக்கு சின்னம்மை ஏற்படும்போது கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும். குழந்தைக்கு பார்வைக் குறைபாடு, தலை சிறிதாக இருத்தல், மூளை வளர்ச்சி குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே கர்ப்ப காலத்தின் ஆரம்பத்திலேயே சின்னம்மை தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கருக்கலைப்பு செய்வது நல்லது. இல்லையெனில் கரு வளரும்போது நோய் தாக்கும் ஆபத்து உள்ளது. மேலும், குழந்தைக்கு கண்களில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். தாய்க்கு நர்வெஸ் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு முறை

சின்னம்மை எளிதில் பரவும் என்பதால் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் வருகிறது. சின்னம்மை வாழ்வில் ஒரு முறை வந்து விட்டால் மீண்டும் வர வாய்ப்பில்லை. வாழ்நாள் முழுவதும் இந்த அம்மை நோய்க்கான தடுப்பாற்றல் உடலில் ஏற்பட்டு விடும். சின்னம்மை இது வரை வராத பெரியவர்கள் மற்றும் ஒரு வயது நிறைவடைந்த குழந்தைகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

அம்மை நோயை முழுமையாக குணப்படுத்தவும், வைரஸ் கிருமிகளை அழிக்கவும் மருந்துகள் கிடையாது. அம்மை நோயால் உடலில் ஏற்படும் காய்ச்சல், உடல் வலி, அரிப்பு போன்ற பாதிப்புகளைக் குறைத்து, நோய் அறிகுறிகளைப் போக்குவதற்கான மருந்துகள் மட்டுமே உள்ளன.

வெயிலின் தாக்கத்தில் இருந்து சின்னம்மை நோய் வராமல் தடுக்க பாதுகாப்பு முறை அவசியம் சின்னம்மை தாக்கிய காலத்தில் திரவ உணவுகள் அதிகளவு எடுத்துக் கொள்ள வேண்டும். தனியறையில் ஓய்வு எடுக்க வேண்டும்.

Story first published: Wednesday, April 25, 2012, 14:55 [IST]
Desktop Bottom Promotion