பிரசவ வலியா? உடனே தயாராகுங்கள்!

By Mayura Akilan

Hospital Bag For Delivery
கர்ப்பம் உருவான நாள் முதல் பிரசவ காலம் வரை கர்ப்பிணிகள் வீட்டில் அதீத கவனத்துடன் இருப்பார்கள். பிரசவ வலி ஏற்படும்போது அவர்களுக்கு இருப்பு கொள்ளாது. அங்கும் இங்கும் நடப்பதும், வலியால் துடிப்பதும் அவஸ்தையாகிவிடும். மருத்துவமனைக்கு செல்லும் அவசரத்தில் எந்தெந்த பொருட்களை எடுத்துச்செல்வது என்று தெரியாமல் ஒருசில பொருட்களை விட்டுச் சென்று விடுவார்கள். அதை தவிர்க்க பிரசவ நாளுக்கு ஒருவாரத்திற்கு முன்பாகவே மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டிய அத்தியாவசிய பொருட்களை எடுத்துவைத்துக்கொள்வது நல்லது என்று ஆலோசனை கூறுகின்றனர் மருத்துவர்கள்.

மாற்றுத்துணிகள்

பிரசவ நேரத்தில் மருத்துவமனையில் கொடுக்கப்படும் யூனிபார்ம் நைட்டியைத்தான் போடவேண்டும். எனவே மாற்றுத்துணியாக இரண்டு செட் துணிகளை எடுத்துக்கொண்டு போனால் நல்லது. மேலும் பிரசவகாலத்தில் காட்டன் துணிகளையே அதிகம் உபயோகப்படுத்தவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

சுத்தமான உள்ளாடைகள்

பிரசவ காலத்தில் சுத்தமான உள்ளாடைகளை உபயோகிக்க வேண்டும். பேண்டீஸ் புதியவையாக இருக்கவேண்டும். அதுதான் கருப்பைக்கும் பாதுகாப்பானது என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.

அதேபோல் அதீத ரத்தப்போக்கு ஏற்படும் என்பதால் 30 அளவுள்ள காட்டன் சானிடர் நாப்கின் பையில் வாங்கி வைத்துக்கொள்வது அவசியம்.

மனதிற்கு இதமான புத்தகங்கள்

பிரசவ காலத்தில் ஒருவாரம் வரை மருத்துவமனையில் தங்க நேரிடலாம். ஒரு சிலருக்கு வலி வருவதற்கு நேரம் அதிகம் எடுத்துக்கொள்ளும். எனவே அந்த நேரத்தில் அழகான புத்தகங்களை படிக்கலாம், மனதிற்கு பிடித்த இசையை கேட்கலாம். இதனால் டென்சன் இல்லாமல் பிரசவம் ஏற்படும் என்கின்றனர்.

சுடுநீர் பை

குழந்தை பிறந்த பின்னர் சுடுநீர் பையினால் ஒத்தடம் கொடுக்கவேண்டும். பெரும்பாலான மருத்துவமனைகளில் இந்த பை கொடுக்கமாட்டார்கள். எனவே சுடுநீர் பையினை தனியாக எடுத்துக்கொண்டு போவது நல்லது.

மென்மையான துணிகள்

சுத்தமான காட்டன் துணிகளை எடுத்துச் செல்லவேண்டியது அவசியம். குழந்தை பிறந்த பின்னர் மென்மையான துணிகளை விரித்து குழந்தைகளை படுக்கவைக்க வேண்டும். எனவே குழந்தையின் சருமத்தினை பாதுகாக்கும் வகையில் உங்கள் பிரசவ பையில் மென்மையான துணிகளை எடுத்துவைக்கவும்.

பால் சங்கு அவசியம்

சுகப்பிரசவமோ, சிசேரியனோ கண்டிப்பாக பிறந்த குழந்தைக்கு தாய்பால் கொடுக்க வேண்டும். இருப்பினும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் குழந்தைக்கு தாய்பால் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டால் பால் சங்கு மூலம் குழந்தைகளுக்கு சுடுநீர், பால் போன்றவைகளை சங்கு மூலம் புகட்டலாம்.

இதுபோன்ற அத்தியாவசியமான பொருட்களை உங்கள் பைகளில் எடுத்து பத்திர படுத்தி வைத்துக்கொண்டால் பிரசவ காலத்தில் தேவையில்லாத டென்சன் ஏற்படுவதை தவிர்க்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

Story first published: Monday, April 16, 2012, 14:48 [IST]
Desktop Bottom Promotion