குட்டீஸ் வயிறு வீங்கி இருக்கா? கல்லீரல் பாதிப்பு வரலாம்!

By Mayura Akilan

Home Cures for Children's Indigestion
பெரும்பாலான குழந்தைகளுக்கு ஜீரணசக்தி கோளாறு ஏற்படுவது இயல்புதான். ஒரு சில குழந்தைகளுக்கு உண்ணும் உணவு செரிக்காமல் போவதால் வயிறு வீங்கி காணப்படும். ஊட்டச்சத்துணவுகள் கொடுத்தாலும் உடல் எழும்பும் தோலுமாக காட்சியளிக்கும்

இதற்கு முக்கிய காரணம் குழந்தைகள் சாப்பிட்ட உணவானது செரியாமை உண்டாகி குடலிலே சளியின் ஆதிக்கம் மிகுந்து கிருமிகளால் குடலில் உபாதை ஏற்படுத்தி குடலானது வீங்கி காணப்படும். இத்தகைய பாதிப்பு கொண்ட குழந்தைகளின் மலம் சளி போல் இறங்கும். சில வேளைகளில் மலச்சிக்கல் ஏற்பட்டு வயிற்றில் உள்ள வாயு அதிகப்பட்டு வயிறு பலூன் போல் ஆகிவிடுகிறது. இதற்கு பழங்கால மருத்துவ முறைகளில் மாந்தம் என்று சொல்வார்கள். மாந்தம் என்பது குடலானது செரிக்கும் தன்மையை இழந்து வயிறு பொருமி இருப்பதுதான்.

வயிற்றில் புழுக்கள்

குடலில் புழுக்கள் அதிகரித்து அவை உண்ட உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சிக் கொள்வதால், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவு ஏற்படும். வயிற்றுப் பொருமல் உண்டாகும். இந்த வயிற்றுப் புழுக்கள் வரக் காரணம் அசுத்த நீரில் விளையாடுவது, சுகாதாரமில்லாத தண்ணீரைக் குடிப்பது, அசுத்த நீரில் குளிப்பது போன்ற சுற்றுப் புற சூழ்நிலைகளாலும் குழந்தைகளுக்கு வயிற்றுப் பொருமல் வர வாய்ப்புள்ளது. இளம் வயதில் ஏற்படும் இந்த வயிற்றுப் பொருமல் குழந்தை வளர வளர மற்றொரு நோயை உண்டாக்கும். இந்த நிலையில் குழந்தையின் கல்லீரலானது சிறிதளவு பாதிப்படைந்துதான் இருக்கும்.

கல்லீரல் பாதிக்கும்

கல்லீரல் பாதிப்பினால் குழந்தைகள் சிறு வயதில் கண்ணாடி அணியும் சூழ்நிலை உருவாகும். கல்லீரலின் பாதிப்பினால் குழந்தைகளின் தன்மையைப் பொருத்து கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற நோய்கள் உண்டாகும். கண் நோய்களுக்கும், கல்லீரல் பாதிப்பு ஒரு காரணமாகிறது. உதாரணமாக கல்லீரல் பாதித்தால் கண்கள் மஞ்சள் நிறமாகக் காணப்படும்.

இந்த வயிற்றுப் பொருமல் உண்டானால் அருகில் உள்ள மருத்துவரை அணுகி கல்லீரல் பாதிப்பிற்கு மருந்து கொடுக்க வேண்டும். அதனோடு வயிற்றில் உள்ள சளியை மாற்றி உணவை செரிக்க வைக்கும் தன்மையைத் தூண்டக் கூடிய மருந்துகளைக் கொடுக்க வேண்டும். மேலும் வயிற்றுக் கிருமிக்கும் மருந்து கொடுத்து வந்தால் உண்ட உணவு நன்கு செரித்து குழந்தைகளுக்கு உண்டான வயிற்றுப் பொருமல் மாறி இரத்தத்தில் சத்துக்கள் கலந்து உடல் நலம் தேறும்.

எளிதில் ஜீரணமாகும் உணவுகள்

குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாகக்கூடிய பழரசங்களையும், மோர், போன்றவைகளையும் தினசரி இரண்டு வேளை உணவாக தரலாம். ஆரஞ்சு ஜூஸ், திராட்சை ஜூஸ் போன்றவைகளை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் அவர்களின் ஜீரணக்கோளாறுகள் சரியாகும். இதுமாதிரியான சமயங்களில் குழந்தைகளுக்கு வயிறுமுட்ட உணவு கொடுக்கக்கூடாது, அதேபோல் இரண்டு மூன்று பொருட்களை சேர்த்து குழந்தைகளுக்கு உண்ண கொடுக்கக்கூடாது என்றும் குழந்தை நல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தாயின் அரவணைப்பு

குழந்தையானது அன்பு, பாசம், பரிவு என எல்லாமலே தாயிடமிருந்துதான் எதிர்பார்க்கும். அது அல்லாமல் போகும் சமயத்தில் குழந்தை மன இறுக்கத்திற்கு ஆளாக்கப்படும். இத்தகைய மன இறுக்கம் இருந்தாலும் குழந்தைகளுக்கு நோய்களின் தாக்கம் உண்டாகும். புத்தி மந்தம், சரியாக சிந்திக்கும் தன்மையை இழத்தல், படிப்பில் போதிய கவனமின்மை, ஞாபகமின்மை போன்றவை தொடர்ச்சியாக ஏற்படும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.

Story first published: Friday, April 6, 2012, 15:01 [IST]
Desktop Bottom Promotion