உங்க குழந்தையின் நிறத்தை ரோஜாப்பூ மாதிரி மாத்தணுமா? வீட்டிலேயே அரைக்கும் இந்த பொடியை போட்டு குளிப்பாட்டுங்க...

குழந்தைகளின் உடல் எடை, வளர்ச்சி, உயரம், மற்றும் ஆரோக்கியம் என பலவற்றை பற்றிய கவலை இருந்தாலும், அவர்களின் நிறத்தை பற்றிய சிறிய நெருடலும் பெற்றோர்களிடையே இருக்கத்தான் செய்கிறது. அதற்காக பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பல்வேறு பொருட்களை பயன்படுத்துகிறார்கள்.

குறிப்பாக ரசாயனம் கலந்த சோப்பு மற்றும் ஷாம்புவை பயன்படுத்துவது போன்றவற்றால் அவர்களுக்கு சில சரும பிரச்சனைகளும் சில அரிதான சந்தர்ப்பங்களில் ஆரோக்கிய பிரச்சனைகளும் ஏற்படலாம்.

How to Increase Baby Skin Colour Naturally at Home in Tamil

இவற்றைத் தவிர்க்க நமக்கு எளிதில் கிடைக்க கூடிய சில பொருட்களை பயன்படுத்தி, குழந்தைகளின் நிறத்தை இயற்கையான முறையில் ரசாயனங்கள் இன்றி மாற்ற முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், இயற்கையாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடலின் நிறத்தை அதிகரிக்கும் குளியல் பொடி ரகசியத்தை இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பொடி 1:

எலுமிச்சை தோல் - 25 கிராம்
ஆரஞ்சு தோல் - 25 கிராம்
சாத்துக்குடி தோல் - 25 கிராம்
மாதுளை தோல் - 25 கிராம்
பப்பாளி தோல் - 25 கிராம்
வெட்டிவேர் - 50 கிராம்
வசம்பு - 50 கிராம்
ரோஜா இதழ்கள் - 50 கிராம்
கஸ்தூரி மஞ்சள் - 50 கிராம்
ஆவாரம் பூ - 50 கிராம்
வேப்பிலை - 50 கிராம்
செம்பருத்தி பூ - 50 கிராம்
துளசி இலை - 25 கிராம்
திருநீற்று பச்சிலை - 25 கிராம்
சந்தனம் - 25 கிராம்
செண்பக பூ - 50 கிராம்
மகிழம் பூ - 50 கிராம்
கசகசா - 50 கிராம்
கோரைக்கிழங்கு - 50 கிராம்
மல்லிகை பூ - 50 கிராம்

பொடி 2:

பாசி பயறு அல்லது பச்சை பயறு - 750 கிராம்
கடலைப்பருப்பு - 500 கிராம்
உளுந்து - 250 கிராம்
அரிசி மாவு - 150 கிராம்
பாதம்பருப்பு - 50 கிராம்

செய்முறை:

மேற்கூறிய பொருட்களை நன்றாக வெயிலில் சில தினங்களுக்கு உலர வைக்கவும்.
பொடி ஒன்று மற்றும் இரண்டில் இருக்கும் பொருட்களை தனித்தனியே அரைத்து காற்றுப்புகாத படி ஏர் டைட் கன்டைனரில் சேமித்து வைக்கவும்.
குழந்தைகளை குளிக்க வைக்கும் முன் பொடி ஒன்றில் இருந்து ஒரு தேக்கரண்டியும், பொடி இரண்டில் இரண்டு தேக்கரண்டியும் எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன் தயிர், பால், அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து பயன்படுத்தவும்.
குழந்தையின் சரும வறட்சியை தடுக்க குளிக்க வைத்த பின் தேங்காய் அல்லது பாதம் எண்ணையை குளித்தவுடன் தேய்த்து விடவும்.

குறிப்பு:

நீங்கள் வீட்டில் பூஜைக்கு பயன்படுத்தும் பூக்களை வீணாக தூக்கி எறியாமல் சேமித்து இதில் பயன்படுத்தலாம்.
உங்களுக்கு வீட்டில் கிடைக்காத சில பொருட்களை அருகில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்.
முடிந்தவரை உங்கள் வீட்டின் அருகில் கிடைக்கும் பொருட்களை சேகரித்து பயன்படுத்துங்கள். கிடைக்காதவற்றை தவிர்த்துவிட்டு மீதம் உள்ளவற்றை கொண்டு பொடி தயாரித்து பயன்படுத்துங்கள்.

குழந்தைகளின் நிறத்தை காரணம் காட்டி யாரும் அவர்களை ஒதுக்கிவிடப் போவதில்லை. அதற்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களை ரசாயனங்களின் பிடியில் தள்ளுவதை காட்டிலும், வீட்டில் இயற்கையாக இது போன்ற குளியல் பொடியை தயாரித்து பயன்படுத்துவது சிறந்தது.

Story first published: Tuesday, June 11, 2024, 18:00 [IST]
Desktop Bottom Promotion