கன்னி ராசிக்காரர்களுக்கு விளம்பி வருடம் எப்படி இருக்கப்போகிறது?...

2018 ஆம் ஆண்டு சித்திரை முதல் தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் விளம்பி வருடமாகப் பிறக்கிறது. அதில் கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கப்போகிறது என்று பார்ப்போம்.

உத்திரம் 2, 3, 4ம் பாதங்கள், ஹஸ்தம், சித்திரை, 1, 2ம் பாதங்கள் ஆகிய நட்சந்திரங்களில் பிறந்த கன்னி ராசி நேயர்களுக்கு இந்த ஏப்ரல் 14 ஆம் தேதி சனிக்கிழமை பிறந்திருக்கிற விளம்பி வருடம் எப்படி இருக்கப்போகிறது என்று பார்ப்போம்.

கன்னி ராசிக்காரர்களுக்கு வரப்போகும் தமிழ் புது வருடமான விளம்பி ஆண்டு நல்ல பலன்களைத் தருவதாகவும் கடந்த ஆண்டு உங்களுடைய வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்த பின்னடைவுகளை நீக்கி நல்ல பலன்களைத் தருவதாகவும் இருக்கும். குறிப்பாக சென்ற வருடம் பொருளாதாரச் சிக்கல்களை சந்தித்தவர்கள் தற்போது அது நீங்கப் பெறுவீர்கள்.

tamil new year 2018

வேலையில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு வேலை மாற்றம், வெளியூர் மாற்றம், மாற்றத்தினால் உண்டாகும் பதவி உயர்வு போன்றவைகள் உண்டாகும். தொழில் அதிபர்கள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு மாற்றங்களுடன் கூடிய நல்லவிதமான திருப்பங்கள் ஏற்படும்.

இளைஞர்கள் இதுவரை இருந்து வந்த ஏமாற்றத்திலும் மன அழுத்தத்திலும் இருந்து விடுபடுவீர்கள். இந்தப் புது வருடம் உங்களுக்கு யோகத்தைத் தரும். அதோடு இதுவரை இருந்து வந்த மனக்குழப்பங்களையும் காரியத் தடைகளையும் துரதிர்ஷ்டங்களையும் விரட்டியடிக்கும். வேலை, திருமணம் போன்றவைகள் நல்லபடியாக அமைந்து செட்டிலாகாத இளைய பருவத்தினருக்கு திறமைக்கேற்ற வேலையும் விரைவில் திருமணம் நிச்சயமும் நடக்கும்.

வியாபாரிகளுக்கு லாபம் இருக்கும் என்பதால் குறை சொல்ல எதுவும் இல்லை. வருமானத்தில் எந்தவித குறைவும் இருக்காது. நான்கில் சனி அமர்ந்து பத்தாமிடத்தைப் பார்ப்பதால் சொந்தத்தொழில் செய்பவர்கள் சற்று நிதானத்துடனும் கவனத்துடனும் இருப்பது நல்லது.

அர்த்தாஷ்டமச் சனி நடப்பதால் அரசு, தனியார்துறை பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாகவோ கவனக் குறைவாகவோ இருக்க வேண்டாம். எவ்வளவு நெருங்கியவராக இருந்தாலும் அடுத்தவர்களை நம்ப வேண்டாம்.

கேது ஐந்தில் இருப்பதால் சிலருக்கு கோவில் பணிகளில் ஈடுபடும் பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை இப்போது போக முடியும். புண்ணியத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு இப்போது உண்டாகும். குடும்பத்துடன் குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள்.

சிலர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத் துணையை இப்போது சந்திப்பீர்கள். இளைய பருவத்தினருக்கு காதல் வரும் நேரம். சிலருக்கு மனம் விரும்பிய வாழ்க்கை கிடைக்கும். காதலர்களுக்குப் பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். தொழில், வியாபாரம் வேலை மற்றும் இருப்பிடங்களில் இட மாற்றம் ஏற்படும். வெளிநாட்டுத் தொடர்புகள் வலுப்பெறும். உங்களில் சிலர் வெளிநாட்டுப் பயணம் செய்வீர்கள். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தற்போது வேலை கிடைக்கும்.

சிலருக்கு மறைமுக வழியிலான தனலாபம் உண்டாகும். பணத்திற்கு பஞ்சம் இருக்காது. யார் வீட்டு பணமாக இருந்தாலும் உங்கள் கையில் தாராளமாக நடமாடும் என்பதால் பணச்சிக்கல் வராது. கொடுக்கும் வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள்.

வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் உங்களுக்கு கை கொடுக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக விசா கிடைக்கும். இதுவரை வெளிநாடு செல்லாதவர்கள் இப்போது வெளிநாட்டுப் பயணம் செல்லும்படி இருக்கும். பயணங்கள் மூலம் நன்மைகள் இருக்கும்.

வீட்டில் குழந்தைகளின் உடல் நலத்தில் அக்கறையும், கவனமும் தேவை. சிறு குழந்தைகளுக்கு சாதாரண உடல்நலக் குறைவு என்றால் கூட அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சைக்குச் செல்வது நல்லது. இதுவரை போகாத ஊர்களுக்கு செல்வீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

தந்தைவழி உறவினர்களிடம் நெருக்கம் உண்டாகும். இதுவரை இருந்து வந்த பங்காளிப் பிரச்னைகள் தீரும். பூர்வீக சொத்துக்களில் உங்கள் பாகம் சேதமில்லாமல் உங்களுக்கு கிடைக்கும். பெரியப்பா சித்தப்பாக்கள் மற்றும் தந்தையுடன் பிறந்த அத்தைகளால் லாபம் இருக்கும். தந்தையிடமிருந்து ஆதாயம் கிடைக்கும். மூத்த சகோதரர், சகோதரிகளின் உறவுகள் மேம்படும்.

வயதான தாயாரை நன்கு கவனியுங்கள். அவரின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள். தாயாரை விட்டு விலகி தூர இடங்களில் வசிப்பவர்கள் மாதம் ஒரு முறையாவது அவரைப் போய் பார்த்து அவரின் ஆசீர்வாதங்களை பெற்று வருவது நல்லது. பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். அவர்களின் கல்வியில் முன்னேற்றங்கள் இருக்கும்.

இதுவரை கருத்து வேற்றுமைகளாலும், குடும்பச் சிக்கல்களினாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்கி குவிப்பீர்கள். சொத்துச் சேர்க்கை இருக்கும். பிள்ளைகளின் பெயர்களிலோ மனைவியின் பெயரிலோ ஏதேனும் சொத்து வாங்க முடியும். பிள்ளைகளின் திருமணத்திற்கு நகை வாங்கி சேமிக்கலாம். இதுவரை இருந்துவந்த கடன் தொல்லை தீரும்.

பெண்களுக்கு இந்த வருடத்தில் நல்ல பலன்கள்தான் அதிகம் இருக்கும். குடும்பத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் இருக்கும் சேமிப்பு செலவழிந்து உங்கள் பாடு திண்டாட்டமாகலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தள்ளிப் போய் இருந்த பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும்.

சுப கிரகமான குருபகவான் மூன்றாமிடத்திற்கு மாறப் போவதால் உங்களில் சிலர் தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு பெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள். தேவையற்றவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது கூடாது. பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட செயல்களால் கெடக்கூடும் என்பதால் செய்யும் செயல்களில் கவனமாக இருப்பது நல்லது.

Story first published: Saturday, April 14, 2018, 15:07 [IST]
Desktop Bottom Promotion